Sonntag, Juli 22, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - நூல் விமர்சனம்-5

இன்றைய தலைமுறைக்குப் புலிகளது கருத்தியலும்,அவர்கள் வழியான போராட்டமுமே தெரிந்ததுபோல புஸ்பாரசா-புஸ்பராணி குடும்பத்தவர்கள் அவிழ்க்கும் "போராட்டவாழ்வு" மட்டுமே தெரிந்தவர்களாக நாளைய தலைமுறை மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஏனெனில்,இத்தகையவர்களது பின்னே இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் தமது அரசியல்-பொருளாதார நலன்களைக் கொண்டியங்குகின்றன. இலங்கை-இந்திய ஒடுக்கப்படும் இனங்களை அவர்களுக்குள்ளிருக்கும் பதவி-புகழ் கொண்ட சின்னத்தனமிக்கவர்களைக்கொண்டே இந்த ஆளும் வர்க்கம் கருத்தியல்ரீதியாகப் பிழையான பாதைகளைக் காட்டித் தொடர்ந்தழித்துவருகிறது.உலகம் பூராகவும் இது தொடர்கதையாவதை நீங்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அறிந்கொண்டே வருகிறீர்கள்.

தமிழீழப் போராட்டமென்பது அதன் உச்சமான-பிழையான பாதைகளிலொன்றென்பது தற்போது நிரூபணமானபோது நமது மக்களில் மூன்று இலட்சம்பேர்கள் அழித்தொழிக்கப்பட்டும், அவர்களது வாழ்வாதாரம் சிதறடிக்கப்பட்டதுமல்லாது இலங்கையின் முழுமொத்தச் சமுதாயத்தையுமே அதிகார வர்க்கத்தால் ஒடுக்கும் நிலைக்குள்ளானதை  இந்தத் தலைமுறை அறிந்துகொண்டது. அதைக்கூடத் தவறான முறைகளில் விளக்கி ,மீளப் பிரபாகரனுக்குப் பதில் அவரது மகள் துவாராக வழிகாட்டியாக மாறிக்கொள்வரென்றும், அவரது வரவுக்காக இளைஞர்கள் காத்திருப்பதாகவும் வீன் பல்கலைக்கழகத் தமிழ் மாணவனொருவன் கருத்துக்கட்டுகிறானென்றால் அவன் பின்னே இருக்கும் சக்தி, இந்த ஆளும் வர்க்த்தின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டிருக்கிறதென்றே பொருள்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கையுள் ஒடுக்குமுறைகுட்படும் சிறுபான்மைச் சமுதாயங்கள் தமது விலங்கை ஒடிப்பதென்பது பெரும்பகுதி சிங்கள மக்களது வர்க்க விடுதலையோடு சம்பந்தப்பட்டதா இல்லையாவென்பதுகூட ஒருகட்டத்தில் கேலிக்குரியதாகப் பேசப்படுகிறது.

இந்தியத் துணைக் கண்டமானது தனது பிராந்தியச் சந்தைவாய்ப்பை இப்போது நம்பிக்கொண்டதல்ல.அது ஆபிரிக்காவரை விரித்துக்கொண்ட அதிகாரமானது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோவொரு முறைமகளோடு அந்தந்தத் தேசியவினங்களது அரசியல்-பொருளாதார வாழ்வோடு இணக்கம்-பகையெனப் பண்புகளை அரசியலூடாக நகர்த்தும்போது ஆங்காங்கே, அந்த மக்களது எதிர்காலத்தைத் தீருமானிப்பவர்களாக மாறுகிறார்கள்.இலங்கை வாழ் மக்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் தொடர்தியங்கும் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கமானது இன்றுரைக்கும் பொய்மையான போராட்ட வரலாற்றுக்கெதிரான பக்கத்தை நாம் கண்டடைய வேண்டும்.




"ஈழப்போராட்டத்தில்"சாட்சியம் கூறும் நபர்களும்,அகாலம் உரைக்கும் அம்மணிகளும் அணிதிரளும் சந்தர்ப்பமானது ஆளும் வர்க்கத்தின் அதீதமான உந்துதலது விளைவென்பதைத் தொடர்ந்து கவனிப்பவர்கள்-வரலாற்றைப் புரிய முற்படுபவர்கள் கண்டடைவர்.

இதைத் தவிர்த்துவிட்டு,சாட்சியம் சொல்பவர்களது தனிநபர்களைச் சுற்றிய கருத்துக்கட்டல்களை-அவர்களது பாமரத்தனமான போராட்ட அநுபவங்களைக் குறித்து எந்தவிதமான கேள்விக்கும் இடங்கொடாது செரித்துக்கொள்வது தற்கொலைக்கொப்பானது.

ஒரு தலைமுறையையே அழித்தொதுங்கிய"தமிழீழப் போராட்டம்"என்பதைத் தீர்மானித்தியக்கிவர்கள் ஒருவினத்தையே அடிமைகொண்டழிப்பதில் தொடர்ந்து இணைந்து செயற்பாட்டோடிருக்கும் இன்றைய சூழலிற்றாம் இலங்கைத் தேசமெங்கும் அடையாள அழிப்பும்,சிங்கள மயப்பட்ட பண்பாட்டுச் சுட்டல்களும்-சேர்ப்புகளும்,மறுபடைப்பாக்கமும் நிகழ்கிறது.

இதற்குடந்தையான அரசியலை முன்தள்ளும் இத்தகைய "சாட்சியம்"கூறும் நபர்கள்,அதற்குத் தலையங்கம்-பொழிப்புரை செய்யும்வலதுசாரி-"இடதுசாரி"ப் புரவலர்களும் நாளாந்தம் புத்தக வெயியீடு-அறிமுகவுரை என்று போடும் முடிச்சுகள் நமது வரலாற்றைப் பிழையாகக் கற்பித்தொடுக்கும் தந்திரத்தோடு ஆளும் வர்க்கங்களுக்கு நம்மைக் காட்டிக்கொடுத்து ஒடுக்குவதே!

இதைப் புரிவதென்பது கடினமான பணி.

அந்தப்பணியுட்தாம் இந்த விமர்சனமானது தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முனைகிறது.தொடர்ந்து உள்வாங்குவோம் நண்பர்களே-இதைத்தவிர வேறெதுவும் இப்போதைக்கு இல்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
22.07.12



ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - நூல் விமர்சனம்-5
 

5:


மக்களால் இவர்கள் காட்டித்தரப்படும் நிலை இருந்ததென்றால் அவர்கள் எவ்வளவு அறியப்படாதவர்களான அரசியலைக் கொண்டிருந்திருக்க வேண்டும்?:


"எதிர்வரும் இரண்டு பத்துவருடங்கட்கு ஈழப்போராட்டம் பற்றிய நூல்கள் மதிப்பீடுகள் பெருமளவு வெளிவரும் காலமாக இருக்கும். இங்கு புஸ்பராசாவின் எழுத்துக்கள் சகல திசைகளிலும் திரும்ப திரும்ப விமர்சனத்திற்கும், ஆய்விற்கும் வருவதை தடுக்க முடியாது. இது சார்ந்த வரலாற்றுணர்வு அவரிடம் செயற்படவில்லை, போதிய கவனத்துடன் இவை எழுதப்படவில்லை, இதற்கு புஸ்பராசாவின் வலதுசாரித் தமிழ் அரசியல் மதிப்பீடுகளும் கட்டாயமாகத் தடையாக இருந்தன. அவர்காலத்தில் அவருடன் சிறையிலிருந்த, அரசியல் நண்பர்கள், முக்கிய அரசியல்கைதிகள், ஜே.வி.பி யினர், தனிப்பட்ட நட்பு பேணியோர் என்று அவர் விபரிக்க ஏராளமான தேவையிருந்தது. சிறைவாழ்வில் தமது இலட்சியம் தொடர்பான எத்தகைய உறுதியை புஸ்பராசா கொண்டு இருந்தார் என்பது கூட வாசிப்பவர்களுக்கு தட்டுப்பட்டிராது, ஆனால் தான்மாத்திரம் அனுபவித்த சித்திரவதைகளை, பொலிஸ் இராணுவ துன்புறுத்தல்களை ஓரளவு எழுத்தில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளார்."-தமிழரசன்



பொலிஸ் தேடுதல், உதவியற்றநிலை, உணவு, பணம் இவைகளைப் பெறுவதற்கான போராட்டம் இந்த நிலைகளிலேயே கோப்பாய் வங்கியைக் கொள்ளையிடவும் அதன் பின்பு இந்தியா செல்லவும் சிவகுமாரன் திட்டமிட்டான். தலைமறைவு இளைஞர்களுக்கு பணம் இருக்கவில்லை. கூட்டணி, தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடம் இவர்கள் ஒழிந்து வாழவும் உதவி பெறவும் திரும்பத் திரும்பச் சென்றனர். பொதுவாகவே கூட்டணி தொடர்பானவர்கள் எளிதாகவே பொலிசாரின் பார்வையில் இருந்தனர். இளைஞர்களுக்கு மக்களுடனான தொடர்புகள் இருக்கவில்லை. கூட்டணியினரின் அற்ப உதவிகள் அவர்களை பாதுகாக்கவும் முடியவில்லை. மக்களோடு மக்களாய் கரைந்து தம்மைப் பாதுகாக்கும் வாய்ப்புகளிருக்கின்றதா என்பதனைச் சிந்தித்துப்பார்க்கும் நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை. கூட்டணியினரின் அற்ப உதவிகள் அவாகளை பாதுகாக்க முடியவில்லை. சிவகுமாரனின் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி அவர்கள் தப்பி பிழைக்கும் கடைசி முயற்சியாக இருந்தது. சிவகுமாரனுடன் உரும்பிராய் மகேந்திரன், ஜீவராசா, பிரான்சிஸ் ஆகியோர் கோப்பாய் கிராமிய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்கட்கு சரியாக கார் ஓட்டத் தெரியாமையினால் வாடகைக்காரைப் பிடித்துக் கொண்டு சென்றனர். சிவகுமாரன் கார் சாரதி தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காக அவனோடு வங்கிக்கு வெளியே கத்தியுடன் காவல் நிற்க மற்றவர்கள் வங்கியுள் நுழைந்தனர். இவர்களின் துப்பாக்கியைக் கண்ட வங்கிக்காசாளரான பெண் மயங்கி விழுந்துவிட்டார். எனவே இவர்களால் பணம் எடுக்க முடியவில்லை இவர்கள் பயமுறுத்தும் நோக்கில் வைத்த துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டு சனங்கள் கூடிவிட்டார்கள். எனவே இவர்களைக் காப்பாற்ற சிவகுமாரன் வங்கியுனுள் ஓட கார்சாரதி திறப்பை எறிந்துவிட்டுத் தப்பி ஓடி விட்டார். கொள்ளைக்காரர்கள் என்று நினைத்து சத்தம் போட்ட வங்கி ஊழியர்கட்கு தாம் விடுதலைக்காகப் போராடுபவர்கள் என்று விளக்கமளிப்பதற்கு சிவகுமாரன் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டான்.


சனங்கள் கூடத் தொடங்கி விட்டனர். சிவகுமாரனும் கூட்டாளிகளும் காரை தள்ளி ஸ்டாட் பண்ண முயன்றனர், ஆனால் முடியவில்லை. எனவே திசைக்கொருவராய் தப்பியோடும்படி சொல்லி விட்டு சிவகுமாரன் தானும் தப்பி ஓடினான். ஆனால் மக்கள் இவர்களை கள்ளர் என்று நினைத்து சத்தமிட்டபடி தொடர்ந்து துரத்திச் சென்றனர். சிவகுமாரன் புகையிலை வெட்டப்பட்ட தோட்டத்தினுடாக ஓடும் போது காலில் காயம்பட்ட நிலையில் ஒழிக்க முயன்ற போது சனங்களால் காட்டித் தரப்பட்டான.; பொலிசில் பிடிபடும் நிலையில் சயனைட்டை விழுங்கினான். ஜீவராசா, உரும்பிராய் மகேந்திரன் இருவரும் பொதுமக்களால் கலைத்துப் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர். மக்களால் இவர்கள் காட்டித்தரப்படும் நிலை இருந்ததென்றால் அவர்கள் எவ்வளவு அறியப்படாதவர்களான அரசியலைக் கொண்டிருந்திருக்க வேண்டும் இவர்களது கருத்தியல் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யபட்டு இருக்குமெனில் இவர்கள் மக்களால் பாதுகாக்கப்பட்டு இருப்பர். இதனைப் போராட்டத்தின் தொடக்கம் என்று எவரும் நியாயம் பேச முடியாது.


 அரசியலுக்கு முந்தி ஆயுதமெடுத்தமையின் விளைவாக இது இருந்தது. இத்தனை அனுபவத்திற்குப் பின்னரும் புஸ்பராசா சிவகுமரானும் அவனது கூட்டாளிகளும் தோல்வியடைந்தமைக்கு காரணம் பிரான்சிஸ் போன்ற அவனது நண்பர்களே என்று பழி போட முயல்கிறார். மக்களின் பங்களிப்பின்றி எதுவும் சாத்தியமில்லை என்பதே இச்சம்பவத்தின் போதனையாகும்.


சயனைட்டை விழுங்கி ,யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிவகுமாரன் முதலில் சுய நினைவுடனேயே இருந்துள்ளார். தான் தப்பமாட்டேன் என்று கருதி அங்கு கொடுத்துள்ள மருத்துவ சிகிச்கைகளையும் மறுத்துள்ளான். பின்பு ஒரு வைத்தியர் அவனுக்கு "நீ மருந்து குடித்தால் தப்புவாய்" என்ற நம்பிக்கையூட்டியே பின்பு சிகிச்சையை ஏற்றுக் கொண்டான். தொடர்ந்து தனது தாயுடன் உரையாடிக் கொண்டே இருந்துள்ளான். தன் கைவிரல்கள் கறுத்து வருவதை அவதானித்து தனது தாயிற்கு சொல்லியுள்ளான். அதன் பின்பே நினைவு மாறாட்டமாய் புலம்பத் தொடங்கியதுடன், தன் நண்பர்களின் பெயர்களையும் சொல்லி அழைத்துள்ளான், சம்பந்தமில்லாமல் எல்லாம் பேசத் தொடங்கியுள்ளான் இச் செய்திகளை சிவகுமாரின் தாயாரே பலருக்குச் சொல்லியுள்ளார். பொலிஸ் காவலில் ஆஸ்பத்திரியில் சிவகுமாரன் வைக்கப்பட்டிருந்தமையால் அவனைப் பார்க்கச் சென்றவர்களின் தொகை மிகவும் சொற்பம். ஆனால் தீரங்கொண்ட புஸ்பராசாவோ துணிந்து யாழ் வைத்தியசாலைக் சென்றதாயும், கூடவே சிவகுமாரன் தப்பி செல்ல உதவும் பொருட்டு துப்பாக்கியை எடுத்துச் சென்றதாயும் எழுதியுள்ளார்.


புஸ்பராசா சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. புஸ்பராசா உண்மையில் வைத்தியசாலை சென்றிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் சிவகுமாரனைக் கண்டார்? நினைவுதப்பாத போதா? அல்லது சுய நினைவு போய் கண்டபடி புலம்பத் தொடங்கியபோதா? "துரோகி வெளியே வந்து சுடுவேன்" என்று சொன்னது தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களையா? கூடச் சென்ற கூட்டாளிகளையா? கூடச் சென்ற தனது நண்பர்களையே என்று புஸ்பராசா நம்ப விரும்புவதுடன் அதை பிரான்சிஸ் போன்றவாகளுக்கு எதிராகவும் திருப்பி விட முயல்கிறார். ஆனால் எமது விசாரிப்புக்கள் புஸ்பராசாவின் எழுத்து முழு உண்மை என்பதற்கு எந்த ஆதரவான தகவல்களையும் தரவில்லை.


அன்று சிவகுமாரனின் நெருங்கிய நண்பர்களாக உரும்பிராய் மகேந்திரன, ஆனந்தகுமார், பிரான்சிஸ், உரும்பிராய் சோட் பாலா ஆகியோரே இருந்தனர், புஸ்பராசா அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமற்ற உண்மையாகும்.


சிவகுமார் உட்பட ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கட்கு இடதுசாரிகள் ஆயுத ரீதியில் உதவினார்கள் என்று புஸ்பராசா எழுதுவது எந்த நிரூபணமுமற்றது. கூட்டணி போலவே தீவிரவாத தமிழ் ஆயுதமேந்திகளும் இடதுசாரிகளை தம் எதிரிகளாகவும், தமிழினத்துரோகிகளாகவுமே கண்டனர். காங்கேசன்துறை, மல்லாகம், யாழ்ப்பாணம், உரும்பிராய் போன்ற இடதுசாரிகள் செல்வாக்குப் பிரதேசங்களில் தனிநாடு கேட்கபவர்களுக்கு கடும் எதிர்ப்பு இடதுசாரிகளிடம் இருந்து வெளிப்பட்டது. சிவகுமாரனின் மக்களுடன் ஒட்டாத தனிநபர் சார்ந்த ஆயதத் துணிச்சலை ஆரம்ப முதலே இடதுசாரிகள் எதிர்த்தனர்.


[ஆளும் வர்க்கங்களது அடிமைக்கூட்டிது]

சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோருடன் அவர்களது அரசியல் பற்றி அவர்கள் மிகவும் கடுமையான விமர்சனங்களை அவர்கள் வைத்தனர். இங்கு இடதுசாரிகள், சிவகுமாரன் உட்பட தமிழ் இளைஞர்கட்கு ஆயுதம் கொடுத்து உதவினர் என்ற புஸ்பராசாவின் எடுகோள் எந்த அடிப்படையும் அற்றது இடதுசாரிகளின் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் மேல்சாதி அடக்குமுறைக்கு எதிராக சிறுசிறு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அது எல்லைக்குட்பட்ட இலக்குகளுக்கு மட்டுமே கொண்டிருந்தது. சிவகுமாரனின் ஆயத நடவடிக்கைகளை தன் சொந்த முயற்சியினாலும் மற்றவர்களின் உதவியினாலுமே நடத்தினான். சத்தியசீலன் போன்றவர்கள் தமது ஆயுத முயற்சிகளுக்காக தாம் ஒருபோதும் இடதுசாரிகளின் உதவிகளைப் பெற்றதில்லை என்று மறுக்கின்றனர். யாழ்ப்பாணப்பகுதியிலும் சாதாரண கிராமங்களிலும் வெடிதயாரிப்பவர்கள், ஊர்சண்டியர்கள் போன்றவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பது நடைமுறையில் இருந்தது. இவர்கள் சண்டைகளில் கைக்குண்டுகளைப் பாவித்தனர். அந்தக் காலத்தில் யாழ்பாணத்திலோ வல்வெட்டித்துறை, உரும்பிராயிலோ 500 ரூபாவிற்கு ஒரு கைத்துப்பாக்கி வாங்குவது கடினமான செயலாக இருக்கவில்லை. உள்ளுர் வெடி மருந்துகளோடு இந்தியாவிலிருந்தும் இவை கடத்தி வரப்பட்டன. இத்தகைய வாய்ப்புக்கள் இருக்கும்போது இடதுசாரிகள் உதவினர் என்பது பொருத்தமற்றதாகும்.


சிவகுமாரனின் சிலை உரும்பிராயில் திறக்கப்பட்ட போது உரும்பிராயின் முக்கிய இடங்களில் இடதுசாரிகளால் எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தது என்பதையும் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும. சிவகுமாரன் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்தார் என்று கூறப்படுகிறது. அவனின் சாதி எதிர்ப்பு என்பது உயர் வேளாள சாதியினர் கோவில்களில் நடத்திய ஒரு சில சமபந்திப்போசனங்களாகும். இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில்களில் வீடுகளில் சென்று சாப்பிட்டதில்லை. இதையொட்டி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இடதுசாரி போராளிகளில் ஒருவர் பின்வருமாறு சொன்னார் "நாங்கள் உங்களிடம் வருவதல்ல, நீங்கள் எங்களிடம் வந்து சாப்பிட்டு எங்கள் கோவில்களில் சமபந்தி போசனம் செய்வதே சாதியொழிப்பாகும்" சிவகுமாரனின் சாதி எதிர்ப்புபோராட்டம் கூட்டணியின் வகைப்பட்டதே. அதனை மாதிரியாய் கொண்டதே. இதைவிட நூறு மடங்கு உத்வேகத்துடனும், நேர்மையுடனும் இடதுசாரிகள் சாதியொழிப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். உரும்பிராய் பகுதியிலேயே 1967 களிலே இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தை இடதுசாரிகள் நடத்தியபோது, இடதுசாரி அணியைச் சேர்ந்த செல்லக்கிளி என்னும் பெண் மேல்சாதி வெறியர்கட்கு குண்டு எறிந்ததாய் கைது செய்யப்பட்டார். இப்படி ஒரு தொகை இடதுசாரிகளின் போராட்டம் ஆணவப்படுத்தப்படாமல் உள்ளது.


ASP சந்திரசேகரா மீது சிவகுமாரனின் கொலை முயற்சியையும் புஸ்பராசா குறித்துள்ளார். இக்கொலை முயற்சியில் சிவகுமாரனுடன் ஆனந்தகுமார், நடேசானந்தம் அளவெட்டி முல்லை, பிரான்சிஸ் போன்றவர்கள் பங்கெடுத்துள்ளனர். ஆனந்தகுமார் குண்டு எறிந்த போது அது வெடிக்கவில்லை. சிவகுமாரன் ஆறு தடவைகள் ASP சந்திசேகராவை சுட்டபோதும் குண்டுகள் வெடிக்கவில்லை. ஆனந்தகுமாரின் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு ஒரு வாளியில் வைக்கப்பட்ட போது அடியில் நீர் சிறிது இருந்ததால் ஈரமாகிக் குண்டு வெடிக்கவில்லை. சிவகுமார் சுட்ட பழைய 3.8 றிவோல்வர் குண்டுகள் திரும்ப இவர்களால் நிரப்பட்டவை. இது இரண்டு மூன்று நாட்களாகிவிட்டமையால் இளகிவிட்டது. அதுவும் வெடிக்கவில்லை. எறிந்த குண்டு வெடிக்கவில்லை, துப்பாக்கி குண்டுகளும் வெடியைத் தீர்க்கவில்லை என்பதைக் கண்ட கூடவந்தவர்கள் ஓடத் தொடங்கினர். ASP சந்திரசேகராவிடம் ரிவோல்வர் இருந்ததால் அவர் இவர்களை திருப்பி சுடக்கூடும் என்று அவர்கள் பயந்தனர். ஆனால் சிவகுமாரன் ASP சந்திரசேகராவை ஜீப்பில் இருந்து இழுத்து கத்தியால் குத்த எண்ணினான், ஆனால் கத்தியை வைத்திருந்த பிரான்சிஸ் கத்தியுடன் ஓடியமையால் கோபமடைந்த சிவகுமாரன் பிரான்சிசை தாக்க முயன்றான் என்று தெரிகிறது. இதனை ஆனந்தகுமாரும் உறுதிப் படுத்துகின்றார்.


தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜனார்த்தனத்திற்கு சிவகுமாரன் பாதுகாப்புக் கொடுத்ததாய் புஸ்பராசா எழுதியுள்ளார். ஜனார்த்தனத்திற்கு கூட்டணி உயர்மட்ட பெரிய மனிதர்கள் பாதுகாப்புக் கொடுத்தனர். சிவகுமாரன் அவருடன் கூடத் திரிந்தார். தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பாக கூட்டணி இளைஞர்கள் சில ஏற்பாடுகள் செய்திருந்தனர். தடிகள், சைக்கிள் செயின் உட்பட பல தயாரிக்கபட்டன என்பது உண்மை. இதனைக் கனடா தாயகம் இதழும் எழுதியதுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எதற்கும் துணிந்த துரையப்பாவின் ஆட்கள் மாநாட்டை குழப்புமளவிற்கு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே அப்படி எதுவும் குழப்பப்பட்டாமல் அதனைச் சமாளிக்க கூட்டணி இளைஞர்கள் சில ஒழுங்குகள் செய்தனர் என்பது உண்மையாகும். இவைகளை எழுதிய கனடா தாயகம் இதழை, சிறிலங்கா அரசுக்கு சார்பானவர்கள் என்று குற்றம் சொல்லும் புஸ்பராசா, அதில் கட்டுரை எழுதிய ஜீவாவை ஒத்தவர்கள் மின்சாரக் கம்பங்களில் தண்டிக்கப்பட்டதை காட்டி வெளிப்படையாகவே ஜீவாவை எச்சரிக்கின்றார். புஸ்பராசா கருத்துச் சுதந்திரத்திற்கு தரும் மரியாதை புலிகளை மிஞ்சக் கூடியதாகும், முழுப்புகலிடத்திற்கும் வழிகாட்டக் கூடியதாகும்!!!


தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு கைலாசபதி, இந்திரபாலா போன்றவர்கள் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதைப்பற்றிக் கவலைப்படாத சிவகுமாரன், வித்துவான் வேலனுக்கு தவறுதலாக அழைப்பு அனுப்பப்படாததால் அவர் "நான் தமிழால் வாழ்ந்தவன், தமிழனாய் வாழ்ந்தவன்" எனக்கு அழைப்பு இல்லை என்று சத்தம் போட்டபோது அவர் காலில் வீழ்ந்து தமிழாராய்ச்சி மாநாட்டை சத்தம் போட்டுக் குழப்பிவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டான். சிவகுமாரன் சயனைட் கலாச்சாரத்தின் தந்தை, அதைத் தொடக்கி வைத்தவன். இது பிற்காலத்தில் புலிகளால் பிரபாகரனின் கண்டுபிடிப்பாய் மக்கள் மயப்படுத்தப்பட்டது. ஒரு தற்கொலைச்சமூகம் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியது. இவைபற்றி புஸ்பராசா எதுவித அபிப்பிராயமும் வெளியிடவில்லை.


சிவகுமாரன் தொடக்கிவைத்த தற்கொலை அரசியல், தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்த சமூக விளைவுகளைப்ற்றி  புஸ்பராசா  பேசவில்லை. இதையிட்டு அவர் அனுஷ்டிக்கும் மௌனம், புலிகளின் தற்கொலை அரசியலை ஏற்கத் தெரிவிக்கும் சம்மதமே.


சகல போராட்டங்களிலும் துணிவு, வீரம், மரணம், தியாகம் என்பன மதிக்கப்படும் பண்புகளாக இருந்த போதிலும் உண்மையான புரட்சியாளர்கள் மரணத்தைப் போற்றுவதில்லை, தற்கொலையைக் கொண்டாடுவதில்லை. புரட்சியாளர்கள் எதிரிகளின் கருத்தியல்களை மட்டுமல்ல, அவர்களின் உடல், உள ரீதியிலான சித்திரவதைகளையும் எதிர்கொள்ளத்தக்கதாயே பயிற்றுவிக்கப்படுகின்றனர். எதிரியின் உடல் வதைக்குப் பயந்து தற்கொலை செய்வது கொள்வது வீரத்தையல்ல, கோழைத்தனத்தையே காட்டுகிறது. உளவியல் ரீதியில் பலமற்ற, போக்கிடமற்ற மனிதர்களே தற்கொலையைத் தீர்வாக நாடுகின்றனர் என்பது நாம் நடைமுறையில் காணும் உண்மையாகும். யுத்தகாலம் என்பது சித்திரவதை, உடற்காயம், மரணம், சிறை, பட்டினி, உளவியல் துன்பங்கள் என்பவற்றையே தினசரி வாழ்வின் நிகழ்வாக கொண்டிருக்கும். இவைகளை எதிரிட தொடர்ந்து உயிர் வாழ்ந்து இலட்சியத்தையடைய போராளிகள் பயிற்றப்பட்டிருக்க வேண்டுமே தவிர, சயனைட் குப்பிகளை விழுங்கி தற்கொலை செய்துகொள்வது ஒரு போராட்டத்தின் அரசியல் இராணுவ தேர்வாக இருக்க முடியாது. கடும் உடற்துன்பங்களை சகித்து மனவுறுதியோடு புரட்சிக்காக வாழ்வதே தொடர்ந்துதும் போரிடுவதே புரட்சிகயாளர்களை உண்மையான அர்ப்பணிப்பாகும்.


சோசலிச உலகின் மிகச் சிறந்த இராணுவ தளகர்த்தரும், ஐந்து மில்லியன் செம்படை வீரர்களை வழி நடத்தியவருமான ரொட்ஸ்கி முதல், மாவோ, சேகுவரா ஈறாக எவரும் எதிரிகளின் உடல்வதைக்கு பயந்து புரட்சியாளர்கட்கு தற்கொலையைச் சிபார்சு செய்ததில்லை. சமூகவிடுதலை என்பது கடின உழைப்பு, போதாமை நிறைந்த வாழ்வு, நிரந்தர துன்பம, மரணத்தின் மத்தியிலான வாழ்வு என்பவைகளால் சூழப்படட்ட போதும், அது வாழ்வதற்கான போராட்டமே. உழைப்பாளர்கட்கும் ஏழைகட்கும் கடினமான வாழ்வை எதிர்நோக்கும், சித்திரவதைகளை தாங்கும் மனவுறுதி அதிகமாகும் ஆனால் சிவகுமாரன் போன்ற நடுத்தர வர்க்க சொகுசுகளில் இருந்து போராட்டங்கட்கு வந்தவர்கட்கு சித்திரவதைகளை தாங்கும் மன உறுதியில்லை. சித்திரவதைகளை விட மரணமடைவதே, இந்த உலக வாழ்வை முடித்துக் கொள்வதே மேலானது என்று கருதுகின்றனர்.


கடுமையான வாழ்விற்கும், சிறைக்கும, சித்திரவதை துன்பங்கட்கும் ஆட்படுவதற்கும் படுவதை விட இவர்கள் மரணத்தை தாமே தேர்ந்து கொள்கின்றனர். போராட்ட காலத்தில் சமூகம் தனது சராசரி மனிதப் பண்புகளைக் கூட இழந்து முழு மிருகமாகிவிடும. ஆயுதப்படைகள் கிளர்ச்சி செய்வோரை உச்சககட்ட உடல்வதைகட்கு உட்படுத்துவார்கள். இங்கு போராடுபவர்கள் எல்லோரும் பிடிபட்டால் தற்கொலை என்பதே தீர்வு என்றதால் வாழ்வதற்கு எவரும் மிஞ்சமாட்டார்கள. சரீர ரீதியிலான துன்பத்திற்கு அஞ்சி பெறுமதி மிக்க மனித வாழ்வை அழித்துக் கொள்பவர்கள் புரட்சியாளர்களின் வரிசைக்குரியவர்களல்ல. கடுமையான வாழ்விற்கு தயாரற்ற மேல் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் சுயஅழிப்பு மூலம் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர் ஆனால் முழுச்சமூகமுமே இத்தகைய கொடுமையான வாழ்வு முன்பு விடப்பட்டடிருப்பதை இவர்கள் மறந்து தம்மை மட்டுமே காண்கிறார்கள்.


புலிகள் சிவகுமாரனின் முன்னுதாரணத்தை தீவிரமாய் பற்றிக் கொண்டனர். "சயனைட்டுத்தான் எமது இயக்கத்தின் உயிராகும். எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக்கு காரணம் சயனைட்தான. நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை எம்மை ஒப்படைத்திருக்கிறோம் என்பதன் அடையாளச் சின்னம் அது" என்று புலிகள் எழுதினார்கள். " இந்த சயனைட் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும் வரை எந்த சக்திக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்" என்று குறிப்பிடும் கிட்டு எதிரிகளின் சித்திரவதைக்கு அஞ்சியே சயனைட்டை தேர்ந்தெடுப்பதைக் காணவில்லை, தன்னிடம் சிக்கிய மாற்று இயக்க போராளிகளை விதம் விதமாய் சித்திரவதை செய்து மகிழ்ந்து, வதைத்தே கொன்ற கிட்டு போன்றவர்கள் தமது சொந்த உடல் மீதான சித்தரவதையில் இருந்து தப்பிக்க சயனைட்டைக் காவித்திரிந்தனர். மாத்தையா, விக்டர் போன்றவர்கள் தம்மிடம் அகப்பட்ட சிங்கள, முஸ்லீம் ஏழைகளுக்கு, ஆடு, மாடு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தியவர்களுக்கு சயனைட் தீத்தி மகிழ்ந்த ககைகள் தனியாகவுள்ளன. சிவகுமாரனின் தற்செயலான தவறான முன்னுதாரணம் இப்படி பல திக்கில் விளைவுகளை ஏற்படுத்தியது.

சிறைவாழ்வு:

கொடுமையும், அவலமும் நிறைந்த சிறைவாழ்வு பற்றி புஸ்பராசா கூறும் தகவல்கள் ஒரு அரசியல்கைதி என்ற அளவில் போதுமான மட்டத்திற்கு அவ்வாழ்வை கிரகித்துக் கொண்டவையாயில்லை. அங்கு பெற்ற அநுபவங்கள் மிக மிக மேலோட்டமாகவும் உணர்வற்றும் தன்னைப் பற்றிய தகவல்களால் நிரம்பியதாகவும் அது குறுகிச் சிறுத்து விட்டது. புஸ்பராசாவின் எழுத்தோடு ஒப்பிடுகையில் சிறைக்கே சென்றிராத சோபா சக்தி எழுதிய "ம்" கதை ஓரளவு இன்னமும் சிற்பபாக சிறை வாழ்வையும், வெலிக்கடைப் படுகொலைகளையும், புலி இயக்க வன்முறைகளையும் பதிவு செய்துள்ளது. தான் வாழ்ந்த வாழ்வை அனுபவித்ததை, கண்ணால் கண்டதை எழுத்தில் படைக்கும் அளவிற்கு ஆற்றல் புஸ்பராசாவிடம் தேவையான அளவிற்கு செயற்படவில்லை என்று நாம் சொல்ல முடியும். அந்தவகையில் புஸ்பராசா ஒரு மோசமான விவரணையாளராக மாறிவிடுகின்றார்.


எதிர்வரும் இரண்டு பத்துவருடங்கட்கு ஈழப்போராட்டம் பற்றிய நூல்கள் மதிப்பீடுகள் பெருமளவு வெளிவரும் காலமாக இருக்கும். இங்கு புஸ்பராசாவின் எழுத்துக்கள் சகல திசைகளிலும் திரும்ப திரும்ப விமர்சனத்திற்கும், ஆய்விற்கும் வருவதை தடுக்க முடியாது. இது சார்ந்த வரலாற்றுணர்வு அவரிடம் செயற்படவில்லை, போதிய கவனத்துடன் இவை எழுதப்படவில்லை, இதற்கு புஸ்பராசாவின் வலதுசாரித் தமிழ் அரசியல் மதிப்பீடுகளும் கட்டாயமாகத் தடையாக இருந்தன. அவர்காலத்தில் அவருடன் சிறையிலிருந்த, அரசியல் நண்பர்கள், முக்கிய அரசியல்கைதிகள், ஜே.வி.பி யினர், தனிப்பட்ட நட்பு பேணியோர் என்று அவர் விபரிக்க ஏராளமான தேவையிருந்தது. சிறைவாழ்வில் தமது இலட்சியம் தொடர்பான எத்தகைய உறுதியை புஸ்பராசா கொண்டு இருந்தார் என்பது கூட வாசிப்பவர்களுக்கு தட்டுப்பட்டிராது, ஆனால் தான்மாத்திரம் அனுபவித்த சித்திரவதைகளை, பொலிஸ் இராணுவ துன்புறுத்தல்களை ஓரளவு எழுத்தில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளார்.


ஏனைய தமிழ் இளைஞர்கள்கள் மேல் நடாத்தப்பட்ட பொலிஸ் வன்முறைகள் பற்றி அவர் ஆரம்ப நிலைத் தகவல்களைக் கூடத்தரவில்லை. தன்னோடு தொடர்புடையவர்கள் பற்றி மட்டுமே சில செய்திகள் பேசப்படுகின்றது. அக்காலத்தில் பஸ்தியாம்பிள்ளையின் சித்திரவதைகள் எங்கும் பீதியூட்டுபவையாக இருந்தன. பஸ்தியாம்பிள்ளை புஸ்பராசாவை மட்டுமல்ல கிட்டதட்ட சகல தமிழ் இளைஞர்களையும் அடித்து நொருக்கியவர். செட்டியை மலம் போகுமளவிற்கு தாக்கியவர். தூசணத்தை அடுக்கு மொழியில் பேசும் பஸ்தியாம்பிள்ளை அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இருவரையும் இளைஞர்களோடு சம்பந்தப்படுத்தி பாலியல் பழிப்புச் சொற்களுடன் விசாரணை செய்வார். மிகமோசமான சித்தரவதைக்குப் பின்னர் இளைஞர்கட்கு சிகரெட், சாப்பாடு, பிரியாணி, கள்ளுக் கூட வாங்கிக் கொடுப்பதுண்டு. ஒருமுறை அமிர்தலிங்கம் நீதிமன்றத்தில் பஸ்தியாம்பிள்ளையைச் சந்தித்போது "நீர்தான் பஸ்தியாம்பிள்ளையா? உம்மைத்தான் சந்திக்க வேண்டும் என்றிருந்தேன். தமிழ் இளைஞர்களின் தாய்மார் விடும் கண்ணீர் உம்மைச் சும்மா விடாது விரைவில் உம்முடைய காக்கிச்சட்டையைக் கழற்றுவேன்" என்றார். அமிரத்லிங்கம் தன்னை பயமுறுத்தியதாக பஸ்தியாம்பிள்ளை தனது அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்தார். பஸ்தியாம்பிள்ளை பற்றிப் பாராளுமன்றத்திலும் கூட்டணி எம்.பி மார்கள் பேசினார்கள்.


சிறையிலிருந்த தமிழ் இளைஞர்கள் மோசமான அரசியலுணர்வு கொண்டவர்களாகவும் வெறும் தமிழ் வெறியால் உந்தபட்டவர்களாகவும் இருந்தனர். அரசியல் கிளாச்சியாளர்களுக்கு உரிய பக்குவத்தை உண்மையில் அவர்கள் அடைந்திருக்கவில்லை. எதிர்காலமின்மை, விரக்தி, முரண்பாடுகள் இவைகளால் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து பிணக்குகளை கொண்டிருந்தனர். அரசியில் ரீதியான வாதாட்டங்கள், வாசிப்பு என்பன ஒரு சிலரைத்தவிர வேறு எவரிடமும் இருக்கவில்லை. ஆனந்தகுமார் - குட்டிமணி, வண்ணை ஆனந்தனின் அடிதடிகளை புஸ்பராசா அவர்கள் எழுதியுள்ளார். காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் சேனாதிராசா உட்பட பலர் தத்தமக்கென்று குழுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.


இடதுசாரிப்போக்குடைய சந்ததியார், வரதராஜாப்பெருமாள் போன்றவர்கள் புறமொதுக்கப்பட்டனர் [புஸ்பராசாவைப்போலவே,வரதராஜப்பெருமாள் மற்றும் புலிகள் உட்பட அனைத்து ஆயுதக்குழுக்களும் பின்னாளில் இந்தியக் கைக்கூலியாகியது வரலாறு].ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட சத்தியசீலன் போன்ற நபர்களுடன் காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் சிறையில் கூட தொடர்புகளை எச்சரிக்கையோடு வைத்துக் கொண்டனர். சத்தியசீலன், காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தனும் ஒன்றாய் சிறைவைத்த போது மூன்று நாட்களாக சத்தியசீலனுடன் காசிஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்போது சிறையிலிருந்த ஜே.வி.பி யினரே உடனே வந்து சத்தியசீலனுடன் பேசினர். சத்தியசீலன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் எனவும் தாம் மேடைப்பேச்சுக்காகவே கைதாகியுள்ளதாயும் சிறையிலிருந்த ஜே.வி.பி யினருக்கு காசி ஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் சொல்லியிருந்தனர். காசி ஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் ஆயுதப்போராட்டம் பற்றிப் பேசி இளைஞர்களை தூண்டி விடுபவர்களாகவும் இருந்தவர்களாவர். விசாரணைகளின் போது ஆங்கிலம் தெரிந்திருந்த காரணத்தால் இவர்கள் அடிகளிலிருந்து தப்பிக் கொண்டனர். ஆங்கிலம் பேசிப் படித்தவர்களாக பொலிஸ் விசாரணைகளில் தம்மைக் காட்டிச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டனர். சிறைகளில் அதிகாரிகளுடன் பேசுவது, தமிழ் இளைஞர்களின் சிறைத் தேவைகளுக்காக ஆங்கிலத்தில் விண்ணப்பங்கள் எழுதுவது என்று சிறையிலும் தமது மேல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டனர். சாதாரணமாக ஏனைய தமிழ் இளைஞர்கட்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால், மோசமாக அடிக்கப்பட்டதோடு பலவித அவமானங்கட்கும் உள்ளாயினர்.


சிறையில் சாதி பார்க்கப்பட்டதாய் சில இளைஞர்கள் குறை சொன்னதை புஸ்பராசா எழுதியுள்ளபோதிலும் அதை ஒரு பொருட்டாய் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. சாதி வெளிப்படையாக பெரும்பாலும் காட்டப்படாவிட்டாலும் சாதுர்யமாக சாதி பார்க்கப்பட்டது. அரசியல் உணர்வுகள் ஒழுங்கு படுத்தபடாத இவர்களிடம் சாதி மற்றும் பிரதேசவாத உணர்வுகள், ஊர்ப் பெருமைகளும் குடிகொண்டே இருந்தன. வரதராஜப்பெருமாள் இந்திய வம்சாவழித்தொடர்புடைய ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது மறைமுகமான புறக்கணிப்பு இருந்தது. சாதி குறைந்தவர்கள் கணக்கெடாமல் விடப்பட்டனர். சில சமயங்களில் சேர்ந்து சாப்பிடுவது தவிர்க்கப்பட்டது. பொருளாதார பலம் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் தாய், தந்தையர் குடும்பத்தினரும் சிறையில் வந்து இளைஞர்களைப் பார்வையிடவோ, பணம், உணவு வகைகள் அனுப்பவும் முடியாதிருந்தனர். இத்தகைய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் சிறையில் இளக்காரமாய் எதிர்நோக்கப்பட்டனர்.


போட்டியும், பொறாமையும், கசப்பும் சிறையில் சாதாரணமாக இருந்தது. சிகரெட், பீடி, பாண் துண்டுகளுக்காகக்கூட சச்சரவுகள் நடந்தன. உணவுவகைளை பதுக்கி வைத்து சாப்பிடுவது நிலவியது. அரசியல் பண்பாடு வளர்ந்திராத நிலையில் தனிமனித விருப்புக்களும் சுயநலமும் முதன்மையிடத்தை வகித்தன. முதலாளிய தனிமனிதவாதமே பிரதான பண்பாக இருந்தது. எனினும்; ஜே.வி.பி இளைஞர்களின் தொடர்பு தமிழ் இளைஞர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தியது. இடதுசாரிப்போக்கின் அறிமுகமும் ஆயுத ரீதியில் அரசாங்கத்தை அசைக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் தென்படத் தொடங்கியது. சிறை ஊழியர்கள் சங்க தொழிற்சங்கமான LSSP இன் தலைவராக இருந்த K.V.D சில்வா போன்ற இடதுசாரிகள் தமிழ் அரசியல் கைதிகட்கும் ஜேவிபி அரசியல்வாதிகட்கும் இடையே அரசியல் பேசப்படுவதை ஊக்கவித்தனர். இரு பிரிவினரையும் பேச ஏற்பாடு செய்தனர். ஜேவிபி சிங்கள் மத்தியதர வர்க்கம், வேலையற்ற இளைஞர்கள், மாணவர்களின் அமைப்பாக இருந்த போதும் தமிழ் அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் அரசியல் ரீதியில் பலமாக இருந்தது. காசிஆனந்தன், மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், சத்தியசீலன் போன்றவர்கள் வெறும் தமிழ் தீவிரவாதத்தால் கண்ணவிந்துபோன அரசியல் வெறுமையாளர்களாகவேயிருந்தனர். ஜே.வி.பியிற்கு முதலாளியம், இந்தியவிரிவாதிக்கம் என்ற சீர்திருத்தவாத மாவோயிசப்பரப்பிலாவது அரசியல் தெரிவு ஒன்று இருந்தது.


சிறையில் காசிஆனந்தன், சத்தியசீலன், வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் ஜே.வி.பி உடன் கூட இருந்த போதும் கடைசி மட்டும் தமிழ் தேசிய வாத சின்னத்தனங்களை தாண்டிச் சிந்திக்காதவர்களாகவே இருந்தனர். சத்தியசீலன் போன்ற நபர்கள் அமிர்தலிங்கம் போன்றவர்களை விட மோசமான தீவிரவாத தமிழ் தேசிய வாதத்ததுள் கிடந்து உழன்றனர். வண்ணை ஆனந்தன் மேடைகளில் ஜே.வி.பி பற்றி பேசியதுண்டு. S.T பண்டாரநாயக்க தனக்கு மாக்கியவல்லியின் பிரித்தாளும் தந்திரம் பற்றிய நூலை அறிமுகப்படுத்தியதாய் பெருமையடித்துக் கொண்டதற்கு அப்பால் எதுவும் நடைபெறவில்லை. சிவகுமாரன் பற்றியும் அவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றியும் சிறையில் இருந்த போது அறிந்து கொண்ட ஜே.வி.பி யின் தலைவரான ரோகண விஜயவீர நாம் "எழுபத்தையாயிரம் பேரைச் சேர்த்து அரசைப் புரட்ட முடியாமல் போய்விட்டது, நீங்கள நாலுபேர் சேர்ந்து அரசைப் புரட்ட முயற்சிக்கின்றீர்களா?" என்று தமிழ் இளைஞர்களைக் கேட்டதாய் சொல்லப்படுகின்றது.


சிறையில் இருந்தவர்கள் கருத்தியல் ரீதியில் ஒன்றிணைக்கும் பலமோ தலைமைப் பண்போ தமிழ் அரசியல் கைதிகளிடம் இருக்கவில்லை. இளைஞர்களின் தலைவர்களாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்ட காசிஆனந்தன் இன்று புலிப்பாசித்திற்கு துதிபாடும் நபராகவுள்ளார். மாவை சேனாதிராசா பாராளுமன்ற கதிரைக்காக தீவிரமாய் போரிடும் தமிழ் சந்தர்ப்பவாத அரசியலில் உலாவுகின்றார். ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் பெற்றிருந்து அண்மையில் மரணமடைந்த வண்ணை ஆனந்தன், ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய எந்த அகதிகட்கும் உதவ மறுத்தார். தான் மட்டுமே உண்மையில் பாதிக்கப்பட்டவன் என்றும் மற்றவர்கட்காக சாட்சியம் சொல்லவோ, இலங்கையில் அறிந்ததாய் சொல்லவோ மாட்டேன் என்று மறுத்தார். மேடை தோறும் வண்ணை ஆனந்தனை "விடுதலை வீரன்" என்று அறிமுகம் செய்த மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தையும், அமிர்தலிங்கத்தையும் ஜேர்மனியில் அரசியலுக்கப்பால் வசைபாடித் திரிந்தார். தமிழ் தேசியத்துள் முளைவிட்டவர்களின் அரசியல் இவ்வாறாகத்தான் முடிவுற்றது. மக்கள் பரப்பிலிருந்து தொலைந்தே போனார்கள்.

சந்ததியார்:

சவுக்குத்தோப்பு புதைகுழிப் புகழ் பூண்ட உமாமகேஸ்வரன் மட்டும் சந்ததியாரை வெறுக்கவில்லை. தமிழ்தேசியவாதிகளில் கூட்டணி முதல் சகல இயக்கங்களும் சந்ததியாரைத் தலையெடுக்கவிடாமல் செய்ய முடிந்த சகலதையும் செய்தன. அமிர்தலிங்கம், மாவை சேனாதிராசா வரிசை முதல் புஸ்பராசா ஈறாக சந்ததியார் மேல் வெறுப்பை உமிழ்ந்தமை தனிப்பட்ட கோபதாங்களாலல்ல. மாறாகத் தமது தீவிரமான தமிழ் வலதுசாரி அரசியல் கருத்தோட்டத்திலாகும். தமிழ் தேசிய விடுதலைக்கு வந்த இடதுசாரிகள் மற்றும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட நெருக்கடியூடாக பட்டுப்பழுத்து இடதுசாரித் திசைக்கு வந்தவர்கள் சகலரும் தமிழ் வலதுசாரிகளினால் கடுமையாய் எதிர்க்கப்பட்டனர், கொன்றொழிக்கப்பட்டனர். இந்த இடது சாரிப் போக்காளர்கள் பலவிதமான தத்துவார்த்த நிலைகளைக் கொண்டிருந்தபோதும், தீவிர இடதுசாரிப்போக்கு மற்றும் சீர்திருத்தவாதக் கன்னைகளை பிரதிநிதிப்படுத்தியபோதும் அவை வளர்ச்சிக்கு அருகே தான் இருந்தன.


 சந்ததியார், விசுவானந்ததேவன், சுந்தரம் போன்றவர்கள் தீவிரமான மாவோ வாதப்போக்குடையவர்களாக இருந்தபோதும், தமிழ் தேசியத்துள் இடதுசாரி உணர்வைப் பிரதிபலித்தனர். போராட்டத்தை அகலப்படுத்தவும், சிங்கள மக்கள் பற்றிய வர்க்க சிந்தனையையும் உள்வாங்கிக் கொண்டவர்களாக முன்னேற முயன்றனர். இப்போக்குகள் அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன் முதல் பிரபாகரன் ஈறாக உள்ள தீவிரவாத தமிழ் தேசியவாதிகட்கு இட்டு இடைஞ்சலாக இருந்தன. சந்ததியார் கொலை ஏதோ உமா மகேஸ்வரனின் கட்டளைப்படி சங்கிலியால் (கந்தசாமி) செய்யப்பட்ட தனிப்பட்ட சம்பவமல்ல. இக்கொலையில் இந்திய உளவுத்துறை, அமிர்தலிங்கம் உட்பட பல இடதுசாரி எதிர்ப்புச் சக்திகள் பின்புலமாய் செயற்பட்டனர். சந்ததியார் கொல்லப்பட்ட பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் உமாமகேஸ்வரன், சந்ததியார் மாவோயிசப்போக்குடையவராக இருந்தமையால் இந்திய அரசின் நிர்ப்பந்தத்தாலே கொல்ல வேண்டி வந்தயாய் நியாயம் சொல்ல முற்பட்டதையும் நாம் ஞாபகத்தில் கொள்ள முடியும்.


PLOT இலிருந்த வெளிப்பட்ட மக்கள் போராட்டம் என்ற கருத்து சந்ததியாருடையது தான். EROS, EPRLF போன்ற இயக்கங்கள் உத்தேச ஈழத்தில் மலையக மக்களையும் இணைப்பதன் மூலம் மலையகத்தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இனரீதியாக முடிவைத்தர முயன்றனர். ஆனால் மலையக மக்கள் தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர் வர்க்கத்துள் அணிவகுப்புச் செய்யப்பட்ட மக்களாக இருந்தனர். தமிழ், தமிழினம் சார்ந்த உணர்வுகள் அவர்களிடம் செயற்படவில்லை என்பதுடன் சொத்து எதுவுமற்ற உழைப்பாளர்களாக அவர்கள் இருந்தனர். இங்கு சந்ததியார் மலையக மக்களின் விடிவு சிங்கள மக்களுடன் இணைந்த ஒரு சோசலிசப்புரட்சியுடன் தொடர்புடையது என்று சரியாகவே கருதினார். EROS போன்ற இயக்கங்களின் கருத்தியல் தோல்வியடைந்ததை இன்று நடப்புக்கள் காட்டி விட்டன. தமிழ் விடுதலை இயக்கங்கள் திடீரென பெரும் தொகை ஆட்களை உள்விழுங்கி இந்திய இராணுவப் பயிற்சிகளில் ஊதிப்பெருத்த போது இடதுசாரிகளின் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களால் அவற்றை எதிர்கொள்ள முடியவில்லை. தீவிர இராணுவவாதப்போக்குள் முன்பு, தேசியவாதம் முன்பு இவர்கள் எதிர் நிற்க முடியாது போயிற்று.


தேசிய விடுதலைப்போரில் வர்க்கக்குணம் இடதுசாரிகளை ஆயுத ரீதியில் வேட்டையாடுவதில், கொன்றொழிப்பதில் தன்னை வெளிப்படுத்தியது. இடதுசாரிகள் இயக்கங்களில் இருந்து வந்த பலர் தம்மையறியாமலே தீவிர தமிழ் தேசிய வலதுசாரிகளின் குரலில் அரசியல் பேசத் தொடங்கினர். இந்தச் சூழலில் அரசியலுக்காக போரிட்ட சொற்பமான மனிதர்களில் சந்ததியாரும் ஒருவராவர். இந்தியஅரசு, கூட்டணி, இலங்கையரசு தமிழ்தேசியம் சம்பந்தமாக அவர் சரியான மதிப்பீடுகளை கொண்டிருந்தார் எனினும் ஏகாதிபத்தியம் அது சார்ந்த சர்வதேச மூலதன இயக்கம் இவைகளோடு இந்தியா, இலங்கை போன்ற நாடுகட்குள்ள உறவு பற்றி சிந்தித்து இருந்தார் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை.


சிறையில் இருந்த போது JVP யினருடன் தொடர்பு கொண்டிருந்த சொற்பமான தமிழ் இளைஞர்களில் சந்தியாரும் ஒருவராவர். தமிழ் தேசியவாதியாக, அமிர்தலிங்கம் அனுதாபியாக சிறைக்கு சென்ற அவர் இடதுசாரிப்போக்கில் சிந்திப்பவராக சிறையை விட்டு வெளியே வந்தார். சிறையில் JVP யின் சுனந்ததேசப்பிரிய உட்பட பலருடன் அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தது. PLOT இன் பெரும்பாலான சிங்கள இடதுசாரிகளுடனான தொடர்புகளுக்கு சந்ததியார் காரணமாக இருந்தவர் என்பதில் சந்தேகமில்லை. வடக்கில் பாலா தம்புவின் தொழிற்சங்கமான CMU பண்டத்தரிப்பு ப.நோ.கூ சங்கத்ததில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடாத்தியபோது அந்தப் போராட்த்தில் சந்ததியார் ஈடுபாடு காட்டிய சம்பவத்தை அன்று CMU வில் அங்கம் வகித்த பரராசசிங்கம் குறிப்பிடுகின்றார். 1981இல் சண்முகலிங்கம் என்ற இடதுசாரி நண்பருடன் கொழும்பில் சண்முகதாசனை சந்தித்து சந்ததியார் உரையாட முயற்சித்ததாயும் "JR ஒர் இனக்கலவரத்தை தொடங்க முயற்சிக்கிறார் நீங்கள் சகல இடதுசாரிகளையும் அதற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும், உங்களின் கீழ் நாம் பணிபுரியத்தயார்" என்று சந்ததியார் சொன்ன போது சண்முகதாசன் " நாற்பது வருட கால மார்க்சிய அறிவும் தலைமையும் கொண்ட எனக்கு புத்தி சொல்ல நீ யார்? வெளியால போ" என்றார்.


சண்முகதாசன் நேர்மையான மனிதராக இருந்த போதும் தீவிரமான ஸ்டாலி
னிசவாதி, குருட்டுத்தனமான மாவோவாதி, விமர்சனங்கட்கு பழக்கமற்ற ஒருதலையான பார்வை கொண்டவர். மாவோ, ஸ்டாலின் போன்றவர்களை தவறு விடாதவர்கள், அவர்கள் மேல் விமர்சனம் என்பது அவரது ஸ்டாலினியச் சிந்தனை ஒழுங்கு கண்டறியாத ஒன்றாகும்.


PLOT இயக்கத்துள் சந்ததியாருக்கு பலத்த முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்த சமயம் உமாமகேஸ்வரனுக்கும் அமிர்தலிங்கத்திற்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டு இருந்தது. சந்ததியாரை இயக்கத்திற்குள் இருந்து வெளியேற்றினால்தான் மற்றைய இயக்கங்களோடு நாங்கள் சேர முடியும் என்று அமிர்தலிங்கம் உமா மகேஸ்வரனுக்கு புத்தி சொன்னார். NLFT இன் விசுவானந்ததேவனுடன் சந்ததியாருக்கு தொடர்பிருந்தது. விசுவானந்ததேவனும் சண்முகதாசன் அணியிலிருந்து வந்தவராவர். இவர்கள் இருவரும் இணைந்து வங்காள தேசத்தை சேர்ந்த அபுதாகிர் (Abu Taher) என்ற சோசலிஸ்ட் நீதிமன்றத்தில் நிகழ்த்திய உரையை "வங்கம் தந்த பாடம்" என்ற நூல் வடிவில் வெளியிட்டனர். இந்திய உளவு நிறுவனமான "கியூ" பிரிவு சந்திரகாசனின் கூட்டாளிகளான DGP மோகனதாஸ் DIG இராஜசேகரநாயர் ஆகியவர்களின் தமிழ்போராளிகளுடான தொடர்பு பற்றியும் இதில் அவர்கள் எழுதியிருந்தனர். பிற்காலத்தில் மோகனதாஸ் போன்றவர்களின் CIA தொடர்பு வெளிவந்தது. இலங்கையரசுடன் உள்ள இரகசியத் தொடர்பும் பத்திரிகைச் செய்தியானது. இந்திய இராணுவப்பயிற்சி தமிழ்தேசிய இயக்கங்களை எப்படி நாசமறுத்தன என்ற படிப்பினைக்கு இன்று நாம் விட்ப்பட்டுள்ளோம். சகல தமிழ் இயக்கங்களும் அமிர்தலிங்கம், சந்திரகாசன் போன்றவர்களும் இந்தியாவின் பின்னால் அன்று அலைந்தனர் பயிற்சிக்கும் ஆயுதத்திற்குமாய் ஒருவரோடு ஒருவர் அடிபபட்டனர். இரத்தினசபாபதி, சந்ததியார் விசுவானந்ததேவன் போன்ற ஒரு சிலரே இந்தியஆயுதம், இராணுவப்பயிற்சியை எதிர்த்தவர்கள். அது சார்ந்த அரசியல் எதிர்வு கூறல் அவர்களிடம் இருந்தது.


சந்ததியார் கொல்லப்பட்டு சில மாதங்களுக்குள் விசுவானந்ததேவனும் புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் பண்ணைக்கடல் ஊடாக நெடுந்தீவு சென்று அங்கிருந்து இந்தியா செல்ல முயன்ற போது பண்ணை நெடுந்தீவு கடலில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார். இந்திய உளவுத்துறை வட்டாரங்களில் சந்ததியாரும் விசுவானந்ததேவனும் தீவிர கொம்யூனிஸ்டுக்களாக கணிக்கப்பட்டு இருந்தனர்.


இடதுபோக்குடையவர்களை அழிப்பதில் கூட்டணி, புலி, PLOT இந்திய அரசு சகல சக்திகளும் ஒன்றாகவே சிந்தித்தன. ஒரே மாதிரியாகவே செயற்பட்டன.


PLOT இல் இருந்து விலகிய சந்ததியார் தீப்பொறி குழுவை நிறுவியதுடன் விசுவானந்ததேவனுடன் இணைந்து செயற்பட்டதுடன் ஒரு இடது அணியை உருவாக்க முனைந்தார். விரைவாக இவர்கள் இருவரும் அழிக்கப்பட்டமையின் காரணம் இதுதான். அமிர்தலிங்கத்தின் பங்கு சந்ததியார், சுந்தரம் போன்றவர்களின் கொலையில் குறிப்பிடத்தக்கதாகும். புலிகள் சுந்தரத்தை கொலை செய்த காலத்தில் அமிர்தலிங்கம் தமது வெளிநாட்டுக்கட்சி நபர்கட்கும், ஆதரவாளர்கட்கும் பிரபாகரனை ஆதரிக்கும்படி கடிதம் எழுதியதுடன் தனது வெளிநாட்டுப் பயணத்திலும் புலிகளை ஆதரிக்கும்படி வேண்டினார். N M பெரேரா, கொல்வினிடம் தான் பாடம் படித்த கதை அமிர்தலிங்கம் மேடைகளில் கூறிய போதும் அது அவரது இடதுசாரி எதிர்ப்புக்கு தடையாக இருந்ததில்லை. பொன்.கந்தையா, கார்திகேயன் போன்றவர்கட்கு எதிராக அமிர்தலிங்கம் கக்கிய தமிழ் வலதுசாரி துவேசம் கொஞ்சநஞ்சமல்ல. 1980களின் தொடக்கததில் பெர்லின் நகரில் நடந்த கலந்துரையாடலில் வைகுந்தவாசன் தான் அமிர்தலிங்கத்தை "நீங்கள் கூட்டணி இவ்வளவு பெரிய கட்சி, கட்சிக்கு சொந்தமாக ஒரு பத்திரிகை இல்லை நாம் பல்ககைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே 'பீப்பிள் வொயிஸ்' என்ற பத்திரிகை நடத்தினோம்" என்று கேட்ட போது அமிர்தலிங்கம் உடனே " ஓம் ஓம் அது எனக்கு தெரியும், ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகை" என்று நக்கல்விட்டதாய் சொன்னார்.


அமிர்தலிங்கம் இடதுசாரி எதிர்ப்பால் மட்டும் நிரம்பியவரல்ல. சந்ததியார், சுந்தரம் போன்றவர்களின் இரத்தக்கறை படிந்தவர்தான். அமிர்தலிங்கத்தின் மூர்க்கத்தனமும், தமிழ் வலதுசாரிப் பிற்போக்கு பிடிவாதமும், இலட்சியப்பற்றாய் விட்டுக்கொடாதவராய் அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படுவதுண்டு. ஒரு முறை பாராளுமன்ற விவாத்தில் சிறில் மத்தியூ அமிர்தலிங்கத்தை பார்த்து பின்வருமாறு சொன்னார் " புலிமேல் சவாரி செய்பவர்கள் ஒரு நாள் புலியின் வயிற்றுக்குள்ளேதான் போவார்கள் " அமிர்தலிங்கம் புலியின் வயிற்றுக்குள்ளே போன போது அவரை " தானைத்தலைவர்" , "தளபதி" என்று புகழ்ந்தவர்கள் எவரும் அவருக்காக உயிர்தியாகம் செய்யவோ, புலிகளைப் பழிதீர்க்கவோ முயலவில்லை. புஸ்பராசா உட்பட, அவரது அனுதாபிகள் வெறும் இரங்கல் உரையுடன் அமைதியடைந்தனர். அமிர்தலிங்கத்தைக் கொன்ற பிரபாகரனை மென்மையாக சத்தமின்றிக் கண்டிப்பதோடு நின்றுவிடுகிறார்கள்.. ஆனால் அமிர்தலிங்கத்தின் கூட்டுச்சதியால் கொல்லப்பட்ட சந்ததியார் போன்றவர்களை மட்டும் இன்றுவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமிர்தலிங்கம் அடிக்கடி சொல்லும் " வளர்த்த கடா மார்பில் பாய்கிறது" என்ற மொழிபடி அவர் ஊட்டி வளர்த்த தமிழ் குறுந்தேசியவாதப் பிரதிநிதிகளான புலிகளே அவரைக் கொன்றார்கள்.


அமிர்தலிங்கத்தை விட சந்ததியார் நேர்மையான மனிதர், வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இயக்க வாழ்விலும் சரி தனிப்பட்ட வாழ்விலும் கடுமையான உழைப்பாளி. மாணவப்பருவத்தில் தந்தையாருடன் பென்ரருடன் நின்று தோட்டத்தில் வேலை செய்வார். பிற்காலத்தில் அவர் எளிமை, சிக்கனம், கணக்கு வைத்தல், இலட்சிப்பற்று இவைகட்கு அறியப்பட்டவராக இருந்தார். ஒரு முறை சந்ததியாரை தேடிவந்த பஸ்தியாம்பிள்ளை அவரது வீட்டுக்கொடியில் காயந்து கொண்டிருந்த அவரது சஸ்பென்ரரை தடியால் குத்தி எடுத்துச் சென்றார். பின்பு அவரை கைது செய்து விசாரித்த போது (துரையாப்பா கொலைவழக்கு) " ஒரு ஒழுங்கான பென்டருக்கு வழியில்லை ஆனால் துவக்கு வாங்க நீ சங்கிலி தூக்கி கொடுக்கிறாயோ" என்று கேட்டு அடித்தான். சந்ததியாரின் அரசியல் நண்பரொருவர் மற்றொரு சம்பவத்தை சொன்னார். ஓருமுறை சந்ததியாரின் ஊரான சுழிபுரத்தில் அங்குள்ள பெரிய சண்டியன் ஒருவர் சனத்தோடு கொழுவுப்பட்டுக் கொண்டு நின்றதைக் கண்ட சந்ததியார் அந்தச் சண்டியனிடம் சொன்னாராம் " நீ சண்டியன் என்று பெயரெடுத்தனி  ஒரு பேயன்ர கையாலை அடிவாங்கிச் செத்தவன் என்று பெயரெடுக்கப் போறாய் -பேசாமற் போ ".


சிறையில் அரசியல் பேசுபவர்களில் முக்கியமானவராக சந்ததியார் இருந்தார்.


இடதுசாரி அரசியல் வழியில் சிந்திக்க இங்குதான் இவர் பயிற்றப்பட்டார். சிறையில் உள்ள இளைஞர்கட்கு வெளியில் இருந்து உறவுகள், தாய், தந்தையர்கள், நண்பர்கள் உணவு அனுப்பும்போது அதை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை அவர் ஏற்பார். சோற்றுப்பார்சல்கள் வரும்போது அதனை ஒன்றாய் கலந்து குழைத்துக் கொடுப்பார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குழைத்துக் கொடுத்தால் " இப்ப எனக்கு பசியில்லை" என்று சாப்பிடாமல் தவிர்க்கும் தமிழீழ இளைஞர்களும் சிறையில் இருந்தனர். ஒருமுறை சந்ததியாரின் சுழிபுரத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுக்குரிய மதுரநாயகம் என்பவர் சோறு குழைத்துக் கொடுத்த போது " பசியில்லை என்று" சாப்பிடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. இதையடுத்து சந்ததியார் எப்போதும் சாப்பாடு வெளியே இருந்து வந்தாலும் அதைக் குழைத்துக் கொடுக்கும் பொறுப்பை மதுரநாயகத்திடமே கொடுத்தார். சிறைக்குள் தமக்கு அனுப்பப்படும் முட்டைமா, அரசிமா, பலகாரங்கள் என்பவற்றை பல இளைஞர்கள ஒழித்து வைப்பார்கள் அல்லது கொஞ்சத்தை மற்றவர்கட்கு காட்டிவிட்டு மிகுதியை பதுக்கி விடுவார்கள். இரவுசாமங்களில் அல்லது ஒழித்து தனியே சாப்பிடுவார்கள். இப்படியான சூழ்நிலையில் தான் சந்ததியாரின் அரசியல் வளர்ந்தது. கூட்டு வாழ்விற்கும், தோழமைக்கும் அவர் பயிற்றப்பட்டார். எமக்குத் தெரியாத அரசியல் சந்ததியாருக்கு தெரியும் என்று அவரோடு சிறையிருந்த ஆனந்தகுமார் குறிப்பிடுகிறார்.

தொடரும்...

தமிழரசன்
பெர்லின்



Keine Kommentare: