Montag, Oktober 20, 2008

அமீபாவின் ஆவிக்கு...

அமீபாவின் ஆவிக்கு வணக்கம்.தங்கள் முற்பிறப்பின் வினை முடிவதற்குள்ளேயே அகாலமரணத்தைத் தழுவியதன் தொடரில் இப்படி ஆவியாக அலைகிறீர்கள்!அலைவதுமின்றி எவரெப்போது-எந்தச் சந்தில் கோலி விளையாடினார்கள் என்பதையும் ஆயும்-அறியும் உணர்வும் உங்கள் முன்னைய பிறப்பின் தோஷமாக விரிகிறது.இன்று, ஆவியாக அலையும் இந்த நிலையிலும் புலிகள்-மாற்றுக் குழுக்கள்,மற்றும் பொருளாதாரம் குறித்தும்,மக்கள்"நலன்"குறித்தும் சிந்திக்கும் ஒரு ஆவியைக் குறித்து,எத்தகைய சுட்டலைச் செய்யலாம்?


"நீ-நீங்கள்,அது-அவை" குறித்து எனக்கு"அதுவா அல்லது இதுவா" என்ற ஒரே குழப்பம்.அவ்வண்ணமே அமீபாவின் ஆவிக்கும்:பேய்க்குஞ்சுமுதல் ராஜகீரிவரையான வரலாற்றுச் சுவடி தேவையாகவும் இருக்கிறது.இதுவும் கடந்து ஒவ்வொரு அடையாளத்தையும் தேடும் அடையாளமற்ற வெளியுள் நான் தேடுவதும் இல்லை-எதையுங் காணுவதுமில்லை.இருந்தும் எனது கருத்துக்களுக்கான எதிர்வினையைச் செய்யும் ஒரு ஆவியுடைய விருப்பைப் பின் தள்ளுவதில் என் மனதுக்கு விருப்புக்குரியதாகவுமில்லை.ஏனெனில்,வர்க்கப் போராட்டமென்பதும் ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழுநாளையுஞ் செலவு செய்தே வருகிறது.அங்கே,எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில் அமீபாவின் ஆவி சுற்றித்திரியும்போது,அவற்றை நோக்கி நானுஞ் செல்வது சாத்தியமே.


"பிணமுண்ணும் வாசிப்பு" என்பது என்னிடத்தில் கிடையவே கிடையாது.அதனால் நான் இப்படியுரைப்பேன்:எழுத்தினால் புத்திசார் அல்லது பித்தலாட்டக் கருத்துக்களைச் செய்து முடிக்கலாம்.இந்த நோக்கத்தைக் குறித்தான புரிதலை உள்வாங்கிக்கொண்டால்-அடுத்த நிலைமையைச் சுதாகரிக்கலாம்.அநேகமாக மேற்சொன்ன இரண்டும் ஒரே தளத்தில் நிலவுந் தருணமே தேசியவாதத்துக்குள் நிலவுகிறது.இதன் பெறுபேறுகளின் தொடர்;சியில் இலட்சம் மக்களினது இருப்பை அசைத்த நாம்,மீளவும்,இதே பாணியிலானவொரு எழுத்தைக் கோரிக்கொள்ள முடியாது."ஆற்றில் போட்டத்தைக் கடலினுள் தேட முடியாது"எனினும்,அமீபாவின் ஆவிக்கு இது சாத்தியம்.ஏனெனில்,அவர் சொரன் கீர்கேகோர்ட் முதல் இன்றைய யுகர்கன் காபர் மாஸ் தாண்டிப்பலரையும் எடுத்துவருகிறார்.இது,எனக்கும் சாத்தியமானதென்பதால் நான் செல்லும் பாதையினூடாகக் கடப்பதில் பல சாத்தியங்களும்,அசாத்தியங்களுமுண்டு.



"உள்ளது-அல்லாதது"எனும் புள்ளியில் நிலவும் பூச்சியத்துள் அகம் அல்லது புறம் விருத்தியாகும் ஒரு துருவத்தில் நான் உங்களோடு(மீளவும்,எதை முன்னிலைப்படுத்தி?)எப்படி உரையாடுவதென்னும் சமாந்திரமான ஒரு ஏக்கத்தோடு சொல்லித்தக்க எதையும் தெரிவுக்குட்படுத்தமுடியாதவொரு சிக்கல் உருவாகிறது.இதுதாம்,ஒன்றைத்"தேர்வு"செய்வதில்"அதுவா-அன்றி இதுவா"என்ற சிக்கலை"எல்லோருக்கும்"அன்றும்,இன்றுஞ் செய்கிறது.இதன் தொடர்ச்சியாகப் பற்பல கேள்விகளை(எனதென்ற ரூபங்களென:தூண்டில்,துரும்பு,ஜனநாயகம்,பேய்க்குஞ்சு,ஆமை,ராஜகீரி இத்ஜாதி...) அமீபாவின் ஆவியானது கேட்குமிடத்து எதையுரைத்து அந்த ஆவிக்கு நான் வேள்வி செய்ய?



தேர்வே இல்லாது,ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள"மேற்கோள்கள்"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்"விடுதலை"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,கால் போர்ப்பராக இருந்தாலென்ன அல்லது அடையாளமற்ற எந்தவெளிகளாக இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு அமீபாவின் ஆவியின் நிமித்தும் பேசிக் கொள்வோம்.


புத்திஜீவித ஆய்வு நிலையை எடுத்துக்கொண்டு, "Postmans Studie"
(Postman reported a study)யாகப்
பொதுத் தளத்தை எங்கேயும் உருவாக்கிவிடுதெனுங்கூத்து என்னிடத்தில் இல்லை.அது நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் உங்களுக்கு எப்படியானவொரு சுதந்திரமிருக்கோ அதையே நானும் உள்வாங்கலாம்-வாங்காது போகலாம்.


Pierre Bourdieus நினது ஆய்வுகளுக்குள் உட்பட்டவொரு "இத்தகையது"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய எனது"அறிதலில்"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் அமீபாவின் ஆவியோடானவொரு உரையாடல் மதிப்புமிக்கதானவொரு விடையமாகலாம்.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய"திறந்த சமூகத்தில்"ஒரு பக்கம் அமீபாவினஆவி;,மறுபக்கம்,ஸ்ரீரங்கன்.இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற இடம்"விமோசனம்-மகத்துவம்"மனிதர்களுக்கானதென்றபோதும் அனைத்துக்குமானதென்ற பொதுத் தளத்தில் இலங்கைப் பிரச்சனையுள் புலிகளின் பாத்திரம்,அதன் வழி நிகழ்வுறும்"பொதுமைப்படுத்தும்"குற்றவியல் குறுக்கல்களையும் விடுவிப்பதில் நான் முழுமையாக எழுதுவதே தவிர,இலங்கையில் சோசலிசச் சமுதாயத்தைப்படைப்பெதென்ற அந்த மேலான கண்ணோட்டத்திலல்ல.அதற்கு நான் அருகதையற்றதால் இத்தகைய நிலமையில் விவாதத்தில் ஈபடுவதுதாம் மிச்சம்.இதுவும் ஒரு கட்டத்தில் அவசியமாகிறது.விவாதமென்பதைச் செய்வதென்றபோதும் இதைத் தொடராகவே எழுதுகிறேன்.வேலை வெட்டியுடைவன் என்பதால் அக்கடமைகளின்பின்னே அமீபாவின் ஆவியோடு தொடர்ந்து உரையாடுவேன்.


"தன்னிலை-தனிநபர்வாதம்-கருத்து"இவைகளுக்கிடையிலான பொருளாதாரச் சமூகக்கூறுகளை நோக்குவதும் கூடவே பண்பாட்டுச் சமூகத்தன்மையில் தனி நபர்களின் கருத்தியல் மனதும்,மற்றும் சமூக வாழ்நிலையும் அதன் மீதான சமூகவுணர்வு,எங்ஙனம்"தனித்துவம்"என்ற சுய உருவாக்கத்தில் தன்னிலைகளாக-தெரிவுகளாக மாறும்போது,வாழ்நிலையின் தன்மை சார்ந்த புறநிலையின் தன்மையோடு, "அடையாளம்" நிகழ அதுவே"தனித் தன்மை"என்பது சாத்தியம் என்பதை அமீபா குறித்துரைப்பதிலிருந்து எங்கே முதலாளியத்துக்கான இருப்புப் பலமாக்கப்படுவதென்பதை மேலும் பார்க்கலாம்.சந்தைப் பொருளாதாரமானது இன்று சமூகச் சந்தைப் பொருளாதாரமெனும் முகமூடியோடு மக்களின் வரிப்பணத்தில் தனது இருப்பைத் தக்கவைக்கும் காலம் இது.இந்தச் சமுதயத்தின் இருப்பில்தாம் "சுயம்" மற்றும் தனித்தன்மை உருவாக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தொடருகிறேன்.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
20.10.2008

Samstag, Oktober 18, 2008

தேசம்நெற்றில் சில ஆங்கிலம் கற்றவர்களின் புதிய புரிதல்கள்

ஜமுனா சொன்னது போல்
காலனித்துவ அடிமைப் புத்திக்குள் புகுந்து
கிடக்க எனக்கு உடன்பாடும் இல்லை



தேசம்நெற்றில் சில ஆங்கிலம் கற்றவர்களின் புதிய புரிதல்கள்.அன்று சோபாசக்தியை எள்ளி நகையாடிய ஜமுனா இன்று புதிய விமோசனம் பெற்றார்!-அரோகரா அண்ணே அரோகரா!!!


"ஆங்கிலம் வரலாற்றின் பல தருணங்களில் அதிகாரத்தின் மொழியாகவும் மேலாதிக்கத்தின்
மொழியாகவும் இருந்திருக்கிறது.வர்க்க சாதிய மேலாதிக்கம் அன்றாட வாழ்வில் நாறிக்
கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு கால கட்டம் வரையிலும் ஆங்கிலவழிக் கல்வி என்பது
அதிகாரத்திற்கானதாகத்தான் இருக்கிறது. "
-Jamuna Rajeendran.


நாவலன் on October 17, 2008 12:23 pm :

//அதிகாரத்தினதும், அடக்குமுறையினதும் ஆஸ்தான மொழியான ஆங்கிலமொழியைப் பேசும் திறன் மட்டுமே தமது புத்திஜீவித்தனம் என்று வரைமுறை போட்டுவைத்திருக்கும் யாழ்ப்பாண மத்தியதர வர்க்க மேலணி பற்றி யமுனா தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்.இந்த யாழ்ப்பாண மேல் மத்தியத்ர வர்க்கம் வரலாற்றில் முதல் தடவையாக அடிவாங்க்கிக் கொண்டிருக்கிறது.இந்த விமர்சனங்களுக்கும் வினாக்களுக்கும் எதிராக இவர்கள் ஆக்ரோஷமாகக் கிளர்ந்தெழுவார்கள். சேறடிப்புக்களும், மிரட்டல்களும், இவர்களின் மேலாதிக்க வலைப் பின்னலிலிருந்து எழுவது தவிர்க்கமுடியாதது. இனந்தெரியாத இணையத்தளங்கள், மொட்டைக்கடிதங்கள் போன்ற இன்னோரன்ன மூன்றம்தர மிரட்டல்களுகெதிராக ஓரணியில் நிற்பது அவசியமானது.//


yamuna rajendran on October 17, 2008 10:16 am :

//அன்புள்ள கருணா-
குற்றவுணர்வுடன் இதனை எழுதுகிறேன். ஆங்கிலம் வரலாற்றின் பல தருணங்களில் அதிகாரத்தின் மொழியாகவும் மேலாதிக்கத்தின் மொழியாகவும் இருந்திருக்கிறது.வர்க்க சாதிய மேலாதிக்கம் அன்றாட வாழ்வில் நாறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு கால கட்டம் வரையிலும் ஆங்கிலவழிக் கல்வி என்பது அதிகாரத்திற்கானதாகத்தான் இருக்கிறது.
தூயவன் ( பெயரைப் பாருங்கள்- அவர் அப்பழுக்கில்லாதவர் என்கிற பில்ட் ‘அப்’ புனைபெரிலேயே இருக்கிறது- இரு ஒரு மனோவியல்ரீதியான அரசியல் தந்திரம்) அவர் என்னதான் சொற்களஞ்சிய விளக்கங்களைக் கொடுத்தாலும்- தமிழில் அவர் ஜெயபாலனை நோக்கிக் கேட்டது இப்படித்தான்- ‘ஜெயபாலன்- கிசு கிசு எழுதுகிற உமக்கு பொரூளாதாரம் பற்றி எழுத என்ன தகுதியிருக்கிறது?’- இந்த விவாதம் இப்போது பொருளாதாரம் என்பதைத் தாண்டிச் சென்றிருப்பதைச் சாதாரணமாவே ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும்.
இது புனைபெயரில் வந்து ஒருவர் ஆங்கில மேலாதிக்கத்துடன் செய்கிற மமதையுடன் கூடிய ஒரு அரசியல் செயல்பாடு.ஒரு காலத்தில் ஆதிக்கத்தின் கருவியாக இருந்த ஆங்கிலத்திலேயே அவர்களை எதிர்த்து- அவர்களது மமதையை எதிர்த்துப் பேசமுடியும் -எங்களுக்கும் முடியும் என்பது சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்து வந்தவர்களின் அவாவாக இருக்கிறது.
ஒருவரை அவரது மொழிப்பரப்புக்குள் சென்று சிதறடிப்பது என்பது ஒரு பிரக்ஞைபூர்வமான அரசியல் தந்திரம். அதன் பொருட்டே சமூகத்தின் கீழ் மத்தியதர வர்க்கத்தின் இடையிலிருந்து வந்தவர்களும் சில சமயங்களில் ஆங்கிலம் பேச நேர்கிறது.
இந்தக் கேவலத்தின் முழுப் பொறுப்பும் இந்த விவாதத்தில் தூயவன் ஏற்படுத்தியது. அவருக்கு தமிழ் தெரியாது என்ற சொல்ல முடியாது. ஜெயபாலனின் தமிழ் மேற்கோள்களை ‘கட் அன்ட் பேஸ்ட்’ செய்து ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். இது அவரது மமதை சார்ந்தது.
நிஜத்தில் புனைபெயரில் வந்து விவாதத்தில் ஈடுபடுபவர்களுடன்- சவால் விடுபவர்களுடன் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட முடியாது என்பது என் கருத்து. தேசம்நெற்றுடன் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை.
இனிமேலும் புனைபெயர் புண்ணியர்களுடன் விவாதத்தில் ஈடுபடுகிற மனநிலை எனக்கு இல்லை. நான் ஆங்கிலத்தில் எழுதியமைக்காக என்னை மன்னியுங்கள்.//

அன்புடன் யமுனா ராஜேந்திரன



puthiyavan on October 17, 2008 9:43 pm :
//கருணா- என்னையும் மன்னித்து விடுங்கள். நான் வேலையிலருக்கும் போது பின்னூட்டம் எழுதினேன். தமிழில் அங்கிருந்து எழுத முடியாமற் பொயிற்று. உண்மையில் எனக்கு ஆங்கிலத்தில் புலமையும் இல்லை. அத்தோடு ஜமுனா சொன்னது போல் காலனித்துவ அடிமைப் புத்திக்குள் புகந்து கிடக்க எனக்கு உடன்பாடும் இல்லை.//

http://thesamnet.co.uk/?p=3307





//கருணா- என்னையும் மன்னித்து விடுங்கள். நான் வேலையிலருக்கும் போது பின்னூட்டம் எழுதினேன். தமிழில் அங்கிருந்து எழுத முடியாமற் பொயிற்று. உண்மையில் எனக்கு ஆங்கிலத்தில் புலமையும் இல்லை. அத்தோடு ஜமுனா சொன்னது போல் காலனித்துவ அடிமைப் புத்திக்குள் புகந்து கிடக்க எனக்கு உடன்பாடும் இல்லை.//





புதியவன்,ஆங்கிலம் கற்பது-புலமையுறுவது என்பது காலனித்துவ அடிமைப் புத்திக்குள் உட்செல்வது கிடையாது!


ஜமுனாவின் வார்த்தையிற் கூறினால் மூல மொழி-மொழிகளில் படிப்பதற்கு-வாசிப்பதற்கு ஆங்கிலமும்,ஜேர்மனும்,பிரஞ்சும் அவசியமான மொழிகள்.இவை தெரியாதவரை எள்ளி நகையாடியவர்கள்-இப்போது, தூயவனைத் தாக்குவது அவரது கருத்துகளுக்காக மட்டுமல்ல.மாறாக,அவர்கொண்டிருக்கும் ஆங்கிலப் புலமை மற்றும் அவ் மொழியின் மோகம் குறித்து.


ஆங்கிலத்தில் வாசிக்க-எழுத முடியாதவர்கள் புதிய உலகத்தை-செய்திகளை-விவாதங்களை-மாற்றங்களை அறிவது, மிகவும் பின்தங்கிய பிராந்தியமொழிகளில் காலம்கடந்து மொழிமாற்றஞ் செய்தபின்பே.செய்யப்படும் மொழி மாற்றமும் அரைகுறையானது.எனவே,ஆங்கிலத்தால்-ஐரோப்பிய முன்னணி மொழிகளால் கட்டிப்போட்ட அறிவியல் உலகைத் தரிசிக்க இம்மொழிகளைக் கற்கவேண்டியது அவசியம்.

மூலமொழியில் படிப்பவர்கள் மற்றவர்களுக்குக் குருவாக இருப்பதில் "இருக்கும்"சுவைக்காக மூல மொழி தெரியாதவர்களை எள்ளி நகையாடுவது சரிதாமோ?இதை ஜமுனா சோபா சக்திமீது ஏவியது வரலாறு.ஆனால்,சோபா சக்திக்கு ஆங்கிலத்தில் புரிய-பேச ஓரளவு தெரியும் என்பது நாம் அறிந்த உண்மை.வேண்டுமானால் "புலமை இல்லை"என்பது ஒத்துக்கொள்ளத்தக்கது.அது,எவருக்கும் அவசியமுமில்லை!



கொஞ்சமும் பொறுப்பற்ற இவர்கள்,ஆங்கிலத்தை "காலனித்துவ அடிமைப் புத்தி"என்கின்றனர்.இத்தகைய அடிமை-ஆண்டான் புத்தி ஏன் தமிழுக்குள் இல்லையோ?


மொழி குறித்து ரொலான்பார்த் சொன்னார்:"மனிதர்கள் மொழியின் கைதிகளானார்கள்" என.அது, ஓரளவு உண்மைதான்.மனிதர்கள் உண்மையில் கைதிகளானது அவர்களது உயிர்வாழும் நிலைக்கே-வாழ்நிலைக்கே!.இது, பலரூபங்களிலானது.இத்தகைய ரூபங்கள் மொழிக்குள் குறிப்பான்களாகக் கொட்டிக்கிடப்பதால் அதை காலனித்துவ-ஆரிய-பிராமணிய-வெள்ளாள அடிமைப் புதியாகக் கொள்வதில் வியப்பு ஒன்றுமில்லை.அரபு மொழி எப்படிக் குரானோடு சல்லாபித்துச் சரிந்ததோ அப்படி!

இவைகளால்-இத்தகைய குறிப்பான்களை தடைகளாக்கி, இவ்மொழிகளை நிராகரிப்பவருக்கு-ஜமுனா,நாவலன்,தம்பி சேனன் வந்து தத்துவஞ் சொல்வார்கள்.இப் பதவிகளை நீங்கள் ஆங்கிலம் கற்றால் இவர்கள் இழந்துபோவார்கள் கவனம்!

எனவே,தமிழெனுங் குண்டான் சட்டிக்குள் குதிரையை ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.அதுவே,இவர்களுக்கான "புத்திஜீவி"ப் பீடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்.

Freitag, Oktober 17, 2008

நாடு தாண்டித் துருக்கிய இனவாதம்...

பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சி: துருக்கியப் பாசிஸ்டுக்களின் குர்தீஸ் இனமக்கள்மீதான காட்டுமிராண்டித் தாக்குதல்.


கடந்த புதன் 15.10.2008 இல் இருந்து வரும் ஞாயிறு 19.10.2008 வரை அறுபதாவது புத்தகக் கண்காட்சி பராங்பேர்ட்பெருநகர்-ஜேர்மனியில் நடந்து வருகிறது.

(BUCHMESSE: Angriff auf drei kurdische Stände durch türkische Nationalisten
Kurdischer Stand auf Frankfurter Buchmesser von türkischen Nationalisten angegriffen -

http://www.stattweb.de/baseportal/NewsDetail&db=News&Id=3878


இவ்வாண்டுக்கானப் புத்ததகக்கண்காட்சிக்குக் கௌரவ விருந்தினராகத் துருக்கிய நாடு அந்தப் புதத்ததக் கண்காட்சியரங்கில் வீற்றிருக்கிறது.ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்புக்கும்,கைத்தொழில் உறவுக்கும் துருக்கி முக்கியமானவொரு இடத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறது.எனினும்,துருக்கிய அரசும்,அதன் குடிகளும் இன்னும் பழமைவாதப் பொற்காலக் கனவுகளுக்கும்,இன-மத வாதத்துக்குள்ளும் கட்டுண்டே கிடக்கிறது-கிடக்கிறார்கள்!
இத்தகைவொரு நாட்டை முன்னிலைப்படுத்தி அதைக் கௌரவ விருந்தினராகக் கௌரவப்படுத்திய ஜேர்மனிய நலன்கள் வெவ்வேறு நோக்குக்குட்பட்டது.


இந்தத் துருக்கிய தேசத்தினது,பழமைவாதப் போக்கில் சிக்குண்ட துருக்கியர்கள் மிகவும் கீழ்த்தரமாகச் சிதைந்து இனவாதிகளாகவே இருக்கிறார்கள்.இத்தகைய இனவாதம் துருக்கியில் மேலோங்கியிருப்பதற்கான காரணம் என்னவென்பதைக் குறித்து யோசிக்க வைத்த நிகழ்வொன்று நேற்று 16.10.2008 பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியரங்கு -5 இல் நடந்தேறியுள்ளது.

இதே அரங்கத்தில் குர்தீஸ் மக்களின் இலக்கிய மற்றும் பண்பாட்டு நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வாங்குகள் உலகத்தின் பல்வேறு நாடுகளைப்போலவே மிடுக்கோடு நூல்களைத் தாங்கி இருக்கிறது.இது,ஜனநாயகபூர்வமானவொரு செயற்பாடு.ஜேர்மனியப் புத்தகக் கண்காட்சியில் குர்தீசியப் பண்பாட்டு மற்றும் இலக்கிய நூல்களைக் கண்காட்சிக்கு வைப்பதைத் தடைசெய்யும்படி துருக்கிய அரசும் அதன் தூதுவராலாயமும் கேட்டும், ஜேர்மனியத் தேசம் அதைப் பொருட்படுத்தித் தடை செய்யவில்லை.இது,துருக்கியத் தேசத்தின் ஜனநாயக விரோதத்தனமான வேண்டுகோள் என்பதை எல்லோருமே அறியமுடியும்.
இனவாதிகளாகச் சீரழிந்த துருக்கிய அரசும் அதன் மக்களும் எனக்கு இலங்கையச் சிங்கள அரசையும் அதன் பெரும்பகுதி இனவாதிகளையும் கண்முன் நிறுத்துகிறது.எந்தத் தேசத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு நிலவுகிறதோ அங்கே,வாழ்கின்ற ஒவ்வொரு குடி-மகளும்,மகனும் இனவாதத்தீயில் எரிந்து மனித முகத்தைக் கருக்கியே வைத்துள்ளார்கள்.இன்று, இடம்பெறும் பற்பல இனவாதச் செயற்பாடுகளும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான வாழும் தகமையை இத்தகைய இனக் குழுக்களிடம் விட்டுவைக்கவில்லை-இஃதை,இத்தகைய மூடர்கள் அறியவுமில்லை!

துருக்கியத் (வி)தேசியவாதம் என்பது துருக்கியில் சிறுபான்மை இனங்களை வேரோடழிக்கும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக்கொண்டியங்குவதாகவே இன்றந்தத் தேசத்துள் இருக்கிறது.இது,அப்பாவிக் குர்தீஸ் மக்களின் புத்தகக்கண்காட்சி அரங்கைச் சிதறடித்து,நூல்களைக் கிழித்தெறிந்து,அந்த மக்களின் கல்வியாளர்களை-பார்வையாளர்களைத் தாக்கி அவமானப்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் பெரும்பான்மையாக வாழும் வெளிநாட்டார்களில் துருக்கியே முதலிடத்தில் இருக்கிறது.இந்தவினம் ஜேர்மனியில் தாம் நாளாந்தக் காரியமாற்றத் துருக்கிய மொழியை இரண்டாவது நிர்வாக மொழியாக்கவும்,தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கவும்,ஜேர்மனியக் காரியலாயங்களில்,பாடசாலைகளில்-பல்கலைக்கழகங்களில் மொட்டாக்குப்போட்டபடி முகத்தைப் புதைக்கவும் உரிமைகேட்டபடித் தமது தேசத்தில் குர்தீஸ் மக்களை இவற்றையெல்லாம் அநுபவிக்கத் தடுத்துப் பலாத்தகாரஞ் செய்கிறது.இது, கொடுமையிலும் கொடுமை.இலங்கை இனவாத அரசின் அத்தனை கோர முகத்தையும் இந்தத் துருக்கியும் தாங்கியுள்ளது!

துருக்கிய இனவெறியர்கள்,தமது "தாயகத்தை" இரண்டாகப் பிரிக்கும் குர்தீஸ் பண்பாட்டு மற்றும் சிந்தனைகளை அநுமதிக்க முடியாதென்று ஜேர்மனியிலேயே இத்தகைய ஒடுக்குமுறையில் இறங்குகிறார்களென்றால் துரக்கியில் எத்தகைய நிலைமைக்குள் குர்தீஸ் இனமக்கள் வாழ்கிறார்கள் என்பதை நாம் இலகுவாக அறியமுடியும்!

சிங்கள அரசு தமிழர்களைப்படுத்தும் பாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளும் உள்ளடக்கமாகவே நிகழ்ந்ததென்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழாராட்சி மாநாட்டையும்,ஆசியாவின் தலை சிறந்த நூல்நிலையமான யாழ்பாண நூல் நிலையத்தையும் விழிமுன் நிறுத்திப் பார்க்கிறேன்.இனவாதத் தேசங்களின் அடிப்படையொற்றுமையானது கிட்லரின் 1938 ஆம் ஆண்டு நூல் எரிப்புப் போராட்டத்தோடு மிகவும் நெருங்கிவருவது என்பது உண்மையாகவே விரிகிறது.இத்தகைய பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட துருக்கிய இனவாத அரசு, எந்தவொரு பொழுதும் ஜனநாயகத்தைச் சுவாசித்ததே கிடையாது.இந்தத் தேசத்தில் உழைப்பவர்களையும்,அவர்களது தொழிற் சங்க உரிமைகளையும் இஸ்லாத்தின் பெயரால் காவு கொள்ளும் இந்தத் துருக்கி உலகத்தின்முன் அம்மணமானவொரு தேசம்.இந்தத் தேசம் இத்தைகய இழி இனவாதத்தை அரசியல் நாகரீகமுள்ள சமுதாயத்தில் கட்டவிழ்த்து விடுவதை உலகத்தின் திறந்த சமுதாயமாகக் காட்டிக்கொள்ளும் ஜேர்மனிய அரசு திட்டமிட்டு மறைத்துவிட்டது.(Die deutschen Medien, die anscheinend sonst über alles was der Partner Türkei auf der Buchmesse zu präsentieren hat berichtet ignoriert diesen Übergriff. Dieses Schweigen sollte nicht hingenommen werden. -http://de.indymedia.org/2008/10/229752.shtml)அதன் மகாப்பெரிய ஜனநாயக் குரல்களான வர்த்தக ஊடகங்களும் மறைத்துவிட்டன.

எங்கேயும்,என்ன விரோதம் நிகழினும்,அது பொதுவாக மக்கள் விரோதமாக இருக்கும் எல்லாச் சந்தர்ப்பத்திலும், இத்தகைய ஊடகங்கள் மௌனமாக அடக்கி வாசிக்கின்றன.இதைத் தமிழகத்து ஊடகங்களிலிருந்து ஐரோப்பிய ஊடகங்கள்வரை இனம் காணத் தக்கதாகவே இருக்கிறது.அப்பாவித் தமிழ்பேசும் மக்களின் பேரழிவைக்கண்டும் மௌனம் சாதித்த தமிழக ஊடகங்கள்போலவேதான் இன்றைய மேற்குலக ஊடகங்களும் இந்தப் பாசிசத் தாக்குதலை மறைத்துள்ளார்கள்.

என்றபோதும்,எங்கேயும் மாற்றுக் கருத்துகளுக்காகத் தமது உயிரையே தாரவார்க்கும் ஊடக நாணயத்தைக் கொண்டியங்கும் இடதுசாரிகள் இந்தப் பாசிசத்தாக்குதலையும், அதன் மக்கள் விரோதப் போக்கையும் கண்டித்துச் செய்தி வெளியுட்டுள்ளார்கள்.இடசாரிய-மாற்றூடகங்களில்மட்டுமேதான் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது!

இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கும் புல(ன்)ம்பெயர்"தமிழ் மாற்றுக்கருத்து-இடது-வலதுகள்"எல்லாம் இலங்கையின் இதே பாணியிலான அனைத்துவகைக் கடந்தகால அட்டூழியத்தையும் மண்ணால் மறைத்துத் தமது நியாயங்களை அடுக்கும்போது,குர்தீஸ் மக்களின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட துருக்கிச் சர்வதிகாரத்தைத் தோலுரித்துக்கொண்டிருக்கும் ஜேர்மனிய இடதுசாரிய ஊடகங்களை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.

இத்தகைய நிலைமைகள் எங்கெங்கு நிலவுகிறதோ அங்கே,இனங்களுக்கிடையிலான சகோதரத்துவம்,சமவுரிமையும் கிடையவே கிடையாதென்பதற்குத் துருக்கிய இனவாத நாடு மட்டுமல்ல இலங்கையும் நமக்கு நல்ல சான்றே!

நாடு தாண்டித் துருக்கிய இனவாதம் துருக்கியச் சிறுபான்மைக் குர்தீஸ் மக்களை வேட்டையாடுவதுபோல், இலங்கையின் இனவாதமானது நாடுகள்,கண்டங்கள் தாண்டி இலங்கைச் சிறுபான்மை இனமான தமிழ்பேசும் மக்களையும் வேட்டையாடி வருகிறது.இரண்டும் ஒவ்வொரு முறைமைகளோடு இச் சிறுபான்மை இனங்களை வேட்டையாடும்போது உலகமே வேடிக்கைபார்க்கிறது!

இந்த நிலையில் போராடும் சிறுபான்மை இனங்கள் மீளவும்,மீளவும் இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஆயுதத்தை எடுப்பதைத்தவிர வேறுவழியில்லை!இத்தகைய பண்பை வளர்ப்பதே இத்தகைய இனமேலாதிகச் சர்வதிகாரமே.இலங்கையே இனமேலாதிகத்தைச் சிறுபான்மைத் தமிழ்பேசும் மக்களிடம் மிகச் சாதுரியமாகத் திணித்படி, அவர்களது சுயநிர்ணயப்போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப் புலிகளும் தமது தவறுகளால் ஏதோவொரு வழியில் உடந்தையானர்கள்.குர்தீஸ் மக்கள் இதிலிருந்துவிடுபட்டு, ஓரணிக்குள் திரள்வதுபோன்று தமிழ்பேசும் மக்கள் திரளும் நிலையுருவாகுமென்று நாம் கனவே காணமுடியாதுள்ளது.இது, நமது அழிவின் காலம் நெருங்கிவிட்டத்தைக் காட்டுகிறது.

குர்தீஸ் மக்களைத் துடைக்க முனையும் துருக்கிய இனவாதம், அவர்களுக்கானவொரு தேசத்தை இந்த நூற்றாண்டில் துருக்கியில் பிரசவிக்கும் என்பது உண்மையானது-நமது இலங்கையில்... நிச்சியம் நாம் காட்டிக்கொடுக்கப்ட்டு இலங்கைச் சிங்கள மேலாத்திகத்தால் பூண்டோடு அழிக்கப்படுகிறோம். :-(((


உடைப்புக்காக,
ஸ்ரீரங்கன்
17.10.2008