Samstag, August 11, 2012

சபாநாவலனின்:தேசிய இனப்பிரச்னையில்[5]

அன்பு நண்பர்களே,வணக்கம்!.இது,நாவலன் எழுதிய "தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஏகாதி பத்தியங்களின்சதி" எனும் நூலுக்கான தமிழரசன் எழுதிய விமர்சனத்தின் இறுதிப்பகுதி. இப்பகுதியானது நாவலனது நூலுக்கான விமர்சனத்தைக் கொண்டியங்கினாலும் அது, விரித்து வைத்து நகரும் தளமானது உலகமயப் பொருளாதார நகர்வின் விளை நிலமாகும்.

இந்தப் பகுதியில், மூன்றாம் மண்டலமெனும்[Dritte Welt_Schwellenland  ] பொருளாதாரக் குறியீட்டு அட்டவணைப்படுத்தலுக்குரிய நாடுகளது உயர்வு-தாழ்வு குறித்து நிறையப் பேசுகிறார்.

ஜேர்மனியப் பேராசிரியரும்,சிறந்த இடதுசாரிய அறிஞருமான ஓஸ்க்கார் நேக்ற் [Prof.Dr.Oskar Negt  ] குறித்த வரை முறைகளை ஆதாரமாகவும் பயன்படுத்துகிறார் தமிழரசன்.அவரது தரவுகள் பலமானவைதாம். ஓஸ்க்கார் நேக்ற் குறித்த தரவுகளையுந்தாண்டியின்று  சீன அந்நியச் செலவாணியின் கையிருப்பு 3 ரில்லியன் அமெரிக்க டொலராக இருக்கின்றது.


ஓஸ்கார் நேக்ற் [Sozialphilosoph Oskar Negt  ]ஜேர்மனியில் அனைவருக்குமான நிபந்தனையற்ற அடிப்படை வருமானத்தை[Das bedingungslose Grundeinkommen ] அரசு செய்ய வேண்டுமென வாதிடுபவர்.அதை,இன்றைய ரோசா லுக்சம்பேர்க்கான சார வாகன்கினேக்ற் [Dr.Sahra Wagenknecht ] நிராகரிப்பதும் புரியத் தக்கதே.

உலக மயமாக்கலது விளைவைக் குறித்து நான் நிறையக் கற்றுக்கொள்ள முயன்றபோது பேராசிரியர் டாக்டர் பேர்ன்ட் சென்வ்[ Prof.Dr. Bernd Senf ] வை வாசிக்கவும்-கற்கவும் முடிந்தது.அவரது பொருளாதார விளக்கம் எப்பவும்போலத் தமிழர்கள் அறியாத சில்வியோ கேசலது[ Sivio Gesell ] நியாயவாதப் பொருளாதரத் தத்துவத்துக்கமைய நகர்வது.அத்தகைய மேதமையான விளக்கத்தின் தரவுகளோடு தமிழரசனது விளக்கங்கள் ஒட்டியுறவாடுவதில் எனக்கு ஆச்சரியம் மேல் ஆச்சரியம்.

தமிழரசன் இன்றுவரைப் பேராசிரியர் பேர்ன் சென்வ்வை வாசித்திருக்க முடியாது.அவரது எந்த ஆய்வையும் தொட்டிருக்கக்கூடிய காரணங்கள்அவருக்கு நெருங்கி இருக்க முடியாது.ஏனெனில் ,அந்தப் பேராசிரியர் மார்க்சியத்தின் பரம விரோதி.என்றபோதும், தமிழரசனது விளக்கங்களும்,தரவுகளும் பேராசியர் சென்வின் கருத்துக்களோடு பொருந்திப்போகிறது. உலக மயம் குறித்து நீண்ட ஆய்வுகளைச் செய்த பேராசிரியர், அதன் தாக்கமானது மேற்குலக வீழ்ச்சியோடு தொடர்புடையதாக நிறுவுகிறார்.இதையேதாம் தமிழரசனும் சொல்லிச் செல்கிறார்.

நான்ஆடம் சிமித் மற்றும் ஜோன் மைநார்ட் கேய்னெஸ்,சில்வியோ கெசல் எனும் நவலிபரல் பொருளியாளரை மிக ஆழமாகக் கற்றுத் தேறியபோது இவர்களது வாரிசான பிரிடிறிக் காய்ஜெக்கையும்[ Friedrich A. Hayek] அவரது சீடர்களான மெவுன் பிலேரின் சொசைய்டிக் கூட்டின்  Maurice Allais, Walter Eucken, Milton Friedman, Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler. போன்றோரையும்,அவர்களது தாராளவாதப் போக்கையும் உள்வாங்கிக்கொண்டேன்.இன்றையவுலகத்தின் மிகக் கெடுதியான பக்ககங்களை இவர்களைத் தவிர்த்துப் பார்க்க முடியாது.

கெய்னிஸ் குறித்தத் தத்துவப் போக்கில்:

1: நுகவர்வும் சேமிப்புறவுக் கோட்பாடு,
2: நிதியீடுக்கோட்பாடு;
3: பணச் சுழற்சிக் கோட்பாடு

இவைகள் மிக முக்கியமானது இன்றைய நவ லிபரல் பொருளாதாரப் போக்கில்.

நாவலனது நூலுக்கான விமர்சனத்துக்காக இந்தப் பரப்புகளில் தமிழரசன் நிறையவே கால்பதித்துச் செல்கிறார்.ஒரு மார்க்சிய அறிஞன் பலதரப்பட்ட தளங்களைத் தனக்குள் உள்வாங்கிக் கருத்தாடுபவனென்பதைத் தமிழரசன் நிரூபிக்கின்றார்.

நாம்,அந்த வெளிகளுக்குள் பிராயாணித்து விட விருப்பம் கொண்டாலேதவிர இன்றைய பொருளாதார நகர்வுகளைக்குறித்து விளங்கிக்கொள்ள முடியாது.இதைத் தவிர்தோமானால் மில்டன் பிறீட்மானது[Milton Friedman ] "யுத்தம் செய்து அழித்தல் மீளக் கட்டுதல்,இடங்களைக் கைப்பற்றுதல்,வாழ்விடங்களைவிட்டு மக்களை அழித்துத் துரத்துதலெனுங்" கோட்பாட்டுக்குள் சிக்கி விடுவோம்.

எனவே,இந்த வெளிகளுக்கூடாக நகர்த்தப்படும் இந்த இறுதிப் பகுதியானது இன்றைய உலகமயப் பொருளாதாரப் போக்குகளில் அமையப்போகும் அதிகார-ஆதிக்க மாற்றங்களைப் புரிவதும் அந்த புரிதலின் வழி புதிய வியூகங்களைத் தேடிக்கொள்வதும் ஒடுக்குப்படும் மக்களது விடிவுக்கு அவசியமானது நண்பர்களே.

வாசியுங்கள்.கட்டுரை மிக நீளமானதுதாம்.எனினும், நேரமெடுத்துத் தொடருங்கள்.

அடுத்த விமர்சனத்தை புஸ்பராணியின் அகாலத்துக்கான நூலின் விமர்சனமாக முன் வைப்போம்.

இரண்டொரு கிழமையில் மீளச் சந்தோம்!

நன்றி.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.08.2012


சபாநாவலனின்:தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி!

- நூல் விமர்சனம் : 5

( இறுதிப் பகுதி )

3ம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவக் கட்டம் இருந்தது என்ற நாவலனின் கருத்தாவது, ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவம் நிலவவில்லை என்றே கொள்ளவேண்டும்.

ஆபிரிக்கா, நிலப்பிரபுத்துவத்துக்கு முற்பட்ட இயற்கையுடன் இயைந்த வாழ்வு, வேட்டையாடல் சுயதேவைக்குப் பயிரிடல் என்பன நிலவியது. இங்கு நிலப்பிரபுத்துவம் இருக்கவில்லை. கொலனிக் காலத்திலேயே ஐரோப்பியர் பெரும் நிலப்பரப்பில் பயிர் செய்யத் தொடங்கினர். அரபு நாடுகளில் விவசாயம் பிரதான தொழிலாகவோ நிலம் அதிகாரத்துக்கானதாகவோ  இருக்கவில்லை. அரபு மக்கள் மந்தை மேய்ப்பும் ,நாடோடிப் பண்புகளையும் கொண்டிருந்த மக்கள். நிலையான விவசாயம் செய்யத்தக்க நீர்வளமோ ,ஆறுகளோ அங்கு இல்லை.வாழக் கடினமான புவியியல் நிலையில் அவர்கள் இருந்தனர். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம்களைக் கொள்ளையிடுபவர்களாகவும் அதன் பின்பு அவர்களில் வர்த்தகம் புரிபவர்களாகவும் ஒரு பகுதி மாறுகின்றது. வர்த்தகம் வளர்ந்த பின்பே அரபுக்களின் நாகரீகம் வளர்கின்றது.

நாவலன் எழுந்தபாட்டுக்கு நிலப்பிரபுத்துவம் என்பதை பிரயோகிக்கப் பார்க்கின்றார்.

 
செவ்விந்தியர்கட்கோ ஆபிரிக்க மக்களினம்கட்கோ இதைப் பொருத்தமுடியாது.

அவர்கள் இக்கட்டத்தை வந்தடைய இன்னமும் காலம் இருந்தது. இவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு முந்திய இனக்குழுத்தன்மை படைத்தவர்களாக இருந்தனர். இந்த நாடுகளில் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் இவை அப்படியே கைப்பற்றி ஆளப்படவில்லை என்பதையும் புதிய சமூக பொருளியல் நிலைமைகட்கான அடித்தளம்கள் இடப்பட்டன என்பதையும் நாம் காணவேண்டும். நிர்வாக முறைகள், புதிய முதலாளிய பண்பாட்டின் தொடக்கம், சுதேசிய மொழிகள் பரவலாதல், எழுத்து வடிவம் பெறல், அச்சுக்கலை வளர்ச்சி என்பன தேசியம், முதலாளியம் என்பன வளர்வதற்கான தொடக்க நிலையாயின. மேற்கு நாடுகளின் மூலதன உருவாக்கம் என்பது அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டு பிடிக்கப்பட்டமை இந்தியா, சீனா, ஆபிரிக்கா கைப்பற்றப் பட்டமையூடாகவே  நடந்தது. தம் சொந்த நாட்டுள் பெறப்பட்ட செல்வம் மூலப்பொருள், சந்தையுள் அவை தங்கியிருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம், சமமற்ற பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் நிலவின.
 
 
‘உலக மயமாக்கலை விளக்க வந்த நாவலன், மலிவான உழைப்பு, மூலதனம், எரிபொருள், சந்தைதேடி ஏகாதிபதிதியங்கள் 3ம் உலக நாடுகட்கு வந்தன’என்கிறார்.
 
 
உலக மயமாதல் [Globalization ]என்பது ஏகாதிபத்திய பொருளாதார சகாப்தத்தில் தவிர்க்கமுடியாத கட்டமாகும்.

ஏகாதிபத்தியம்கள், உலகமயமாதலுக்கு முன்பே 3ம் உலக நாடுகளின் மலிவான உழைப்பு, மூலவளம், எரிபொருள், சந்தை என்பனவற்றை தடையின்றி பெற்று வந்தன. ஆனால் ,உலக மயமாதலின் விளைவாக மேற்கத்தைய தொழி நுட்பங்கள், நவீன உற்பத்தி முறைகள் கீழைநாடுகட்கு பரவியுள்ளமையும், சொந்த உற்பத்தி ஆற்றலையும் தம் கண்டம் தழுவிய சொந்தமூலதன பலத்தைப் பெற்றமையும் நாவலனுக்கு புலப்படவில்லை.

ஆசியாவில் சீனா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா என்று பல தொகை நாடுகள் பொருளாதார பலத்தை பெறத் தொடங்கி விட்டன.

 உதாரணமாக :  சீனாவானது 1978 இல் உலக ஏற்றுமதியில் 0.8வீத கொண்டிருந்தது. இது 2006 இல் 20 வீதமாக வளர்ந்தது.2005இலேயே சீனாவின் பொருளாதாரம் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தாண்டி வளர்ந்தது. உலகில் 4 வது இடத்தை வகித்தது. 2008 இன் முடிவில் சீனாவின் பொருளாதாரம் உற்பத்தி ஆற்றல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுனகளை முந்தி ,முதல் இடத்தைப் பெற்றுவிடும் என்று மேற்கத்தைய முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர்.

உலக மயமாதலில் வளர்ச்சிக்கு ஐம்பது, நூறு ஆண்டுகள் எனத் தேவைப்படவில்லை.

பிரிட்டிஸ் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்க 58 வருடங்கள் எடுத்தது. அமெரிக்கப் பொருளாதாரமானது இரு மடங்காய் ஆக 47 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால், சீனப் பொருளாதாரம் 9 வருடத்துக்குள் இரண்டு மடங்கால் வளர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் 4 வருடங்களில் கிராமங்களில் இருந்து 70 மில்லியன் மக்கள் நகரம்களில் குடியேறினர். 2005 ல் மட்டும் 147 மில்லியன் மக்கள் நகரம்கட்கு வேலை தேடி வந்தனர். இப்போது, வருடா வருடம் 60 மில்லியன் மக்கள் வேலைதேடிச் சீனப் பெரு நகரம்கட்கு வருகின்றார்கள். 2000 ஆண்டில் 562 ஆக இருந்த சீன நகரம்களின் தொகை 2006 இல் 688 ஆக ஆகியுள்ளது.
 


 
schanghai,Peking,Chongqing போன்ற பெரு நகரம்கள் மேற்குலகின் லண்டன், பாரிஸ், பெர்லின், பிராங்பேர்ட், நியூயோர்க் போன்ற நகரம்களை சிறு பட்டினம்களாக மாற்றிவிட்டது.

சீனக் கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் ,சீனாவின் பெரு நகரம்களில் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் பெரும்படையை உற்பத்தி செய்துவிட்டார்கள்.

பெரியபாட்டாளி வர்கக்ம் படைக்கப்பட்டுள்ளது என்பது உலக மயமாதலின் சோசலிசம் சார்பான எதிர்வினையாகும். மேற்குலக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவுள் நுழைந்த போதும் அதற்கான தொழிநுட்பம் மூலதனமிடலில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. Ford,Benz,Bmw,VW என்பன இன்று சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி சீன மூலதனம் – சந்தை நலன்கட்கு கட்டுப்பட்டே வெளி வருகின்றன.

 ஜெர்மனியின் பயணிகள் பஸ்சான "Man"இன் "Neoplan starliner"விலை 350,000 Euro ஆகும். இதே தரம் மாதிரியில் சீன உற்பத்தியான "Zonda A9" 100.000 euro விலையில் முழு ஆசிய ஆபிரிக்க அரபு நாட்டுச் சந்தைகளில் நுழைந்துவிட்டது. Benz இன் Smartஐ சீனா IAAபெயரில் மிக மலிவாகத் தயாரிக்கின்றது. சீன Mokick நிறுவனம் "Mad Ass" மோட்டார் சைக்கிளைத் தயாரித்து 2,000 Euro விலைக்கு ஜெர்மனியச் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சீன வாகன, உற்பத்தியால் மட்டும் ஜெர்மனிக்கு வருடாவருடம் 30 மில்லியன் யூறோ நட்டம். ஜெர்மனி தயாரிக்கும் அதே பொருட்களை சீனா உற்பத்தி செய்யத் தொடங்கியமை காரணமாக 2006 இல் மட்டும் ஜெர்மனியில் 70,000 வேலை இடங்கள் இழக்கப்பட்டது. இது 2005 ஐ விட 5 மடங்கால் அதிகம்.
 
 
வாகனம் , விமானம், ஆயுதம், எலக்ரோனிக், மருந்துப் பொருள்,மருந்து உபகரணங்கள். விளையாட்டு,மற்றும் தோல்பொருட்கள், ஆடையணிகள் என்பனவற்றுடன் அணு மற்றும் உயிரணுத் தொழிநுட்பம் விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தொழிற்துறைகளையும் சீனா பெற்றுவிட்டது. இன்று உலகின் மிகப் பெரும் நிலக்கரி உற்பத்தி நாடும் சீனா தான்.எண்ணை எரிசக்திக்கு மாற்றான சக்திகளைப் பெற சூரிய ஒளி, காற்று,நீர்,கடலலை, உயிரியல் வாயுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் துறைகளையும் அவர்கள் வளர்த்துள்ளனர். 2006 இல் சீனாவானது 103 மில்லியாடன் [103 Milliarden Euro = 103 billion euro .] யூறோக்களை புதிய ஆய்வுகட்கு மட்டும் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் பாதைகள், பெருந்தெருக்கள், பாலம்கள், ரெயில்பாதைகள், புதிய விமான நிலையங்கள் பெருகி மக்களிடையேயான தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் அதிகரிக்கின்றது.

 2005 இல் சீனாவில் 1926 தினசரிப் பத்திரிகைகள் ,9500 சஞ்சிகைகள், 273 வானொலிகள், 302 தொலைக்காட்சிச் சேவைகள் இருந்தது.ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் சீனப் பொருட்களால் நிரம்பியுள்ளது. ஜெர்மனியில் 40 வீத கொம்பியூட்டர் ,எலக்ரோனிக் பொருட்கள் சீன இறக்குமதியாகும். 2008 இல் சீனாவின் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 2007ஐ விட 20 வீத அதிகரிப்பு கைத்தொலைபேசி,கம்பியூட்டர், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ,எலக்ரோனிக் பொருட்கள், மருந்துவகை, மருத்துவ உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள், ஆடை வகைகள், விளையாட்டுப் பொருள், தோல்ப்பொருள், உணவுப்பொருள், வீட்டுத் தளபாடங்கள் என்பன பெரும்பகுதி சீனாவில் இருந்தே ஜெர்மனிக்குள் இறக்குமதியாகின்றது.

 10 வருடம் முன்பு ,இந்தப் பொருட்களை பெரும் பகுதியாக வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்த நாடாக ஜெர்மனி இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு பொருட்களை மலிவாகத் தயாரிக்க முடியவில்லை. உற்பத்திச் செலவு அதிகம், மூலப்பொருள் இறக்குமதியில் தங்கிய நாடுகள் இவை.

சீனாவில் ஒரு மணி நேர ஊழியம் 0.70  சென்ட்களாகும் [0.70 Euro].  இது ஜெர்மனியியல் மணிக்கு  27 யூறோவாகும். இதனால் சீனாவுடன் உலகச் சந்தையில் மேற்கு நாடுகளால் போட்டியிட முடியவில்லை.
 
 
2007 இல் சீனாவின் அரசநிதி இருப்பு 1.2 பில்லியன் டொலர்களாக இருந்தது 2008 இல் இது 2 பில்லியன் [Billion auf Englisch Trillion] ; [2010/ 2011 : Währungsreserven in Millionen US-Dollar : 3.201.680  ] டொலர்களாக அதிகரித்துள்ளது [Exportstarke asiatische Länder verzeichneten seit etwa einem Jahrzehnt ein rasantes Anwachsen der Währungsreserven. Besonders deutlich wird dies am Beispiel der Volksrepublik China. Dieses Land hat nach mehreren Jahren einer äußerst erfolgreichen Handelsbilanz im Jahr 2006 sogar Japan in der Summe der Währungsreserven überholt und besitzt seitdem die höchsten Währungsreserven der Welt. Per 31. März 2008 beliefen sich diese auf 1,682 Billionen US-Dollar.[20] Im April 2011 betrugen die Devisenreserven Chinas erstmals über drei Billionen US-Dollar.[21] ]. இதேசமயம் முழு ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மொத்த நிதி இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். அதாவது சீனா ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான அரச நிதியிருப்பைக் கொண்டுள்ளது என்று மாக்சியவாதியும் ,சமூக ஆய்வியல் அறிஞருமான Oskar Negt 2007 இல் எழுதிய சீனாவின் வளர்ச்சி பற்றிய "Modernisierung im zeichen der drachen china und der Europaische Mythos der Moderne"நூலில் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகட்கு வெளியேயான ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிகளை நாவலன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

நாவலன் , 1990 களில் உலக மயமாதலுக்கு முன்பான இடதுசாரி பார்வையை சுமந்து கொண்டிருப்பதுடன் உலக மயமாகும் பொருளாதாரத்தை அரசியல் நிகழ்வுப் போக்கின் உள்ளார்ந்த விளைவுகளை படித்தறியத் தவறினார்.

 1947 இல் ; Harry.S.Truman மார்சல் திட்டத்தைக் கொண்டு வந்து இரண்டாம் உலக யுத்தத்தால் நாசமறுந்து கிடந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளைத் தற்காலிகமாகக் காத்தனர். இதன் உலக சோசலிசத்தை நோக்கி இந்த நாடுகள் செல்லாமல் செயற்கையாகத் தடுக்கப்பட்டது. ஆனால், இன்றைய உலக மயமாதலின் பின்பு அமெரிக்காவிடமோ மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம்களிடமோ ஒருவரை ஒருவர் காக்கும் சக்தி கிடையாது.

ஆசிய, லத்தீன் அமெரிக்க தொழிற்துறையும் ,மூலதனமும் உலக மூலதனத்தினதும் தொழிற்துறையினதும் தவிர்க்கமுடியாத பிரிவு என்ற போதும் மேற்குலக நாடுகள் தமது முதன்மை இடத்தை இழந்து விட்டன.


அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வெளியே புதிய 100 க்கும் மேற்பட்ட உலகப் பெரு நிறுவனங்கள் தோன்றிவிட்டன என்று அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கட்கான ஆலோசனை அமைப்பான Boston Conating Grop (BCG) மதிப்பிட்டுள்ளது. இந்திய Tata , suzlon Energy, சீனக்காகிதப் பொருள் உற்பத்தி நிறுவனமான "Nine Dragons Paper" மெக்சிக்கோவின் Grupo Bimbo பிறேசிலின் Marcopolo என்று பல நிறுவனம்கள் மேற்குலக நிறுவனம்களின் தனிமுதல் இடத்தை கைப்பற்றிவிட்டன. மேற்கைரோப்பிய நாடுகளின் பாரம்பரிய வைன் உற்பத்திக்கு கூடப் போட்டியாக லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் வந்துவிட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் 3.4 மில்லியன் கெக்டர் நிலத்தில் பயிராகும் வைன் ,இதனால் தேக்கத்துக்கும் விலை வீழ்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது.வருடம் 1.5 மில்லியன் லீட்டர் வைன் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றது. ஐரோப்பிய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி வைன் நுகர்வைப் பாதித்துள்ளது என்பதுடன் உலக மயமாதலின் சுதந்திரமான முதலாளித்துவ சந்தைச் செயற்பாட்டில் மேற்கு ஐரோப்பிய நாட்டு வைன் உற்பத்தியாளர்கட்கு அரச மானியம் வழங்கியும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
 
 
எரிபொருள் மற்றும் மூல வளங்கள் ஏகாதிபத்திய கட்டுள் இருப்பதாக நாவலனின் பார்வையும் இன்றைய நிலைமைகளை அவரால் உய்த்துணர முடியவில்லை என்பதற்கு நிரூபணமாகின்றது.

முதலில் எரிபொருள் பிரச்னையை நாம் விளங்க முற்படால். 1910 இல் உலகில் 34.12 மில்லியன் தொன் நிலக்கரி வருடம் பாவிக்கப்பட்டது. அப்போது ஐரோப்பிய நாடுகள் நிலக்கரியுள்ள பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வர தம்மிடையே போர் செய்தன. ஆனால் , இன்றைய உலக மயமாகிய பொருளாதாரத்தின் எரிபொருள் பசியானது பிரமாண்டமானது.

உலக மனிதர்கட்கு இன்று, 100 மில்லியன் தொன் எண்ணெய் தேவை என்பதுடன் எரிவாயு, சூரியசக்தி, நீர், அணு, நிலக்கரி உயிரியல் வாயு, கடல் அலைகள் ஊடாகக் கூடச் சக்தி பெறும் காலமிதுவாகும். மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல தொழிற்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த நாடுகளில் பெரும் பகுதி மக்கள் காலைக் கடன், குளிப்பு, சுடுநீர்ப் பாவனை, வீட்டை வெப்பமூட்ட கோப்பு, தேநீர், உணவு தயாரிப்பு, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கொம்பியூட்டர், பொழுதுபோக்கு, எலக்ரொனிக் பொருட்கள், கார்,விமானப்பயணம், சுற்றுலா சகலத்திற்கும் இன்று எரிசக்தி தேவை. தொழிற்துறை வளர வளர விஞ்ஞானமும் வாழ்க்கைத் தரமும் உயர உயர இதன் தேவை உயர்ந்து வருகின்றது. எனவே, உலக வளம்கள் சரியாகப் பங்கிடப்படாத முதலாளிய அமைப்பில் இதைப் பெறுவதற்கான போராட்டமும் மூர்க்கமாக மாறிவிட்டது.

ஜெர்மனியில் ஒரு மனிதருக்கு அவர் வாழ்நாளில் தலைக்கு 225 தொன் நிலக்கரி 116 தொன் எண்ணெய் மற்றம் அது சார்ந்த பொருட்கள் 40 தொன் இரும்பு, 1.1 தொன் செம்பு 200 கிலோ Schwefel [http://de.wikipedia.org/wiki/Schwefel  ]  தேவை.ஆனால் ,இப்போ உலக மயமாதலின் பின்பு மேற்குலக மனிதர்களின் வாழ்க்கைத் தரம் நுகர்வு இரண்டுக்கும் புதிய போட்டியாளர்கள் 3ம் உலக நாடுகளில் படைக்கப்பட்டு விட்டனர். தமது வளர்ச்சிக்கு ஏற்ற பங்குகளையும் பொருளாதார உரிமைகளையும் கோரத் தொடங்கி விட்டனர். மூலப் பொருட்கள், சந்தைக்கான போட்டி என்பது மேற்குலக நாடுகளிடையே என்பது மாறி 3ம் உலக நாடுகளுடனான மேற்குலகப் போட்டிகளாகிவிட்டது.

மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது 400 ஆண்டு கால உலக வரலாற்றின் பொருளாதார, இராணுவ மேன்நிலையை இப்போ இழக்கத் தொடங்கிவிட்டன இதைத் தான் நாவலன் காணத் தவறிப் போனார்.

மேற்குலக எரிபொருள் நிறுவனம்களான BP, Exxom, MobilChevron, Taxaco,Gulf,Shell போன்ற உலகு தழுவிய நிறுவனம்களே மேற்குலக அரசியலை நிர்ணயித்தன.நினைத்தபோது இந்த நாடுகளை போர் செய்ய வைத்தன. இப்போ கிழக்கு ஐரோப்பா முதல் 3ம் உலக நாடுகள் வரை புதிய உலகப் போட்டியாளர்கள் வந்துவிட்டனர். ரஸ்சிய-Gasprom,சீன CNPL , ஈரானின் NIOC , வெனிசூலாவின் ; PDVSA , பிறேசிலின் PETROBAS , மலேசிய PETRONAS என்பன தோன்றி விட்டன. முன்பு இப்பிரதேச எண்ணெய் வளம்களும் ,எண்ணெய் இருப்பும் உள்ள நாடுகள் மேற்குலகத்துக்கு வெளியே உருவாகி வளர்கின்றன. எண்ணை வர்த்தகமென்பது பாரம்பரியமாக அமெரிக்க நாணயமான டொலரில் நடைபெற்ற ஒன்றாகும்.இப்போது ஈரான் தொடக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை யூறோ முதல் தமது சொந்த நாணயம்களில் எண்ணை வர்;த்தகத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

டொலரின் வீழ்ச்சி, மேற்குலக நாடுகளின் கார்கட்கு குறைந்த விலையில் எரிபொள் தர முடியாமை என்பன அவர்களின் வாகன உற்பத்தி நிறுவனம்களை நட்டம் ஆள்குறைப்புக்கும் தள்ளிவிட்டுள்ளது. மத்திய கிழக்கு , வட ஆபிரிக்க நாடுகளில் 798 மில்லியாடன் பெரல் எண்ணை இருப்பு உண்டு. ஆனால் ,இந்த நாடுகள் மேற்குலக எதிர்ப்புக்கும் இஸ்லாமிய ஆதரவுக்கும் வந்துவிட்டதுடன் தமது எரிபொருளுக்கான சந்தையை சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட ஆசிய நாடுகளில் பெற்று விட்டன. உலகப் பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற இஸ்லாமுக்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தப் பயங்கரவாதம் இந்த நாட்டு மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பக்கம் வரப் பண்ணியுள்ளது.

 உண்மையில் ஈராக் யுத்தம் என்பது இந்தியா, சீனா உட்பட வளரும் ஆசிய நாடுகளிடமிருந்து மத்திய கிழக்கு எண்ணை வளத்தைக் காக்கும் முதல் முயற்சியாகும். புஸ்ஸின் பொருளாதார ஆலோசகரான lawrence Lindsey ஈராக்கிய யுத்தம் தொடங்கியபோது ‘ஈராக்கில் ஏற்படும் ஒரு அரசுமாற்றம் தினசரி 3 முதல் 5 மில்லியன் பெரல் எரிபொருளை அமெரிக்காவுக்கு கொண்டு வரும்’என்றார். உப ஜனாதிபதி Richard Cheney வெளிநாட்டு அமைச்சர் Condellezza Rice இருவரும் முறையே "Hailliburton" ,"Chevorn"போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனம்களைச் சேர்ந்தவர்களாவர்.ஆனால் மேற்கு நாடுகள் முன்பு போல் உலக எரிபொருள் வளம்களை தனியே அனுபவிக்கமுடியாது, தனிஆளுமை செய்த காலம் போய்விட்டது.

வடகடலில் [Nord See]பிரிட்டன் நோர்வேக்கு உள்ள எண்ணை வளம் கடந்த 5 வருடத்தில் 20 வீத ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2007 இல் உலகில் 435 அணு உலைகள் இருந்தன. 29 புதிதாகக் கட்டப்பட்டு வந்தது, 64.புதிதாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. இதில் வட தென் அமெரிக்க நாடுகளில் 127 இருந்தது. 5 புதிதாகத் திட்டமிடப்பட்டது. ஐரோப்பாவில் 130 இருந்தது. 2 கட்டப்பட்டது. 1 திட்டமிடப்பட்டது. ஆனால் ,ஆசியாவில் 110 அணு உலைகள் உள்ளது. 19 புதியதாகக் கட்டப்பட்டது. 43 கட்டத் திட்டமிடப்பட்டது. இது அணுசக்தி உற்பத்தியின் தீவிர வளர்ச்சியைக் காட்டியது.
 
 
3ம் உலக நாட்ட வளர்ச்சியினையடுத்து தங்கம், வெள்ளி, Platin உற்பத்தி இரண்டு மடங்காய் அதிகரித்தது. கணனியின்  Chips க்கு Silizium மும் காரின் புகையில் உள்ள காபனீரொக்சைட்டைக் கட்டுப்படுத்தும் Kataly sator தயாரிப்புக்கு Platinஅல்லது Palladium தேவை.நவீன Digital தொழில் நுட்பத்துக்கு கடும் பாவனைகளுடனும் எண்ணை, நிலக்கரி, நிலவாயு நுகர்வும் தொடர்புடையதாகும். ஆபிரிக்காவில் இப்போ அதிக யுத்தம்கள் நடைபெறுவதற்கான காரணம் மேற்குலக நாடுகள் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், பிறேசில் ஆகிய நாடுகளிடம் ஆபிரிக்காவை இழந்து கொண்டு இருப்பதாகும். ஆபிரிக்கக் கண்டத்தல் எண்ணை, எரிவாயு மட்டுமல்ல தங்கம்,வெள்ளி Platin,செம்பு, உரான், பொஸ்பரஸ், இரும்பு,Malanja,Bauxi,Kobalt,Coltan என்பன உண்டு,Coltan கைத்தொலைபேசித் தயாரிப்புக்கு முக்கியமானது. இதன் விலை வெள்ளியை விட அதிகமாகும். கொங்கோவில் உள்ள malanja,Bauxi,Kobalt,coltan வளம்களை தொடர்ந்து பாதுகாக்கவே மேற்குநாடுகள் உள்நாட்டு யுத்தத்தை[Der Fluch der Reichtümer: Krieg um Rohstoffe des Kongo :Der Reichtum des Kongo ist sein Fluch. Diamanten, Kupfer, Kobalt, Gold, seltene Erden, Edelhölzer - riesige Mengen leicht abbaubarer, gut absetzbarer Roh- stoffe haben schon vor hundert Jahren die Begehrlichkeiten der damaligen belgischen Kolonialherren geweckt. Fast 40 Jahre lang konnte der Diktator Mobutu Sese Seko die Verteilung der Schätze unter seinen Anhängern und internationalen Konzernen kontrollieren. Seit seinem Sturz 1997 hat sich eine Vielzahl von Interessenten auf den Kongo gestürzt. Der Bürgerkrieg ist ein Verteilungskrieg, bei dem es längst nicht mehr um Ideologie, um politische Ziele geht.   http://www.ag-friedensforschung.de/regionen/Kongo/rohstoffe.html   ] தொடங்கி வைத்தன. ஆயுதக் குழுக்களை பயிற்றுவித்து போரில் இறக்கியுள்ளன.சிம்பாவேயில் முகாபே அரசுக்கு எதிராக மேற்குநாடுகள் எதிரணியான MDC" க்கு நிதி தந்து ஆதரிக்கின்றன.  சிம்பாவேயில் உள்ள Platin, இரத்தினக்கற்கள் உட்பட வளம்கள் மேற்குநாடுகளிடமிருந்து சீனாவின் கைகளுக்கு மாறியமையே இதற்குக் காரணமாகும்.
 
 
உலகின் 90வீத Platin ஆபிரிக்காவிலேயே உள்ளது.கொங்கோவில் மட்டும் உலகின் 40வீத Phosphat வளம் உள்ளது.1999க்கும் 2006 இடையில் சீன- ஆபிரிக்க வர்த்தகம் 20 மடங்கால் 35 மில்லியாடன் டொலர்களாக அதிகரித்தது.அங்கோலா,நைஜீரியா,சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா எங்கும் சீனாவின் மிகப் பெரும் முதலீடுகள் இடப்பட்டது .அங்கோவில் மாத்திரம் 10 மில்லியாடன் டொலர்களை சீனா முதலிட்டுள்ளது. அங்கோலா 2007 இல் 10 வீத வளர்ச்சியை எட்டியது. 2008 இல் 20 வீத வளர்ச்சி பெற்றுள்ளது.அதன் எரிபொருள் வளங்கள் சீனாவுக்கு பெரும்பகுதியாய் செய்கிறது.ஆபிரிக்காக வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டு யுத்தம்களையும் மீறி வளரவும் முயல்கின்றது. அங்கோலா ஆபிரிக்காவில் மிகவும் வேகமாக வளரும் நாடாகும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தொழிற்துறை என்பனவற்றுக்கு அது 10 மில்லியாடன் டொலர்களை முதலிட்டுள்ளது. சீன அரசு நிறுவனமான China Road & bridgecorp அங்கோலா, சூடான், நமீபியா, மாலி, உகண்டா, சியராலியோன் ஆகிய நாடுகளிலும் பாலங்கள், தெருக்கள் என்பவற்றை அமைக்கின்றது.

சீன, இந்திய , தென்கொரிய நிறுவனம்கள் ஆபிரிக்கா எங்கும் துறைமுகம்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள், விளையாட்டரங்குகள்,புகையிரதப் பாதைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் என்பனவற்றை அமைக்கின்றன. அங்கோலாவில் எண்ணை, இரும்பு,காதிகம் சீமெந்து தொழிற்சாலைகளை சீனா அமைக்கின்றது. அதன் அண்டை நாடுகளுடனான தெருக்கள், புகையிரதப் பாதைகள், தொலைத் தொடர்புகள், ஆபிரிக்கா 2005 இல் 5 வீத வளர்ச்சி, கடந்த 15 வருடத்தில் இல்லாத குறைவான பணவீக்கம் ஆபிரிக்க எயிட்ஸ், பட்டினி, உள்நாட்டு யுத்தம், குழந்தை மரணம்கள் இவைகளால் மட்டுமே நிரப்பிக் கிடப்பதான பழைய மேற்குலகப் பார்வையை நாம் விலக்கிப் பார்த்தால் ஆபிரிக்கா முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியை பெறத் தொடங்கிவிட்டது.

நைஜீரியா 6.5% ,கானா 5.8 %,சூடான் 8 % ,கென்யா 6.5 % ,தான்சானியா 6.9 %, சிம்பாப்வே 6.5% , தென் ஆபிரிக்கா 4.8 %  என்று வளர்ச்சியைக் காட்டுகின்றன.சூடான், சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா, நைஜீரியா உட்பட ஆபிரிக்க நாடுகட்கு எதிரான மேற்குலகின் கடும் பிரச்சாரம் மனித உரிமைகள் பற்றிய அலறல்களை இந்தப் புலத்திலேயே காணவேண்டும்.
 
 
‘ஆபிரிக்க யூனியன்’ என்ற அமைப்புடன் தற்போது தென்ஆபிரிக்கா, நமீபியா உட்படப் பல நாடுகள் ஒருங்கிணைந்து "Sach" என்ற பொதுஅமைப்பை உருவாக்கியுள்ளன.

2010 இல் சீனாவுடனான ஆபிரிக்க நாட்டு வர்த்தகம் 100 மில்லியாடன் டொலர்களைத் தாண்டி விடும் என்று மதிப்பிடப்படுகின்றது.

தென் ஆபிரிக்கத் துறைமுகம்களான Durban,east London,Port Elizabeth இருந்து சீனாவுக்கு இரும்பு, நிலக்கரி, Platin ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தொகை அதிகரித்து விட்டது. 1000 க்கு மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் உள்ளது. கடந்த 7 வருடத்தில் 750,000 சீனர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீன நிறுவன நிபுணர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆக இவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கட்கான கடைகள் சீன உணவு பகுதிகள், வீடுகள் எழுகின்றன. சீன உயர் நிர்வாகிகட்காக ஆடம்பர மாளிகைகள்,சீன மருத்துவர்கள் நுளம்புகளை சமாளிக்க வல்ல வலைகள், குளிரூட்டப்பட்ட வசதிகள், டேபிள் டெனிஸ் விளையாட்டு என்பனவும் ஆபிரிக்கக் கண்டத்தில் நுழைந்துள்ளது. சீன- ஆடைகள், தொலைக்காட்சி, கொம்பியூட்டர், குளிர்சாதனப் பெட்டி, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள், ஆடம்பர பஸ்கள், எலக்ரோனிக் பொருட்கள், ஆயுதம்கள், விமானம்கள், உணவுப் பொருட்கள்,குண்டு துளைக்காத வாகனங்கள் என்பன மேற்குலக உற்பத்திகளை விட மிகவும் மலிவாக ஆபிரிக்கச் சந்தைக்குள் வந்துள்ளது. சீன ஊடகவியலாளர்கள் தென்ஆபிரிக்கா, அங்கோலா, நைஜீரியா, கானா, கென்யா, உட்பட பல நாடுகளில் நிரந்தரமாக உள்ளனர். ஆசிய நாடுகள் ஆபிரிக்க வளம்கள், மற்றும் அரசியல் போக்குகளில் முக்கியத்துவம் பெற்று விட்டன. சீனாவுக்கான மூன்றிலொரு பகுதி எண்ணை ஆபிரிக்காவிலிருந்தே வருகின்றது. சூடானின் 25 % எண்ணை வளம் உட்பட ஆபிரிக்க எண்ணை வளம்கள் சீனாவின் Petrochia மற்றும் "Cnool" என்பனவற்றிடம் உள்ளது. 40%சீனாவின் எரிவாயு ஆபிரிக்காவிலிருந்து தான் வருகின்றது. இந்திய எரிபொருள் நிறுவனமான "Onel"ஆபிரிக்காவில் உள்ளது.
 
 
சீனாவுடன் ,இந்தியக் கூட்டு மட்டுமல்ல, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ, இலங்கை,தாய்வான், தாய்லாந்து, மலேசியா,இந்தோனேசியா,வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்பன ஒரே நிதி மற்றும் பொருளியல் கூட்டுள் வந்துள்ளன.

தென் சீன நகரான kunmiing இல் இருந்து லாவோஸ்,கம்பூச்சியாவின் துறைமுகமான Sihanouk ville தொடர்புடன் தாய்லாந்துக் குடாக் கடல்வரை சீனா 2,000 கிலோ மீற்றர் வரை பாதை அமைக்கிறது. இந்த நாடுகளில் பெரும் பொருளாதார முதலீடுகள் செய்கிறது பர்மா,வடகொரியா சகல இடமும் சீன மூலதனம் பரவுகின்றது. ஆசிய நாடுகள் உலக வங்கி, ஐ.எம்.எவ், இடம் கடன் பெற்ற காலம் போய்விட்டது.

சீன மூலதனம் தொழிற்துறைகள் இப்பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. கம்பூச்சியாவுக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் தருவதாக வாக்களித்துவிட்டு அதை நிறுத்திய போது சீனா கம்பூச்சியாவுக்கு 600 மில்லியன் டொலர் கடனாகத் தந்தது. சீனா ஆசியாவினது மட்டுமல்ல 3ம் உலக நாடுகளது வங்கியாகவும் ஆகிவிட்டது.

மேலும் சீனாவும் ரஸ்யாவும் இணைந்து மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து "Shanghai Cooperation Organisation" என்ற கூட்டை உருவாக்கியுள்ளன. இதை மேற்கு நாட்டு ‘ஊடகம்கள்’ கிழக்கின் நேட்டோ கூட்டமைப்பு’ என்று பெயரிட்டன.

2007 இல் அமெரிக்க விமானப்படை , கப்பற்படை என்பன கூட்டாக சீன- ஜப்பானிய-தாய்வான் கடற்பரப்பில் தனது நவீன விமானம் தாங்கிக் கப்பலான "Kitty Nawk" தலைமையில் 12 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பயிற்சி நடத்திக் கொண்டு இருந்தபோது இப்பகுதியின் கீழாக சீனாவின் மிக நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இவர்கள் அறியாதவாறு கடந்து சென்றுவிட்டது. அந்த மட்டத்துக்கு சீன இராணுவத் தொழிற்துறையும் ஆற்றல் மிக்கதாகிவிட்டது. 1957 இல் சோவியத் யூனியனின் ‘ஸபுட்நிக்’ விண்வெளிக் கோள் ஏவப்பட்ட போது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒத்த அதிர்ச்சி இதிலும் ஏற்பட்டது என்று மேற்குலக ஊடகம்கள் எழுதின.

சீனா உட்பட ஆசிய உற்பத்திப் பொருட்கள் தரம் குறைந்தவை. மேற்குலக உற்பத்திகளை கொப்பியடித்தவை என்ற பிரச்சாரம் ஜெர்மனி போன்ற மேற்கு நாடுகளில் நடக்கின்றது.

1770 இல் பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்த பின்பு அதைக் கொப்பி பண்ணியே ஏனைய ஐரோப்பிய நாடுகள் தொழில் மயமாகின.

ஜெர்மனியானது 1850 களில் பிரிட்டனைப் பின்பற்றியே தொழில் மயமாகியபோது அதன் உற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஸ் உற்பத்தி போல் தரமாக இருக்கவில்லை. பிரிட்டன் உட்பட ஏனைய மேற்கு ஐரோப்பிய சந்தைகட்கு ஜெர்மனியப் பொருட்கள் வந்தபோது போட்டி மற்றும் ஜெர்மனியப் பொருட்களின் தரக்குறைவுகளைக் காட்டவே ஜெர்மனியப் பொருட்களுக்கு Made in Germany என்று உற்பத்தி அடையாளம் இடப்படவேண்டும் என்று பிரிட்டன் கட்டளையிட்டது. பிற்காலத்தில் ஜெர்மனி வளர்ச்சிப் போக்கில் பிரிட்டனை விட சிறந்த தரமான உற்பத்திகளைச் செய்தது Made in Germany என்பது அப்பொருளின் தரத்துக்கு அடையாளமானது. இது சீனாவுக்கும் பொருந்தும்.
 
 
‘கொலம்பியாவும் பிறேசிலும் வியட்நாமும் ஒப்பிடமுடியாத வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளின் சமூக அமைப்பு வளம், மக்கள் தொகை என்று மாறுபாடுகள் உண்டு. என்று நாவலன் கூறுகிறார்.
 
 
இப்படித் தனித்தும் பிரித்தும் பார்க்கும் எண்ணப்போக்கு நாவலனிடம் எப்படி வந்தது, தமிழ்தேசியவாதிகளின் தனித்தவில் அரசியல் பாதிப்புக்களாலும் தமிழ்நாட்டின் தனியிருப்பு, தனித்தவளை தேடும் போக்குகளாலும் இவர் சிந்தனை செய்ய முடியாது தடுக்கப்பட்டார் என நாம் கொள்லலாம். நாவலன் காட்டும் நாடுகட்கு இடையே இருப்பது போன்ற வேறுபாடுகளை மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே இல்லையா?

ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இவை கிடையாதா?

இப்படி இருக்க இவை எப்படி ஐரோப்பியக் கூட்டமைப்பாக நாட்டோவாக இணைகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறுபாடுகள் இல்லையா? அப்படி இருக்க இவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இந்த நாடுகளிடையே ஒரே விதமான அமைப்புக்களை உடையவை என்ற ஒற்றுமை இல்லையா? வேறுபாடுகள் என்பதே மறுமுனையில் ஒருமைப்பாட்டையும் கொண்டது தானே?

கொலம்பியா, பிறேசில், வியட்நாம் என்பன விவசாயப் பொருளாதார உற்பத்தி வடிவம்களில் இருந்து இப்போ உயர்தொழிற்துறை நாடுகளாக மாறுவது என்பதில் ஒன்றுபட்ட இயல்புகள் இல்லையா? வியட்நாம் நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயிகட்கு நிலம் வழங்கிவிட்டது என்றால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறேசில், பொலிவியா, வெனிசூலா,நிக்கரகுவா, சிலி, ஆஜன்டீனா என்று முழு நாடுகளுமே நிலச்சீர்திருத்தம் விவசாயிகட்கு நிலம் தருவது, கல்வி,சுகாதாரம், சமூகசேவை உட்பட முதலாளிய வழிப்பட்ட சீர்திருத்தம்களைச் செய்வது ஒத்த தன்மையை வெளியிடவில்லையா? லத்தீன் அமெரிக்கா உட்பட ஆசிய நாடுகளும் தமது நூற்றாண்டு கால சமூக உறக்கத்தை கலைக்கத் தொடங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் போர்த்துக்கேய மொழி பேசும் பிறேசிலும் பிரான்ஸ் மொழி பேசும் கெயிட்டியும் ஆங்கில மொழி பேசும் ஜமேக்காவும் ஏனைய ஸ்பானிய மொழி பேசும் நாடுகளுடன் ஒரே கூட்டாக கண்டமாக உருவாகும் நிகழ்வுப்போக்கு நடைபெறுவது ஏன் நாவலனுக்கு எட்டவில்லை?
 
 
வெனிசூலா இல் எழுந்த லத்தீன் அமெரிக்க ஜனநாயக மயமாகும் இயக்கம்கள், பொலிவியா, எக்குவடோர், பராகுவே, பிறேசில், ஆஜன்டீனா, சிலி, நிக்கரகுவா, கௌத்தமாலா, உருகுவே என்பன கியுபாவுடன் ஒன்றிணைந்து "Marcosu" என்ற பொதுக் கூட்டமைப்பாக செயற்படத் தொடங்கியுள்ளன. இந்த நாடுகள் தம்மிடையேயான கூட்டான நிதி நடவடிக்கைகட்காக’தென்பகுதி நாடுகட்கான வங்கி (Banco del sur) யை 7 மில்லியாடன் டொலர் மூலதனத்துடன் ஆரம்பித்துள்ளன. இது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கிகட்கு எதிராக தமது கண்டத்தில் செயற்படும்.இதனால் லத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகள் தம்மிடையே பொருளாதாரம், நிதி நடவடிக்கைகளில் இணைகின்றன. டொலர் நாணயத்துக்கு எதிராக ஒரு பொது நாணயத்தைக் கொண்டு வருவது பற்றிய திட்டம்கள் உள்ளது.

 20 அக்டோபர் முதல் பிறேசில்,ஆஜன்ரீனா இரு நாடுகளும் தம்மிடையே தம் சொந்த நாணயம்களான Pesos,Reals இல் வர்த்தகச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.இதனால் டொலர் இப்பிரதேசங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க சி.என்.என். க்கு எதிராக "Tele Sur" என்ற லத்தீன் அமெரிக்க நாடுகட்கான ஸ்பானிய மொழியிலான தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது அரபுநாடுகளில் செயற்படும் அல்ஜசீரா, தொலைக்காட்சிக்கு சமமானதாகும்.

லத்தீன் அமெரிக்காவை ஒரே தாயகமாய்க் கொள்ளும் இலட்சியத்தை முன்பு சிமோன் பொலிவர், பரபன்டோ மார்ட்டி போன்றவர்கள் கொண்டு இருந்தனர். சேகுவேரா முழுக்கண்டத்தையும் ஒரே நாடாக ஆக்கும் இலட்சியத்தைக் கொண்டு இருந்தார். லத்தீன் அமெரிக்காவின் இன்றைய நாடுகளும் எல்லைகளும் செயற்கையாக நாடு பிடிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்கண்டம் முழுவதும் ஸ்பானியர், செவ்விந்தியர், கறுப்பு இன மக்கள் என்போரே முக்கிய மக்கள் பிரிவாக உள்ளனர். எப்படி கனடாவும் அமெரிக்காவும் ஒரே தேசமாக பல்லின மக்கள் வாழும் நாடாக இருக்க முடியுமோ அவ்வாறே லத்தீன் அமெரிக்கக் கண்டமும் ஒரே நாடாக இருப்பதே அதில் வாழும் மக்களின் வாழ்வுக்கு சாதகமாக இருக்கமுடியும். இங்கு நாவலன் ஏகாதிபத்தியம்கள், கொலனிக்கால நாடு பிடிப்பாளர்கள் செயற்கையாக வகுத்த எல்லைகளையும் நாடுகளையும் அப்படியே ஏற்கிறார்.
 
 
அமெரிக்காவின் 50 மாநிலம்களையும் 50 நாடுகளாகப் பிரிக்கமுடியாதா?

கனடாவையும் ,பிரான்ஸ் மொழிபேசும் கியூபெக் மாநிலம் முதல் பல நாடுகளாகப் பிரிக்கமுடியாதா? இந்த பிரிக்கப்பட்ட நாடுகளை உலக வரைபடத்தில் தனித்தனி நாடுகளாகப பார்த்திருக்க முடியாதா?

 ஆபிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சிறு சிறு நாடுகளாகத் துண்டாடப்பட்ட கண்டங்களாகும். இங்கு நாவலனும் ஏகாதிபத்திய பிரிவினைச் சித்தாந்த வழிப்பட ஒழுகுகிறார். தனித்தனி நாடுகளின் தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் தேடியலைகிறார். அதுவும் அதை உலக மயமாகும் பொருளாதாரத்தின் காலகட்டத்தில்இதைச் செய்கிறார்.
 
 



அமெரிக்கா கண்டம் தழுவிய எழுச்சியும் ஒற்றுமையும் சோசலிசமும் வந்துவிடும் என்ற காரணத்தாலேயே அமெரிக்கா இராணுவ ஆட்சிகளை லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும் கொண்டு வந்தது வளம்களை சூறையாடியது. இன்று கொலம்பியா, மெக்சிக்கோ தவிர அனைத்து நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் பதவிக்கு வந்துள்ளன. இராணுவ அரசுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. முதலாளிய ஜனநாயகம், சோசலிச திசைவழியிலான போக்குகள் வளர்கின்றன. நிலமற்ற மக்கள் ,ஏழைகள், விவசாயிகள், செவ்விந்தியர்கள் ஆகியோருக்கு நிலம்கள் வழங்கப்படுகின்றது. எனவே இம் மக்களின் விவசாய இயக்கம்களாக எழுந்த கொரில்லா இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவ ஜனநாயக இயக்கம்களாக உருமாறுகின்றன. சிலியிலும் ஆஜன்ரீனா எல் சல்வடோலரிலும் வருடத்துக்கொரு சதிப்புரட்சி ,இராணுவ சர்வாதிகாரம் சி.ஐ.ஏ. அரசியல் தலைவர்களை கொலை செய்த காலம் ,அமெரிக்க வாழைப்பழக் கொம்பனி, ‘ ‘ "Chiquita",கொக்கோ கோலாக் கொம்பனி என்பன லத்தீன்அமெரிக்க வாழை பழக்குடியயரசுகளை ஆட்சி செய்த காலம் இன்றில்லை .

காஸ்ரோவிற்கு அடுத்து லத்தீன்அமெரிக்கநாடுகளில் வெனிசூலாவின்’சாவஸ்’கண்டம் தழுவியஅரசியலின் முக்கிய தலைவராகியுள்ளார். ஜெர்மனியின் முக்கிய சஞ்சிகையான "Der Spiegel"விசேட இதழ் (5,2006)’எண்ணையுடன் சேகுவரா, (Che Guvera mit öl)என்றதலைப்பில் வெனிசூலாவின் சாவஸ் பற்றி கட்டுரை எழுதுகிறது.

வெனிசூலாவின் எரிபொருள் வளத்தால் பெறப்படும் பணம் லத்தீன் அமெரிக்க நாடுகட்கு நிதியாக,நீண்டகாலக் கடனாக செல்வதை எழுதிய கட்டுரை அமெரிக்காவில் கறுப்பு இன ஏழை மக்கள் வாழும் பகுதிகளான, Boston,Newyorker,Bronx,ஆகிய பகுதிகட்கு குளிர்காலத்தில் வெப்பமூட்ட சாவஸ் எண்ணை வழங்கிதைக் குறித்து எழுதியுள்ளது.’இந்தத் தென்னமரிக்க மனிதர் அமெரிக்க ஏழை மக்களைக் கைப்பற்றி விட்டார்’ என்கிறது. மறுபுறம் ஜெர்மனிய ஊடகம்கள் சாவஸ் மற்றும் பொலிவியாவின் ஈவா மொராலஸ் ஆகியோரை காஸ்ட்ரோவின் வாரிசுகள் தீவிரக் கொம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகள் என்று குறிப்பிட்டன.
 
 
வெனிசூலா உட்பட அந்நிய எரிபொருள் நிறுவனம்களை வெளியேற்றி; சகலதையும் அரசுடமையாக்கியதுடன் பிறேசில், கியூபா, பொலிவியா உடன் பெருமளவு ஒப்பந்தம்கள் மேற்கு நாடுகளை எதிர்க்கும் சீனா, ஈரான், ரஸ்யாவுடன் புதிய ஒப்பந்தம்களைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு இரும்பு நிறுவனமான Sidor பிரான்சின் ; lafarge , சுவிசின் Holeim ஆகிய சீமெந்துத் தொழிற்சாலைகள் சகலதும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அலுமேனியம், கார், உழவு இயந்திரம் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுகின்றது. செயற்கைக் கோள் ஏவல் ஆகியவற்றுடன் விண்வெளி ஆய்வுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2004 முதல் 40,000 முதல் 50,000 வீடுகள்வெனின்சூலாவில வருடாவருடம் கட்டப்பட்டு வருகின்றது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கியூபாவை எதிர்த்து தனிமைப்படுத்திய காலம் போய் இப்போ கியூபாவின் பாதுகாப்பு அரண்களாகிவிட்டன. பிறேசில்,கியூபா,வெனிசூலா புதிய எரிபொருள் வளம்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முழுக்கண்டத்திலும் 103 மில்லியாடன் பெரல் எரிபொருள் வளம் உள்ளமை இந்த நாடுகளை இன்னமும் நெருக்கமாய்க் கொண்டு வருகின்றது.

சேகுவேரா போராடி மரணமடைந்த பொலிவியாவில் 1985 பின்பு எட்டு அரசுகள் மாறின.; 20 வருடத்தில் எந்த மாற்றமும் இல்லை. 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தினசரி ஒரு டொலருக்கும் நிறைவான வருமானம் பெறும் நாட்டில் இப்போது தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளையொத்த சமூக மாற்றங்கள் நிகழ்கின்றது. முன்பு அமெரிக்க நிறுவனம்களிடமிருந்த சுரங்கம்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆயட்காலம் சராசரியாக 35 வருடங்களாக இருந்தது.

இவர்களில் பெரும்பகுதி சுவாசப்பை நுரையீரல் வியாதிகளால் இறந்தனர். பொலிவியாவில் எண்ணை எரிவாயு, செம்பு, உரான், Zink,Blei,lithium,சல்பேட், நீர்வளம் என்பவைகளைக் கட்டுப்படுத்திய Pacific,LNG,British petrollum,Repsol என்பன அரசுடமையாக்கப்பட்டு வெனிசூலா, பிறேசில்,கியூப உதவிகளுடன் கூட்டாக செயற்பாடு இதனால் பொலிவிய அரசின் வருமானம் 1மில்லியாடனில் இருந்து 4 மில்லியாடல் டொலராக அதிகரித்தது.செல்வந்தர்களான1000 குடும்பங்கள் 25 மில்லியன் கெக்டர் வளமான நிலத்தை வைத்து இருந்தன.

இதில் நில உடமையாளனான Branco marincovic என்பவனின் குடும்பம் மட்டும் 150,000 கெக்டர் நிலத்தை உடமையாய்க் கொண்டு இருந்தது. பொலியாவில் வாழ்ந்த Quechua , Aymaraஉட்பட 36 செவ்விந்திய இனக்குழுக்கள் ஈவா மொராலஸ் அரசின் நிலச்சீர்திருத்தத்தின் கீழ் பெரும் நில உடமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம்கள் கிடைக்கின்றது. முன்பு இந்த செவ்விந்தியர்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் முன்பு நடனமாடுபவர்களாக விவசாய நிலம்களில் அரைஅடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் நிற இனரீதியில் மோசமாக நடத்தப்பட்டனர்.

"Indios"என்பது இழிவான சொல்லாக இருந்தது. இப்போது பொலிவியா அரசுத்தலைவராக உள்ள ஈவா மெராலஸ் ஒரு செவ்விந்தியர் விவசாயிகளாக இருந்து போராடியவர்.அண்மையில் செவ்விந்திய இனக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து 8 மைல்தூர ஊர்வலமாக தலைநகரை நோக்கி வந்தனர். தமக்கு அனைவருக்கும் நிலம் வழங்கும்படி கோரினர். 18ம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளருக்கு எதி;ராகப் போராடிய தமது தலைவர்களான Tupac Katari,Bartolina siso பெயரில் சபதம் எடுத்தார்கள். 2007 இல் முதலாவது செவ்விந்தியப் பெண்களின் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகட்கு மாதம் 20 யூறோ பெறுமதியில் அரசால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.
 
பொலிவியாவில் மட்டுமல்ல முழு லத்தீன் அமெரிக்காவிலும் செவ்விந்திய மக்களின் விழிப்புணர்வு ஜனநாயகத்துக்கான போராட்டம்கள் நடக்கிறது. வெனிசூலா, பொலிவியாவில் இருந்து பிறேசில், ஆஜன்ரீனா முதல் பல ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நாடுகட்கு எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. கியூப வைத்தியர்கள் , ஆசிரியர்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உயிரியல் மருத்துவத்துறை நிபுணர்கள், சகல ஸ்பெயின் மொழி பேசும் நாடுகட்கும் பல ஆயிரக்கணக்கில் செல்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே வித்தியாசம்கள் தனித்துவம்கள் இருப்பதாக ஒரு முதலாளியத் தேசியவாதி போல் சிந்திக்கும் நாவலன் இந்த நாடுகள் முழுவதுமே கடந்த நூறாண்டு முழுவதும் அமெரிக்காவால் இயக்கப்பட்ட இராணுவ அரசுகளாக சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தது என்ற ஒரே தன்மையைக் காணவில்லையா?

இதன் தலைவர்களின் பெரும் பகுதி அமெரிக்க இராணுவப் பள்ளியில் பயிற்றப்பட்ட ஜெனரல்களாக இருந்தனர் என்ற பொது ஒற்றுமையைக் காணவில்லை. எல்லா நாடுகளிலும் கொரில்லா இயக்கம்கள் எழவில்லையா?

விவசாயிகள் நிலம் கோரியும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அந்நியப் பெரு நிறுவனம்களின் சுரண்டலுக்கும் எதிராகவும் போராடவில்லையா? இது முழு லத்தீன் அமெரிக்காவுக்கும் பொதுத்தன்மைகளாக இருக்கவில்லையா?


‘விடுதலை இறையியல்’ தத்துவம்தென்னமெரிக்கக்கண்டம் தழுவிச் செயற்பட்டமை எதைக் காட்டுகின்றது? ஆஜன்ரீனாவின் கடன்கள் பற்றி நாவலன் எழுதியுள்ளார்.

1990 க்கு முன்பு உலக வங்கி, சர்வதேச நாணய வங்கிகட்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் அடிமைத்தேசம்களாக இருந்தன. இன்று நிலை வேறு அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய வங்கிகள் நட்டமடைகின்றன. சர்வதேச நாணய வங்கி இப்போ 565 மி;ல்லியாடன் டொலர் நட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வீடுகள், நிலம்களில் முதலீடு செய்தமையால் வந்த இழப்பு, டொலர் பெறுமதி வீழ்ச்சி புதிய கடன்களையோ முதலீட்டையோ இதனால் செய்யமுடியவில்லை. சர்வதேச நாணய வங்கி தனது தங்க இருப்பில் 403.3 தொன்னை ஏழுமில்லியாடன் டொலருக்கு விற்பனை செய்கிறது. 2009 இல் 100 மில்லியன் டொலர் செலவைக் குறைக்கவும் ஆட்களைக் குறைக்கவும் சர்வதேசநாணயவங்கிதிட்டம். இதன் தலைமை உறுப்புரிமை நாடுகளிடம் அவசர நிதியைக் கோருகின்றது. சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர்,அரபுஎண்ணை நாடுகள் பிறேசில், வெனிசூலா என்பன முக்கிய கடன் வழங்கும் நாடுகளாக ஆகிவிட்டன. சீனா தனது சேமிப்பில் உள்ள உபரி டொலரை ஆசிய,ஆபிரிக்க நாடுகட்கு கடனாகத் தருகின்றது.

வெனிசூலா தனது கண்டம் கடந்து வெள்ளை ரஸ்யாவுக்குக் கூடக் கடன் தருகின்றது.
 
எனவே, உலக நாணய வங்கி, உலக வங்கி என்பன ஏழைநாடுகளை நிதி தர மறுத்துப் பணிய வைத்த காலம் போய்விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் 1970,1980 களில் பெற்ற கடனைக்கூட சர்வதேச நாணய வங்கிக்கு சேர்பியா, உருகுவே, சிலி, ஆஜன்ரீனா, பிறேசில் என்பன கட்டிவிட்டன. பிலிப்பைன்ஸ் மற்றும் உலகின் 4 வது பெரிய கடனாளி நாடான இந்தோனேசியா என்பன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கியிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டன. சிம்பாப்வே, அங்கோலா முதல் பொலிவியா இலங்கை வரை உலக வங்கிக்கு சவால்விடும் நிலைக்கு வந்துள்ளன.லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது ‘ தென் அமெரிக்க நாடுகட்கான வங்கியை உருவாக்கியது போல் இஸ்லாமிய முதலீட்டு வங்கியான IBFW 70 நாடுகளை உறுப்பினராய்க் கொண்டு 500 மில்லியாடன்டொலர் முதலீட்டில் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகளின் எண்ணை, எரிவாயு விற்பனையில் திரளும் உபரிமூலதனத்தை ஆபிரிக்க, ஆசிய நாடுகட்கு கடனாகத் தருகின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத் தடைக்குள்ளான ஈரான், லிபியா, சூடான், சிரியா இந்த இஸ்லாமிய முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன.

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்த Petronas Towers வங்கியின் பிரிவான ‘இஸ்லாமிய நிதிச் சேவை நிறுவதற்குரியதாகும். அமெரிக்கப் பொருளாதார நிபுணரான இந்த loretta Napoleoni இந்த IBFW வங்கியை உலகில் மிக வேகமாக வளரும் வங்கி இதற்கு உலகம் முழுவதும் கிளைகள் உருவாகிறது.114 மில்லியாடன் முஸ்லிம் மக்களின் 2.7 பில்லியன் டொலர் சொத்துடன் இதில் இணைந்துள்ளனர் என்கிறார். இந்த வங்கி சிறுகடன்கள், எரிவாயு எண்ணை, கட்டிடத் தொழில், உதைபந்தாட்ட Formel -1 எனப்படும் கார்ப்பந்தயம் இவைகளில் முதலீடுகள் செய்கிறது. மேற்குலகால் புறக்கணிக்கப்பட்ட பெருமளவு முஸ்லிம் முதலாளித்துவப் பொருளாதாரப் போக்காளர்கள் கல்வியாளர்களை இத்தகைய அமைப்புக்கள் உள்வாங்கியுள்ளன. பிறேசில் வெனிசூலா என்பன ஈரான், சிரியா உட்படப் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொழிற்துறை பரிமாற்ற உடன்படிக்கைகளைச் செய்துள்ளன.மறுபுறம் ‘ஆசிய அபிவிருத்தி வங்கி’யானது ஆசிய நாடுகட்கான பிரதான நிதி நிறுவனமாக ஆகிவிட்டது. இதனால் இந்தப் பிரதேசங்களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் பெறுமதியிழந்துவிட்டன.
 
 
ஆஜன்ரீனா பற்றிப் பேசும் நாவலன் அதன் அண்டை நாடான பிறேசிலின் அபிவிருத்தியைக் கவனித்து இருந்தால் அக்கண்டத்தின் பொதுப்போக்கை அவர் அவதானித்திருக்க முடியும்.

1990 களின் ஆரம்பத்தில் பிறேசில் லத்தீன் அமெரிக்காவிலேயெ பெரும் கடனாளி நாடு ,உலக வங்கியாலும் சர்வதேச நாணய வங்கியாலும் கட்டளையிடப்பட்டு ஆட்சி செய்த நாடு, இப்போ இந்த நாடு தனது 190 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகில் உள்ள 10 வது பெரியவளரும் தொழிற்துறை நாடு அதன் தேசிய வருமானம் 1.3 பில்லியன் டொலர்கள் அரச இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும்.

தங்கம், நிலக்கரி Nickel, Bauxid,Mangen உற்பத்தியில் உலகில் மிக முக்கிய நாடு தினசரி 1.5 மில்லியன் பெரல் எண்ணை உற்பத்தி செய்கிறது. சோயா, கரும்பு இவைகளில் இருந்து உயிரியல் எரிசக்தியை உற்பத்தி செய்யும் உலகின் முதன்மை நாடு. அமெரிக்காவால் ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட  நாடு ,இன்று முழு லத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல ஆபிரிக்கா, அரபுநாடுகளிலும் அதன் சந்தையும் மூலதனமும் நுழைகிறது. மறுபுறம் சீனாவானது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் போலவே பிறேசிலிலும் அமெரிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மட்டும் சீனாவின் 70 பெரு நிறுவனம்கள் உள்ளது. இவை 300 பாரிய பொருளாதாரத் திட்டம்களைக் கொண்டுள்ளன. வீதிகள், பாலம்கள், மருத்துவமனைகள், தொழிற்சங்கங்கள், வீடமைப்புத் திட்டங்கள் யாவற்றையும் சீனக்கட்டிட நிறுவனம்களே அமைக்கின்றன.

பிறேசிலின் எண்ணை முதல் சோயாவரை சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. சிலி நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான செம்பு, இப்போ பெரும் பகுதி சீனாவுக்குச்செல்கிறது. முன்புஇந்த மூலப் பொருள்வளத்தைப் பெற அமெரிக்கா இராணுவச் சதிப்புரட்சியை நடத்தி சோசலிஸ்ட் அலன்டேயைக் கொன்றது. ஆனால் ,இப்போ எந்த லத்தீன் அமெரிக்க நாட்டையும் அமெரிக்காவால் உசுப்பமுடியவில்லை. வெனிசூலா, பொலியாவில் இராணுவச் சதிப்புரட்சிக்கும் கலகக் குழுக்களை உருவாக்கவும் முயன்று தோற்றது.

அமெரிக்காவின் பொருளாதார இயலாமை இராணுவ அரசியல் வீழ்ச்சிகளையும் கூடவே கொண்டு வந்துள்ளது.

தொழிற்துறை வளர்ச்சி தான் அது சார்ந்த புதிய பொருளாதார வாழ்வு முறை தான் ஜனநாயகம் மனித உரிமை தனிமனித சுதந்திரம் என்பனவற்றை முதலாளிய மட்டத்துள் கொண்டு வரும். இவையே சோசலிச இயக்கம்களும் புதிய தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் அரசியல் பலம் பெறவல்ல அடிப்படையாகும்.நாவலன் தனித்தனி நாடுகளின் தனியுரிமையை வித்தியாசம்களை வலியுறுத்த முயன்றமை அங்கு சோசலிசம் வரும் என்பதை மறுப்பதில் முடிவடைந்துள்ளது.
 
 
உலகச் சந்தையை வெல்ல மலிவாக உற்பத்தி செய்யவேண்டும். சம்பளம் உயரக்கூடாது. வட்டி அதிகரிக்கக்கூடாது. வட்டியை விட இலாபம் அதிகமாக இருக்கவேண்டும். 3ம் உலக நாடுகளில் மூலப் பொருள், மலிவான உழைப்பு காரணமாக பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. இதனால் மேற்குலக நாடுகளால் போட்டியிட முடியவில்லை.

அவர்களின் டொலர், யூறோ, பவுண் ஆகிய நாணயம்கள் பெறுமதி இழப்பால் நிச்சயமற்ற தன்மையால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. தங்கமானது கிட்டத்தட்ட உலக நாணயமாகிவிட்டது. 3ம் உலக நாடுகள் புதிய உலக நாணயத்தை கண்டறிய வழி தேடுகின்றன என்றால் மேற்குலக ஏகாதிபத்தியம்களின் அந்திம காலத்தை எண்ணிப் பார்க்கமுடியும்.

அமெரிக்க, பங்குச்சந்தை வீழ்ச்சி 3ம் உலக நாடுகளையும் தொட்டது.உலக மயமாகி மென்மேலும் இணையும் மூலதனச் செயற்பாட்டில் ஒன்று திரண்டு வரும் நிதிச் செயற்பாடுகள் இதைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது.

சீனப்பொருட்களுக்கான சந்தை இன்று மேற்குநாடுகளிலும் பிரதானமாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில் இயங்கும் " International centre for corporate culture und history "என்ற அமைப்பு "Das ende des weissen mannes"என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூல் மேற்குலக வெள்ளை நாகரீகத்தின் முடிவைப் பேசுகிறது .மாக்சிய நோக்கில் மேற்குலகு சோசலிசப் புரட்சியின் காலகட்டத்தில் ஜரோப்பா நுழைகிறது. தொழிலாள வர்க்கம் தனது கடந்த அனுவச் செழிப்போடு சமுதாய மாற்றத்துக்காக போராட்டத்தை தொடங்குமென்பதாகும்.
 
 
‘உலக மயமாதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் சொந்த நலன்கட்கான மறு ஒழுங்கு என்பது நாவலனின் வாதமானது.

இது மிக மேலோட்டமான பழைய இடதுசாரிப் பார்வை என்பதுடன் சமூக இயங்கியல் மற்றும் வளர்ச்சி நிலைமைகளை கணக்கெடாத கருத்தியலுமாகும்.

கிழக்கு சோசலிச நாடுகள் வீழ்ந்தபோது மேற்கு நாடுகள் அந்த நாடுகளில் புகுந்து சூறையாடத் தொடங்கிய போதும் அது எதிர்விளைவுகளை உள்ளடக்காததாக இருக்கவில்லை.அங்கு வளர்ச்சி பெற்ற தனியார் மூலதனம் இன்மையால் ரஸ்யாவில் அரசுவகைபட்ட முதலாளியம் தோன்றியது. எரிபொருள் உட்பட, பிரதான மூலப்பொருள் வளம்களை உள்ளடக்கிய அரசு மூலதனம் எழுந்தது. . Gasprom அப்படித்தான் எழுந்தது.

பழைய சோசலிச நாடுகள் உட்பட சீனா , வியட்நாம் வரை தொழிற்துறை வளர்ச்சி ஏற்படத்தக்க மக்களின் கல்வி வளர்ச்சி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிட முடியாத மூலப் பொருள் வளம்கள் உடையதாக இருந்தும் அது தொழிற்துறையில் வளரத் தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின.


அடுத்து ,உலக மயமாதலை மேற்குலக ஏகாதிபத்தியங்களே கொண்டு வந்தபோதும் அது அவர்களுக்கே கட்டுப்பாடாத பொருளாதார விதிகளைக் கொண்டது.

தன் சொந்த விதிகளின்படி இயங்குவது இது நாம் கருதுவது போல் மனித மூளைகட்கும் அதன் ஆசைகட்கும் கட்டுப்பட்டு நிற்பதில்லை. பிரிட்டிஸ் வங்கிகளான Rbs,HSBC,Barclays என்பன பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் விரும்பியா நட்டப்பட்டன?

அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் வீடுகள், நிலம்களில் அந்த முதலீடுகளிலும் பங்குச்சந்தை மற்றும் ஊக வாணிபத்தாலும் அவை சரிந்தன. அமெரிக்காவின் 103 வருடப் பழைமையான ஜி.எம (GM) வாகனத் தயாரிப்பு நிறுவனம், 100 வருடம் வயதுடைய citigrup,Lehman Brothers எப்படி இருந்த இடம் தெரியாமல் போகின்றன?

சுவிட்சர்லாந்தின் யு.எஸ்.பி (USB_  http://www.ubs.com/ch/de.html  ) வங்கி நட்டமடைந்து அரபு மற்றும் சிங்கப்பூர் வங்கிகளால் இப்போ கடன் தந்து காக்க முயலும் நிலை எப்படி ஏற்படுகின்றது?

பிரிட்டிஸ் பிரதமர் சீனாவிடம் உலக வங்கிக்கு நிதி தரும்படி கெஞ்சுகிறாரே? உலக மயமாக்கல் என்பது தன்னைப் படைத்தவர்களையே கொன்று தின்கிறது. சந்தையின் கட்டளைகள் அலட்சியப்படுத்த முடியாதவை.
 
 
உலக மயமாதல் என்பது மேற்கு நாடுகள் விரும்பித் திணித்த ஒன்றல்ல மாறாக ,ஏகாதிபத்தியப் பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத கட்டம் இது.

அமெரிக்காவையோ, ஜெர்மனியையோ கேட்டுக் கொண்டு செயற்படுவதில்லை. உலகச் சந்தை உலக மூலப் பொருட்கள் இன்று மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டுள் இருந்து மிக வேகமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நாடுகளில் வங்கிகள், பெரு நிறுவனங்கள் நட்டமடைதல், வேலை இழப்பு, உற்பத்திக் குறைப்பு, நுகர்வு வீழ்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி, உணவுப் பொருட்கள் உட்பட சகலதும் விலையேற்றம் என்பன எதைக் காட்டுகிறது என்பதை நாவலன் எண்ணிப் பார்க்கவில்லை.

நட்டப்படும் பிரிட்டின் வங்கிகட்கு அரசு நிதி தர முயல்வதும் அரசுடமையாக்க முயல்வதும் காட்டுவதென்ன?

 மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது இதுவரை கால பொருளாதார சக்தியை 3ம் உலக நாடுகளிடம் இழக்கத் தொடங்கிவிட்டன என்பது தான்.பிரிட்டனில் வீட்டு விலைகள் சரிவு, வீடுகட்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, கடன் பெற முடியாமை பெருகிறது.அடுத்த 2 வருடத்தில் வீட்டு விலைகள் குறைந்தது 30 வீத ஆக விழுந்துவிடும் என்று ஐ.எம்.எவ் எச்சரிக்கின்றது.

1980 இல் பிரிட்டிஸ் பிரதமராக இருந்த மார்கிரெட் தட்சர் வர்க்கம் மறைந்து விட்டது. பிரிட்டிஸ் மக்கள் உடமையுள்ள சமுதாயமாக (Ownership society )இருக்கமுடியும். எல்லோரும் வீடுகள் வைத்திருக்க முடியும் என்றார். முதலாளித்துவத்துள் எல்லோரும் எல்லாமும் அடையலாம் என்ற கற்பனை கலைகிறது. பிரான்சின் மொத்தக் கடன் அதன் தேசிய வருமானத்தில் 65வீத என்பதும் ஸ்பெயினின் மத்திய வங்கியான "Banco de Espana" அரசுக் கடன்களைக் கட்ட 80 தொன் தங்க இருப்பை விற்பனை செய்யவுள்ளது. ஸ்பெயினின் ஏற்றுமதி 222 மில்லியாடன் டொலர்களாகவும், இறக்குமதி 324 மில்லியாடன் டொலராகவும் அதிகரித்துள்ளது. அதன் வெளிநாட்டுக் கடன் 1.6 பில்லியன் டொலராக ஏறியுள்ளது.
 
 
இது முதலாளியத்தின் மரணகண்டமாகும்.

 அமெரிக்காவும் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்து நுகர்கிறது. இது உலக மயமாதலின் பின்பு ஏற்பட்ட நிகழ்வாகும். நாவலனிடம் செயற்படும் ‘ஐரோப்பிய மத்தியவாத பார்வை’ இன்றைய உலகார்ந்த சடுதியான மாற்றம்களை உள்வாங்க விடாமல் தடுத்துவிட்டது.

உலகில் உள்ள சர்வாதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகள் மாபியாக்கள் முதல் இந்திய சினிமா நடிகர் நடிகைகளில் தொடங்கி பிரபாகரன் பரம்பரைகள், உமாமகேஸ்வரன், பிரேமதாசா வரை காசு ஒழித்து வைத்திருந்த சுவிஸ் வங்கிகளே நட்டத்துக்கு மேல் நட்டம் Ubs,Credit Suisse வங்கிகளில் போட்ட காசு போன காசாகிவிட்ட நிலை உலகின் முக்கிய செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிஸ் வங்கிகள் பொறியும் என்று முதலாளித்துவவாதிகள் கனவு கூடக் காணவில்லை. உலக மயமாதலின் பின்பு 3ம் உலக நாடுகளில் இருந்து சுவிஸ் வங்கிகட்கு கறுப்புப் பணம்கள் கிட்டத்தட்ட வருவதில்லை.

ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டம் தழுவிய அளவில் பெரும் வங்கிகள் தோன்றிவிட்டன. வங்கித் தொழிலால் வாழ்ந்த உலகின் பணப்பெட்டியாக இருந்த சுவி;ஸ் கடந்த காலம் போல் இனி இருக்கமாட்டாது. இதுவும் உலக மயமாதலின் விளைவு தான். ஜெர்மனியில் உள்ள நுகர்வோர் பற்றிய ஆய்வு நிறுவனமான "Die Gesellschaft fur Konsumforchung" 15,000 தங்குவிடுதிகளில் நடத்திய ஆய்வில் அண்மைக்காலத்தில் சிறந்த உல்லாசப் பயணிகளாக ஆசியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கின்றது.

2007 மே மாதம் நடத்திய இந்த ஆய்வில் ஜப்பானியர்கள்,சீனர்கள் அதிகம் பண்புள்ளவர்களாகவும் பணம் செலவு செய்பவர்களாகவும் கூடுதலான ‘டிப்ஸ்’ தருபவர்களாகவுமுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு .

இதில் தம் சொந்த நாட்டிலேயே ஜெர்மனிய உல்லாசப் பயணிகட்கு 5வது இடமே கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் -100 வருடம் முன்பு ,சீனர்களை ‘கூலி’ என்ற பெயரில் அரை அடிமைகளாக ஜெர்மனிக்கு கொண்டு வந்து வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த மக்கள் உலக மயமாதலின் பொருளாதார தொழிநுட்ப வரத்தாலேயே இப்படியாகியுள்ளனர்.

கடைசியாக, உலக மயமாதலை உலக சோசலிச இயக்கத்தால் மட்டுமே சகல மனிதகுல உறுப்பினர்கட்குமானதாக மாற்றமுடியும். உலக மயமாதலுக்கு மாற்று சோசலிசம் தான் என்று உணர்வற்ற நிலையிலேயே நாவலன் தேசியஇனப்பிரச்சனையில் ஏகாதீபத்தியங்களின் சதி தனது முடிவை எட்டியுள்ளது.
 
தமிழரசன்,பெர்லின்.







Keine Kommentare: