Sonntag, August 05, 2012

நாவலனின் தேசிய இனப்பிரச்னையில்[3]

நாவலன் நூலுக்கான விமர்சனத்தின் மூன்றாவது பகுதியை வாசிக்க முனையும்போது தமிழரசனது  வரலாற்றுக் கருத்துக்கள்,தரவுகள் குறித்து நீண்டு முரண்பட்டிருந்த நான், இந்தக் கிழமை பூராகவும் மீள எனது நூலடுக்குகளிலிருந்து அனைத்தையும் புரட்டி மீளப் படித்துக்கொண்டேன். கிட்லரது "கீழ்-மேல்" மனிதனெனும் கருத்துக்களோடு நீண்ட தூரஞ் சென்று கொண்டேன்.


பேர்சிய-ஈரானிய வரலாற்றுக்குள் நிலவும் சர்துஷ்ரா வரையான ஆவணங்கள், தடயங்களை உறுதிப்படுத்திய வரலாற்றையும் படிக்கும்போதுதாம் திரு.தமிழரசன் வெறும் கருத்துக் கோர்ப்பாளன் அல்ல,அவர் வரலாற்றறிவைச் சேகரித்து எழுதும் மிகப் பெரும் உழைப்பாளியென அறிந்தபோது அவரது மேதமைக்கும்-உழைப்புக்கும் மரியாதையாகத் தலை பணிந்துகொண்டேன்.


இந்த மூன்றாவது பகுதி, நிறைய வரலாற்று வெளிகளைத் தேடியலைந்து, தகவல்களை அதனது வரலாற்றாய்வுப் பக்குவத்தோடு தருகிறது.குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தப்பானதாகவோ-தவறானதாகவோ தரப்படவில்லையென்பதைவுறுதிப்படுத்திவிடவே நீண்ட வாசிப்புக்குள் காலத்தைச் செலுத்தவேண்டியிருந்தது.


அப்படியாக நாம், ஒரு நூல்மீதானா விமர்சனத்தையொட்டிக் காலத்தைக் கழித்தது, ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்ட வரலாற்றைத் தவறாகச் சொல்லும் பழியிலிருந்துவிடபட வேண்டுமென்பதற்கான பெரு அவாவே!

நாவலனது நூலது விளக்கங்களில் முரண்படும் இடங்களிலெல்லாம் தமிழரசன் வரலாற்று வெளிகளுக்குள் நிறையப் பயணித்துத் தகவல்களை வரலாற்றுப் பொருள்முதல்வாதாய்வுக் கண்ணோட்டத்திலிருந்து மிக இலவாகமாக விமர்சனத்  தரவுகளைத் தருகிறார்.

ஒரு நூல் விமர்சனத்தை முன்வைத்துப் பல நூல்களை அவர் ஆய்ந்து, தகவல்களைத் தந்ததன்வினையுள் அவரது தகவல்கள் சரியானதாவென அந்த நூல்களைத் தாண்டியும் பாபிலோனிய-பார்சிய வரலாற்று வெளிகளில் பயணித்துக்கொண்டேன்.

இதுவொரு பெரிய சோம்பலான விடயமாகவிருந்தாலும்,உண்மைகளைப் பேசும்போது அவற்றின் நம்பகமான ஆய்வுகளைத் தேடிச் செல்வதென்பது சாத்தியபட்டுத்தாம் விமர்சனங்கள் முன்னேறவேண்டியிருக்கிறது.

வரலாற்றைத் திரித்தல்,தரவுகளை வெறும் மனவோட்டத்துக்கமையக் கட்டுதலென்பது ஆராச்சிக்குரியதாகவும் இப்போதுதாம் மாறிவிட்ட பிரச்சனையல்ல.இது, பண்டுதொட்டு நமது அறிவினது எல்லையிலிருந்து பயணிப்பது.இது இயற்கை விஞ்ஞானத்தின் பரப்புகளில் நிறையக் காணத்தக்கதாகும்.எனவே, அறிதலென்பது-புரிந்துணர்தலென்பது ஒரு நிலை மட்டுமாகிறது.
கடந்த காலத்துள் அதிகாரமானது பல வகைகளில் மக்கள்மீது தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைத்போது இப்படியெல்லாம் பாபிலோனிய மக்களைப் படுத்தியிருக்கிறது:


"Der Schatten Gottes ist der Fuerst,und der Schatten des Fuersten sind die Menschen." -Babylonische Herrschaftauffassung.seite:62.



"இறைவனது நிழலே அரசனாகும்,அதேபோன்று அரசர்களின் நிழலே மனிதர்கள்" -பாபிலோனிய அரசியலொழுங்கு.


இதையேதாம் நாமும் சமீப கால "ஈழப்போராட்டத்தில்"ஏதோவொரு மொழிவுக்குள் சந்தித்திருப்போம்.

இத்தகைய மொழிவுகளுடாகச் சொல்லப்படும் ஆளும் வர்க்கங்களது நலனுக்கான வரலாற்றைக் குறித்துத் தமிழரசன் போன்றோரது விமர்சனத்தின் வாயிலாகச் சில தெரிவுகளுக்கு நாம் வரமுடியும்.அதாவது, பரந்துபட்ட மக்களை ஒவ்வொரு காலவர்த்தமானதுக்கொப்ப நிலவும் அரசியல்-பொருளியல் நலன்கள்-தத்தமது வர்க்க நிலைமைகளுக்கமைய ஏதாவதொரு சூழலில் - நவீனமான முறையில் தமக்கேற்பத் தகவமைத்துக் கொல்லுமென்பதுள் ,அந்தத் தெரிவுகள் நமது உணர்வுப்புலத்துள் அதிர்வுகளைத் தரலாம்.
தமிழரசனது விமர்சனத்தைத் தொடர்ந்து வாசியுங்கள்,தமிழ்த் தேசிய மாயையளைப் பகுத்துப் பாருங்கள்!

Die Geschichte aller bisherigen Gesellschaft ist die Geschichte von Klassenkaempfen ." Von K.Marx

"இன்றுவரையுள்ள அனைத்துச் சமுதாயங்கள்தம் வரலாறும் வர்க்கப் போரினது வரலாறே! "  -மார்க்ஸ். [இதேயேதாம் நாம் கொம்யூனிச அறிக்கையில்.  'வரலாறு கண்ட யுத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கிடையிலானது.'    என்று படிப்பது].

அடுத்த பகுதியில் சந்திப்போம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.08.2012


சபா நாவலனின் "தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி"

-நூல் விமர்சனம்-பகுதி:3

 3


இலங்கையில் பெரிய மாக்சிய இயக்கமாக விளங்கிய எல்.எஸ்.எஸ்.பி யை[The Lanka Sama Samaja Party was founded in 1935 and emerged as a major political force in the 1940s. It joined a coalition government in 1964, and was then expelled from the Fourth International. It peaked in political strength in the 1970s, but has declined gradually during the last 30 years. ]ரொட்ஸ்கியுடன் தொடர்பு கொண்டிருந்த பிலிப் குணவர்த்தனாவை [Philip Gunawardena ]இந்தியத் துணைக்கண்டத்தின் சிறந்த மாக்சியவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்த கொல்வின் ஆர்.டி. சில்வாவைப் [Dr. Colvin R de Silva ] பற்றிப்  பேசுவதை ஒருவர் தற்செயலாகவேனும் தவற விட்டு விட்டார் என்றால் ,அவர் எந்த வகையிலும் இலங்கை இடதுசாரி இயக்கங்களைப் பேசும் தொடக்க நிலைத்  தகுதியைக் கூட இழந்துவிடுகின்றார்.


தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களின் அரசியலுக்காக நிற்பது வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்து அரசியலைத் தொடங்குவது என்பனவற்றை தமிழ்ப்பாசிசம் குற்றமாக்கிவிட்டுள்ள நிலையில் ,புலிகள் மட்டுமல்ல புகலிட நாடுகளில் உள்ள தமிழ் முதலாளித்துவ ஜனநாயக சக்திகளும் மாக்சிய விரோத அரசியலை தீவிரமாக முன்னெடுத்த நிலையில் நாவலனும் இடதுசாரிகள் தவறிழைத்ததான குற்ற வாய்முறைப்பாட்டோடு வருகின்றார்.

 இக்குற்றம் கூறலானது சோசலிசத்துக்கு இடைஞ்சல் செய்தார்கள் என்ற பார்வையில் இருந்து வராமல் ,புலிப்பாசிசம் தலைமை எடுத்த தமிழினவாதத்துக்கு  மாக்சியவாதிகளையும் ,தொழிற்சங்க வாதிகளையும் கொன்றொழித்தவர்கட்காக  இடதுசாரி இயக்கம்கட்கு தடைவிதித்து, மே தினம் கூடக் கொண்டாட முடியாமல் செய்தவர்கட்காக நாவலன் நிற்கிறார்.

தமிழ்த்தேசியவாதம் , சிங்கள இன ஒடுக்குமுறைக்காற்றாது கொதிக்கவில்லை. மாறாக ,அது சிங்கள , முஸ்லிம் இனத்துவேசம்களாய் பாசிச இன வெறுப்புக்களால் இலங்கை மக்கள் அனைவர் மேலும் போர் தொடுத்தது. சகல இன மக்களையும் கொன்றது. இலங்கை அரசு வன்முறையின் எதிர்விளைவாக புலிப்பயங்கரம் தோன்றவில்லை. மாறாக, இன்று புலிப்பாசிசப் பயங்கரவாதத்தின் எதிர்வினையாக இலங்கை தழுவிய தேசியத்தை முன்னெடுக்கவே அரச வன்முறை நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

இன்றைய மூலதன நகர்வு,இலங்கையை ஆசிய முதலாளிய வளர்ச்சியின் ஈர்ப்புள் கொண்டு வர முயல்கின்றது. சிறு தேசிய இனம் என்றால் அது முழுத்தேசத்துக்கும் எதிரான மக்களுக்கு விரோதமான சக்தியாக மாறாது என்று இல்லை. முன்னாள் யூகோஸ்லாவியவில் எப்படி குரோட்டியா முதல் கொசவோ வரை சிறு தேசிய இனம்கள் பெரிய இனத்தை அழிக்கும் ஏகாதிபத்தியத்தால் ஊட்டம் பெற்ற கூலி இயக்கம்களாக மாறின என்ற படிப்பினைகள் இருக்கின்றன. புலிகள் ஒரு ஏகாதிபத்திய கூலிப்படை என்ற அம்சம் நாவலனுக்கு ஒரு பொருட்டாகப்படவில்லை.


பல்லினத் தன்மையை இலங்கை தழுவிய அரசியலை ஏதோ புனிதக்கேடு எனக் கருதுமளவு தேசியவாதத்தின் பாதிப்பு நாவலனிடம் உள்ளது. கொலனிக்காலப் போராட்டங்களின் போது ஆசிய ஆபிரிக்க நாடுகளில் தேசம்கள் உருவாகிக் கொண்டிருந்தபோது எல்எஸ்எஸ்பி[LSSP] சுயநிர்ணய உரிமையை ஆதரித்து வாதாடி வந்தது.


1950 களிலேயே இலங்கையில் தமிழர்கள் தனிநாடு கேட்பார்கள், பாகிஸ்தான் மீண்டுமொரு தேசமாக உடையும் என்பதை கொல்வின் ஆர்.டி. சில்வா எதிர்வு கூறியதுடன் இதை ஏகாதிபத்தியம்கள் கையாளும் என்பதையும் மதிப்பிட்டவர்.

தமிழ்த்தேசியம் எனப்படுவது தமிழரசுக் காலம் முதல் புலிகள் வரை ஏகாதிபத்தியப் பின்புலத்தில் இயக்கப்பட்டது என்ற கவனமில்லாதவர்கட்கு இடதுசாரிகள் தவறிழைத்தனர் என்ற கருதுகோள்தான் தெரிகின்றது. தமிழ், சிங்கள இனவாதிகளின் இடைவிடாத எதிர்ப்பாலும் பிரமாண்டமான பொய்ப்பிரச்சாரங்களாலும் இடதுசாரிகள் தோற்கவேண்டி வந்தது. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமைகளின் ஒத்துழையாமையாலும் அவர்கள் பாராளுமன்ற வாதத்தை வந்தடைந்தனர். இருந்தபோதும் கொல்வின் ஆர் . டி. சில்வா போன்றவர்கள் இழைத்த தவறுகள் தொழிலாள வர்க்க இலட்சியத்துடன் சம்பந்தப்பட்டதேயொழிய தமிழ்த்தேசியவாதத்தை ஏற்று அங்கீகரித்த மறுத்தமையுடன் சம்பந்தப்பட்டதல்ல.

தமிழ்தேசியவாதம் சிங்கள முஸ்லிம் மக்களுடன் கூடி வாழ்ந்தறியாது.யாழ்.மத்திய தர வர்க்கம் தன் சொந்த யாழ்.குடாநாட்டுக்குள்ளேயே படியாதவர்கள், எளிய சாதிகள் என்று பல மக்கள் பிரிவுகளை தள்ளிவைத்த வாழ்ந்த சமூகமாகும். இவர்கள் பிரிட்டிசாருக்கு எதிராக இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடிய வரலாறு இல்லை. மாறாக நாட்டைப் பிரிக்கப் போராடினார்கள். தமிழரசு முதல் புலிகள் வரை பிரிட்டிஸ் உட்பட அந்நிய சக்திகள் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தியதாக பேசியிருக்கின்றார்களா? மாறாக சுதந்திரமடைந்த பின்பு தான் சகல கொடுமைகளும் தொடங்கியதாக சிங்களவர்கள் உரிமைகளைப் பறித்தெடுத்து விட்டதாக முறையிடத் தொடங்கினார்கள்.


நாவலனுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, தேசியவிடுதலை என்பன என்றென்றுக்குமாக நிலவக் கூடியவை என்ற மனப்பதிவு உள்ளது. ஸ்டாலினின் தேசிய இனம்களின் சுயநிர்ணயம் பற்றிய கருத்தை இன்றும் கூட எடுத்துக்காட்டும் நிலையில் அவர் விடப்பட்டுள்ளதை நாம் கவனிக்கலாம். லெனின் சுயநிர்ணய உரிமை பற்றி எழுதிக் கிட்டத்தட்ட 104 வருடங்கள் ஆகிவிட்டது. லெனின் அதை அக்காலத்திய வரலாற்று அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எழுதினார். ஒவ்வொரு வரலாற்றுக் கட்டமும் தன் சொந்த விதிகளால் இயக்கப்படுகின்றது. எனவே, உலக மயமாதலை அறியாத தனித்தனி தேசிய அரசுகள் நிலவிய காலத்தில் லெனின் எழுதியதை இன்று பிரயோகிக்க முயல்வது லெனினுக்கு மட்டுமல்ல இது சமுதாய வளர்ச்சி விதிகளுக்கும் முரணாகும்.

இங்கு நாவலன் காட்டும் ஸ்டாலினின் தேசிய இனம்கள் பற்றிய நூல் ஒரு கடந்த காலத்திய ஆவணம் என்ற பெறுமதி மட்டுமே உடையது. தேசிய இனம்களின் சுயநிர்ணயம் என்ற கருத்தை சோசலிசத்துக்குப் பொருத்துவதை ரோசாலுக்சம்பேர்க் ஏற்கவில்லை.இதற்குப் பதிலளிக்கவே லெனின் இந்த நூலை எழுதுமாறு ஸ்டாலினைத் தூண்டினார். இதில் உள்ள பெரும் கருத்துக்கள் லெனினுக்குரியவை என்பதுடன் இதை எழுதத் தேவையான தத்துவார்த்த நூல்களை ஒஸ்திரியா,ஜெர்மனிய சமூக ஜனநாயக வாதிகளிடமிருந்து பெற்று, இதை ஜெர்மனிய மொழியில் இருந்து ரஸ்ய மொழிக்கு மொழி பெயர்த்து ஸ்டாலினுக்குக் கொடுத்தவர் புகாரின் தான்.

இது கடைசியில் ஸ்டாலின் கருத்தாக ஆகிவிட்டது. இன்று, உலகில்  194 நாடுகள் ஐ.நா.சபையில் உள்ளன. ஆனால் ,உலகில் 5000 க்கும் மேற்பட்ட தேசிய இனம்கள், மக்கள் பிரிவுகள் உள்ளன. சகலரும் இனம் மக்கள் பிரிவுகளின் அடிப்படையில் பிரிவதாயின் உலகில் உலகை சில ஆயிரம் நாடுகளாக பிரிக்கவேண்டி வரும் ; இந்தியாவில் கிட்டத்தட்ட 1600 மொழிகள் உள்ளன. இதில் 33 மொழிகள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேசும் மொழிகளாகும். இங்கு இந்தியாவை எத்தனை நாடுகளாய்ப் பிரிப்பது?

 இன்றைய உலகு தழுவிய பொருளாதாரப் பரவலின் காலத்தில் இது மக்களுக்கு எதைக் கொண்டு வரும்?;இன்றைய காலம் பிரிந்தவை, உடைந்தவை ஒன்றாகும் காலமாகும். அமெரிக்க மசாசூசெட்ஸ் தமிழ் ஈழ ஆதரவுத் தீர்மானம், மொசாட் உளவுத்துறைப் பயிற்சி, நோர்வே உட்பட ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மறைமுக உதவிகள், அமெரிக்க இராணுவத் தளத்தைக் கொண்டுள்ள தாய்லாந்து புலிகளின் பிரதான ஆயுதம் வாங்கும் கடத்தும் தளமாக இருப்பது என்று விசாரிக்கப்படவேண்டியவை ஏராளம் உள்ளது.

‘பல்தேசிய இனநாடுகள்’ என்ற தலைப்பில் நாவலன் எழுதும்போது தேசியத்தை வளர்த்து எடுக்கவேண்டிய சக்திகளே தேசியப் பொருளாதாரத்துக்கு எதிராகச் செயற்படுகின்றன என்கிறார்.

தமிழ்த்தேசியம் அதன் வளர்ச்சியான தமிழ்ப்பாசிசம் என்பன இலங்கையின் தேசியப் பொருளாதாரத்துக்கு எதிரான சக்திகளாகவே எழுந்தன என்பதுடன் தமிழ்ப்பகுதிகளில் கூட ஒரு சுயசார்புப் பொருளாதாரம் உருவாகமுடியாமல் புலிப்பாசிஸ்டுகள் தடுத்தனர்.புலிகள் ஒரு பாசிசப் பண்புபடைத்த இயக்கம் என்ற அளவில் அது மக்களை கொள்ளையிட்டது,சூறையாடியது. ஒரு மக்கள் தழுவிய பொருளாதாரத் திட்டத்துக்கான பொறுமையோ அறிவோ அதனிடம் இல்லை. ஆக்கம் அல்ல அழிவே அதன் செயலாகும்.


தனக்குத் தேவையான வளங்களை அது தானே ஆக்கவில்லை. அதை மக்கள் அதீதமாய்ச் சுரண்டியது. பலவந்தம் சட்டவிரோத முறைகள் ஊடாகத் தனக்குத் தேவையானவற்றை திரட்டியது. தமது சொந்த நுகர்வுக்கு உற்பத்தி செய்யும் சந்தைக்கு உற்பத்தி செய்யாத சிறு விவசாயிகளை புலிகள் கொள்ளையடித்தபோது உற்பத்தி மென்மேலும் வீழ்ச்சியடைந்தது. ஒரு தொழிற்சாலையையோ பரவலான சிறு கைத் தொழில் முயற்சியையோ ஒரு கூட்டுப்பண்ணைத் திட்டத்தையோ புலிகள் ஆக்கவில்லை. மாறாக, குறுக்கு வழியில் பணம் திரட்டதாமே சாராயம் காய்ச்சி விற்றார்கள். தண்டனையாக பெரும் தண்டப்பணம் அறவிட்டார்கள். எனவே, தமிழ்ப்பகுதிகள் தென்னிலங்கைப் பொருட்களில் தங்கும்படி ஆகியது,என்பதுடன் தமிழர்கள் ஒரு தனித்தேசியமாக பரிணாமம் பெறத்தக்க பக்குவநிலை எய்தியிருக்கவில்லை.

வடக்கு,கிழக்கு பிரிவினைகள் பிரதேச -ஊர்சார்ந்தவாதம்கள் நிலவின என்பது மட்டுமல்ல. நிலமற்ற விவசாயிகள்,சிறு நில உடமையாளர்கள் ஆகியோரைக் கொண்ட சமூகத்தில் நடுத்தரவர்க்க அரச சேவையாளர்களைக் கொண்ட யாழ்.குடாநாட்டில் மூலதனத்திரட்டல் தொழிற்துறை முதலீடுகட்கு ஏற்ற நிலை இருக்கவில்லை. உயிரோட்டமுள்ள அரசியல் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள்,சுதந்திரமான மக்கள் அமைப்புக்கள் எதுவுமற்ற நிலையில் புலிப்பாசிச ஒற்றைக் கருத்தியல் சர்வாதிகாரமாக சகலமுமானது.மாற்றுக் கருத்துடையவரைக் கொல், ஜனநாயக செயற்பாடுகளை அழி என்பதே தமிழ்ச்சமூகத்தின் பொதுக்கருத்தாக ஆக்கப்பட்டது. எனவே சுதந்திரமான பொருளாதார , அரசியல், சமூகச் செயற்பாடுகள் இல்லையானால் தேசியம் சாத்தியமான ஒன்றல்ல.


புலிப்பாசிச இராணுவ இயந்திரம் என்ற முறையில் அதற்கு தேசியப் பொருளாதாரத்தை உருவாக்குதல் என்ற பொறுப்பு இருக்கவில்லை. புகலிட நாடுகளில் தமிழர்களிடம் திரட்டப்படும் நிதி, புலிகள் சர்வதேச மாபியா செயற்பாடுகளுடான பொருளாதாரத் திரட்டல்கள், புலிகளின் இராணுவச் செயற்பாடுகட்கும் உயர்மட்டத் தலைவர்களின் ஆடம்பர வாழ்வுக்கும் தான் பயன்பட்டது. இவை பொருளாதார முதலீடாக உற்பத்திக்கான திட்டத்துக்கானதாக மாறவில்லை. தமிழ்த்தேசியமானது தரகு முதலாளியமாகக் கூட  இருக்கத்  தகுதியற்ற வர்க்கமாகும்.

அது ,மேற்குலக ஆதரவில் பிறந்து இந்திய யு.என்.பி. போன்ற சக்திகளாய் இடைக்காலத்தில் ஆதரிக்கப்பட்டு மீண்டும் இறுதியாக ஏகாதிபத்தியத்தின் கூலி இயக்கமாகி நிற்கிறது. நாவலன் தேசியப் பொருளாதாரத்தை வளர்க்கவேண்டிய சக்திகளே அதற்கு எதிராக இருந்தன என்று இலங்கை முதலாளித்துவ சக்திகளே குறி வைத்தே கூறினார். அவர் தமிழ் தேசியத்தை விசாரிக்க முயலவில்லை. இலங்கையில் முதலாளியப் பொருளாதாரம் வளர முடியாமைக்கு அகரீதியான காரணங்கள் தமிழ்ப் பிரிவினைவாதமும் மூலதனம் திரளமுடியாமல் போனதே புறவயரீதியானது. ஏகாதிபத்தியம்கள் இலங்கையை தொழில் உற்பத்தி சார்ந்து வளரவிடவில்லை. எனவே, இலங்கையைச் சூழவுள்ள மேற்குலகம் உருவாக்கிய தமிழ்த்தேசியவாதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதற்காக நாவலன் தொடவில்லை.


‘ஐரோப்பிய நாடுகளில் சந்தைப் பொருளாதார அமைப்புமுறை நிறுவப்படுவற்கு முன்பு இருந்த சூழல் இன்று மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது. மூன்றாம் உலக நாட்டு தேசிய இனம்கள் இடையே தமது தேசிய எல்லைகளை நிறுவும் போராட்டம் நடக்கிறது’ என்கிறார் நாவலன்.தேசிய மூலதனம்,தேசியப் பொருளாதாரம்,தேசிய தொழிற்துறை,தேசிய வங்கிகள் என்ற 1990 கட்கு உலக மயமாக்கலுக்கு முற்பட்ட காலம் இன்று இல்லை. தனித்தனி நாடுகளின் சுதந்திரமான வளர்ச்சி.சுயேச்சையான பொருளாதாரம் இன்று இல்லை. மூலப்பொருள், சந்தை உற்பத்தி என்பன தேசிய எல்லையுள் மட்டுப்படுத்தப்பட்டதாய் இல்லை. தேசிய எல்லைகளை மீறிய பொருளாதாரச் செயற்பாட்டின் காலத்தில் புதிய தேசம்கள், தேசிய எல்லைகளை நிறுவும் போராட்டம் நடைபெறாது. இன்று கண்டம் தழுவிய முதலாளிய மயமாதல் நடக்கின்றது. இங்கு தனிநாடுகளில் பொருளாதாரம் மட்டுப்பட்டிராது உதாரணமாக ஆசியாவுக்கு பொது வங்கி, பொதுநாணயம், பொதுவரி வருகின்றது. ஆசிய நாடுகள் தம்முன் கரையத் தொடங்குகின்றன.

தொழில்துறை வளர்ச்சியானது ஏற்படும்போது பிரிவினைகள் ,உடைவுகள் வராது! மாறாக, பிரிந்தவை, உடைந்தவை ஒன்று சேரும் ஒரு பொதுக்கூட்டில் வரும். வளம்கள், உழைப்புச்  சக்திகள், உற்பத்தி என்பன ஒன்றிணைக்கப்பட்டு பரந்த பொருளாதாரச் செயற்பாடுகள் தொடங்கும், இங்கு தேசிய எல்லைகளை நிறுவும் போராட்டம் என்பது தற்கொலை முயற்சியாகும். ஆனால் ,இவை 3ம் உலக நாட்டு போட்டி நிலை வளர்ச்சிகட்கு எதிராக மேற்கு நாடுகனால் செயற்கையாகப் படைக்கப்படுகின்றது. இவை உள்நாட்டு யுத்தமாக இனமோதலாக ஆக்கப்படுகின்றது. எனினும் ,3ம் உலக நாடுகள் வளர வளர மேற்குலக அரசியல் இராணுவச் சக்திகள் தோல்வியடைவது அதிகரிக்கும்.

ஐரோப்பிய கூட்டமைப்புப் போல் ஆசியக் கூட்டமைப்பு உருவாகின்றது. லத்தீன் அமெரிக்க கூட்டமைப்பு உருவாகிவிட்டது. ஆபிரிக்க யூனியன் பத்து வருடம் இருந்ததை விடப் பலமடைந்துவிட்டது. இதனால் 3ம் உலக நாடுகளில் மேற்குலகத் தலையீடுகள் பலவீனமடையத் தொடங்கி விட்டது.

தனித்தனி நாடுகளின் ஊடான முதலாளியப் பொருளாதாரம் தேசிய உருவாக்கம் நடைபெறும் காலம் இன்னமும் நிலவுவதாக நாவலன் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்.

இது கடந்த காலத்துக்குரிய முதலாளிய வளர்ச்சிக் கட்டமாகும். உலக மயமாதல் என்றால் தேசியப் பொருளாதாரம்,தேசியத் தொழிற்துறை,தேசிய அரசியல், தேசிய உற்பத்தி என்பன கண்டம் தழுவியதாக உலகம் தழுவியதாக ஆவது என்று நாவலன் புரிந்து கொள்ளாமையால் பழைய முதலாளித்துவப் பண்புகளை இக்காலத்திலும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார். மூலதனம், தொழிற்துறை, உற்பத்தி, நுகர்வு என்பன ஆசிய மயமாதல் என்பது முழு ஆசிய தொழிலாளர்கள் ஒன்றுபடுதல் எதிர்காலத்தில் கிளர்ச்சி செய்தல் என்று அர்த்தம் கொள்ள நாவலனுக்கு தெரியாமையால் தேசியம், தேசிய எல்லை என்ற பழைய முதலாளிய வடிவங்கட்கு அவர் திரும்பிச் செல்கிறார்.


‘சர்வதேச மயமாதலை ஆசியாவுக்குள் தடுக்கவேண்டும். அதற்கெதிரான இயக்கம்களை நடத்த வேண்டும்’ என்று நாவலன் கூறுகின்றார்.

இது மாக்சியப் பார்வையல்ல, தீவிர இடதுசாரிவாதப் புத்தியின் நேரடி விளைவாகும்.சர்வதேச மயமாக்கல் என்ற பொருளாதார தொழிற்துறை வளர்ச்சியைத் தடுக்கமுடியாது!; அது, முதலாளிய வளர்ச்சிக்கட்டத்தின் விதியாகும். அதை உலகார்ந்த சோசலிச இயக்கம்களால் தொழிலாளர் அமைப்புக்களால் மட்டுமே எதிரிட முடியும். நவீன உற்பத்தியுள் ஆசியா நுழையும் போது பல புதிய மில்லியன்கணக்கான நவீன பாட்டாளி வர்க்கம் அரங்குக்கு வருகின்றது. இவர்கள் சோசலிசப் புரட்சிக்கான சக்தியாக உருவாவார்கள். வளம்கள் கொள்ளையிடப்படுகின்றது. சுரண்டல் நடைபெறுகின்றது என்பதற்காக தொழில் மயமாவதை எதிர்க்கக்கூடாது.தொழிற்துறை இல்லாமல் சோசலிசம் இல்லை.

முதலாளியத்தின் வளர்ச்சி பெற்ற படைப்பாக்கத் திறன் கொண்ட தொழிற்துறையைக் கைப்பற்றி தனதாக்கியே சோசலிசம் வளரும். சோவியத் யூனியன் முதல் கம்பூச்சியா வரை வளர்ச்சி பெற்ற முதலாளியத் தொழிற்துறை இல்லாத சமூகங்களில் புரட்சி வந்தமையால் தான் இவை சோசலிசத்தைக் கட்ட பிரமாண்டமான சிரமங்களை எதிர்கொண்டன.எனவே தான் ரொட்ஸ்கிக்கு முன்னேறிய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வரும் புரட்சி சோவியத் யூனியனைக் காக்கும் என்று எதிர்பார்த்தார்.


சோவியத் யூனியன் பட்ட சித்திரவதையும் ,ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் தோற்றமும் ரஸ்யாவில் மட்டும் தனிமைப்பட்ட சோசலிஸ நிலைமைகளாலும் தொழிற்துறை வளர்ச்சியின்மையாலும் ஏற்பட்டதாகும். பிரிட்டனில் தொழிற் புரட்சி நடந்து தசை உழைப்புக்குப் பதில் இயந்திரங்களின் இரும்பு உழைப்பு வந்ததை மாக்ஸ் எதிர்க்கவில்லை. அதை அவர் சோசலிசத்துக்கு அனுசரணையாகவே பார்த்தார். கார்,விமானம்,தொலைக்காட்சி, இணையத்தளம்,காலரா, புற்றுநோய்க்கு மருந்து எல்லாம் முதலாளியம் தான் கண்டுபிடித்தது என்று நாம் எதிர்ப்பதில்லை, மாறாக அதை கைப்பற்றி சோசலிஸ உற்பத்தி முறையின் கீழ்க் கொண்டு வர வேண்டும்.

சோசலிச இயக்கம்கள் சுரண்டல், சுற்றாடல் மாசுபடல், மூலவளங்களைக் கொள்ளையிடல், எதிர்த்துப் போராடுவது என்பது சமூகமாற்றம் என்ற மையக்கருத்தின் அடிப்படையிலேயே தொழிற்துறை வளர்ந்து ஜனநாயகம் மக்களின் சுய உணர்வு தொழிலாளர்களின் பலம் என்பன பெருகும்போது எதிர்காலச் சோசலிசமானது ஒரு போதும் ஸ்டாலினையோ பொல் பொட்டையோ தோற்றுவிக்காது. தேசம் இணையத்தளத்தில் ஸ்டாலினைப் போற்றி எழுதும் நாவலன் மறுபுறம் தமிழ்த் தேசியத்திடம் மோகம் கொண்டவராகவும் இருக்கின்றார். அணுசக்தி, மரபணு, விண்வெளி ஆய்வு, இணையத்தளம் இவைபூகோளம்தழுவிப்பரவியமை உலக மயமாதலின் விளைவு என்று நாம் ஒதுக்க முடியுமா?


உலக மயமாதல் வராமல், ஆசியா,லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்க என்பன ஒன்றுபடுதல் தொடங்கியிராது. பிரான்சிலும் ஜெர்மனியிலும் பிரிட்டனிலும் தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் வேலை நிறுத்தம் செய்வது போல் எதிர்காலத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் என்று தொழிலாளர்கள் ஒன்றாக கூட்டாக வேலை நிறுத்தம் எழுச்சி செய்யும் காலம் வரும் என்று நாவலன் போன்றவர்கள் நம்பமாட்டார்கள்.

திராவிடம், பிராமணியம், தலித்தியம், தமிழ், சிங்கம், பௌத்தம் என்று சகலதையும் ஒன்றாய்த் தகர்த்தெறியும் இந்தியத் துணைக்கண்டம் தழுவிய அரசியல் கட்டாயம் வரும் வந்து கொண்டு இருக்கின்றது. உலக மயமாதலை தனியே மேற்குலக நாடுகளின் செயற்பாடாய் பார்ப்பதும் 3ம் உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மாற்றங்களை மேற்குலகக் கட்டுப்பாட்டுள் மட்டும் விளையும் செயலாக மதிப்பதும் நாவலனிடம் உள்ள பிரதான குறைபாடாகும். அவர் ஒரு புறம் தமிழ்தேசியவாதத்திடம் சிக்குண்டவராகவும் மறுபுறம் சோசலிசத்தின் மேம்போக்கான கோசம்களை பிரகடனப்படுத்துபவராகவும் உள்ளார். எம்மை உடனடியாகவே உலக மயமாக்கலை ஆதரிப்பவர்கள் என்று முத்திரையிடாமல் அதன் சகல பரிமாணங்களையும் சோசலிசத்திற்கான சாதக பாதக நிலைமையும் ஊடறுத்து அறியும் ஆற்றலை நாம் பெறவேண்டும்.


ஏகாதிபத்தியம்களால் புறவயமாகத் தோற்றுவிக்கப்பட்ட தேசிய விடுதலை இயக்கம்கள் என்ற தூய இராணுவக் குழுக்களே இன்று உள்ளன.

இவைதேசியம் இனவிடுதலை,தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்ற குரல்களையும் தீவிரமாக ஒலிக்கின்றார்கள். சோவியத் யூனியன் உடைந்தபோது தேசியவிடுதலை நிகழ்கிறது என்று பலர் வர்ணித்தார்கள். இடதுசாரிகள் தரப்பில் இருந்து கூட சோசலிசத்துள் நிறைவேற்றப்படாத தேசியக் கடமைகள் நடப்பதாகவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒடுக்கப்பட்ட தேசிய இனம்கள் விடுதலை பெற்றுக்கொண்டு இருப்பதாகவும் கூட தத்துவவிளக்கங்கள் நிகழ்த்தப்பட்டது. பழைய சோவியத் யூனியன் முதல் உடைந்த யூகோஸ்லாவியா, செக்கோஸ்லவாக்கியா வரை காட்டப்பட்டது என்னவெனில் தேசியம், தேசியப் பொருளாதாரம் என்பன ஒரு போதும் சாத்தியமில்லை என்பதே இந்த பிரிக்கப்பட்ட எந்த நாட்டிலும் வங்கிகள், தொழிற்சாலைகள், ஊடகங்கள்,சுகாதாரம்,கல்வி,போக்குவரத்து, தொலைத்தொடர்பு,உணவுப்பொருள் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் யாவும் தேசிய சக்திகளிடம் இல்லை. யாவும் ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் இந்த நாடுகளின் முத்திரை, பணத்தாள்கள் கூட தனியார் வெளிநாட்டு நிறுவனங்களே அச்சிடுகின்றன. இவர்கள் பெயருக்கு ஒரு பாராளுமன்றத்தையும் ,விதம் விதமான நிறம்களில் ஒரு தேசியக் கொடியையும் மட்டுமே வைத்திருக்கின்றார்கள். பழைய யூகோஸ்லாவியாவில் சிகரெட் உற்பத்தி முதல் வாகன உற்பத்தி வரை சகல தொழிற்சாலைகளும் அந்நிய பெரு நிறுவனங்களிடம் போய் விட்டது. இவர்களது தேசிய நாணயங்கள் கூட மதிப்பிழந்து யூறோவும் ,டொலரும் உள்ளுர் வர்த்தகத்தில் கூட பெரும் இடத்தைப் பிடித்துவிட்டன. இங்கு தமிழீழப் பிரிவினைவாதிகட்கு தேசியப் பொருளாதாரம் என்பது உலகளாவிய மூலதனத்தின் காலத்தில் வலு இழந்து விடும் செயற்படமுடியாது, அதற்கு கீழ் அடங்கி அழிந்துவிடும் என்ற உண்மை புலப்படுவதில்லை. எனவே, தான் இவர்கள் தனிநாடு தேசிய சுதந்திரம் என்று தமது கச்சேரியைத் தொடர்கிறார்கள்.


இந்தியா, சீனா, இலங்கை இல் மட்டுமல்ல மத்திய கிழக்கு, தென் அமெரிக்க நாடுகள் போன்ற மேற்குலகை எதிர்க்கும் பொருளாதார அரசியல் கூட்டு நாடுகளையும் உடைக்க அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பன முனைகின்றன.

சீனாவில் திபேத்தியப் பிரச்னயை மட்டுமல்ல 80 க்கு மேற்பட்ட இனம்கள் மொழிகள் உண்டு. 53வீத மக்களின் மொழியான Putonghua என்ற வடசீன மொழி 1956 இல் அரச கரும மொழியானது. இது பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரம்களின் மொழியாக இருந்தது. இது ஏனைய மொழிகள் மேலான திணிப்பு அல்ல நாட்டு வளர்ச்சியின் பொருளாதார விதியாக இருந்தது. இன்று சீன வளர்ச்சி காரணமாக மேற்கு நாடுகளால் தூண்டப்பட்ட உள்நாட்டின் கிளர்ச்சியாளர்கள் பின்னடிக்கத் தொடங்கிவிட்டனர். பாகிஸ்தானில் பலூச்சன் பழங்குடிகளும் , நேபாள சிறுபான்மை இனம்களும் பிரிவினைக்குத் தூண்டப்படுகின்றனர். சிரியா,ஈரான்,,ஈராக்கில் குர்திஸ் இன இயக்கம்கள் அமெரிக்க,இஸ்ரேலிய ,ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளால் பல பத்தாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஈரானிய சிறு தேசிய இனம்களான Ahwasi, அரபுக்கள் அரசுக்கு எதிராகவும, ஈராக்கில் சியா – சுனி முஸ்லிம் பிரிவுகள் ஒன்றுக்கு எதிராக ஒன்று, நிறுத்தப்படுகின்றது.சேக்குகள், கலீப்புக்கள், மன்னர்கள் ஒழிக்கப்பட்டு பல்லினங்கள் ஒன்று சேர்ந்து ஈராக்காக, ஈரானாக ஒன்றுபட்டு எழும் மத்திய கிழக்கு முஸ்லிம் அரபுக் கூட்டுள் ஒன்றாக இணையவும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஈரானில் அரசுக்கு எதிராக ‘மக்கள் முஜாதீன்’ ஈராக்கில் ‘ Pmoi என்பன அமெரிக்க நிதி, ஆயுதங்களில் பயங்கரவாதம் புரிகின்றன. ஈராக்கில் கிறீஸ்தவர்களிடையேயும் தனியாக ஆயுதக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.




பர்மாவில் சிறுபான்மை இனம்கள் , பௌத்தம் பெயரால் நாட்டை உடைக்க முயல்கின்றனர். பர்மா 1963 இல் 24 உள்நாட்டு வெளிநாட்டுக் கொம்பனிகளை அரசுடமையாக்கியது. பிரிட்டன் கையில் இருந்த சுரங்கத்தொழில், மரம் வெட்டுதல், வங்கிகளை பறிமுதல் செய்தது.இது பண்டாரநாயக்கா மற்றும் 1970 ஆம் ஆண்டுகால இலங்கை இடதுசாரி அரசுகளை ஒத்த சீர்திருத்தங்களாகும். பர்மாவில் அண்மையில் பௌத்த மதம் ஊடாக அரசை வீழ்த்த மேற்குநாடுகள் முயன்றன. சீன மற்றும் இந்திய அரசியல் பொருளாதார பலத்தில் பர்மா தப்பிப் பிழைத்தது. லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவும் சோசலிஸ்டான Eva morales பதவிக்கு வந்து தமது வளம்களை லத்தீன் அமெரிக்க தழுவிய பொதுப் பொருளாதார மண்டலத்தில் கொண்டு வந்தார். அமெரிக்கா,ஐரோப்பிய நிறுவனம்கள் வெளியேற்றப்பட்டன. அல்லது, மிகமிகச் சிறிய பங்குகளாக ஆக்கப்பட்டன. இதனால் அமெரிக்க உளவுத்துறை ஸ்பானியர்கள் அதிகமாக வாழும் Santa, Craz, Tariya, Beni,Pandoஆகிய பகுதிகள் சமஸ்டி, தனிநாடு என்று கிளர்ச்சிகளை ஏற்பாடுசெய்தது தொடங்கின. செவ்விந்திய அடியில் இருந்த வந்தவரான Eva moralesஐ வெள்ளையின விரோதி என்றும் செவ்விந்தியர்கள் தற்போது ஸ்பானியர்களை ஒடுக்குவதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

 ஸ்பானிய வலதுசாரியான Branco Marin- Kovich இதற்குத் தலைமை தாங்கி ஆயுதம் ஏந்திய கலகக் குழுக்களை அமைத்தான். ‘செவ்விந்தியர்களைக் கொல்’ என்பதே இவர்களது கோசமாகும். இவர்கள் செவ்விந்தியர்களையும் கொன்றனர். சேகுவேரா வீழ்ந்த மண்ணான பொலிவியாவில் 36 வித்தியாசமான செவ்விந்தியக் குழுக்கள் முதன் முறையாக நிலம், கல்வி,சுகாதார வசதிகளைப் பெறுகின்றனர். இவர்களது சில மொழிகள் அரச மொழிகளாக ஆக்கப்பட்டுள்ளன.பொலிவிய மக்களாக -மனிதனாக மாறுவதைத்தடுக்கவே அமெரிக்கச்சதிகள் நடைபெறுகிறது.


பாலஸ்தீனத்தில் அன்று ,PLO வுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஹமாஸ் என்ற தீவிர இஸ்லாமிய அமைப்பை ஆயுத பாணியாக்கினார்கள். இன்று, அதே ஹமாஸ் தன்னை உருவாக்கியவர்கட்கு எதிராக ஆயுதமெடுத்துள்ளது.

மறுபுறம், யசீர்அரபாத்தின் அமைப்புத் தலைவர் அப்பாஸ் இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு அமெரிக்க ஜெனரல் Keith Dayton இஸ்ரேலில் இருந்தபடி அப்பாஸின் ஆயுதப்படைகளைக் கையாள்கின்றார். ஆயுதம்,பயிற்சி.நிதி தருகிறான். அப்பாஸின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவு இவனாலேயே பயிற்றப்பட்டது. இவர்களின் இராணுவ பயிற்சிக்கு மட்டும் அமெரிக்கா 59 மில்லியன் டொலர் நிதி வழங்கியுள்ளது. ஹமாசுக்கும் அப்பாஸின் ஆயுதப்படைகட்கும் பாலஸ்தீனத்தில் உள்நாட்டு யுத்தம் நடக்கின்றது. பரந்த இஸ்லாமிய – மற்றும் அரபு உலகின் ஆதரவின் முன்பு அப்பாஸ் தோல்வியடைவது திண்ணம்.

அமெரிக்கா பொருளாதார ரீதியாக உயிர்வாழ்வுப் போராட்டத்தை தொடங்கியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு அவர்கள் இராணுவ நிதி உதவிகள் தரமுடியாது. இஸ்ரேல் தனது நவீன இராணுவப் பலத்தின் மூலம் பாலஸ்தீனியர்கட்கு தற்காலிகமாக அழிவுகளை ஏற்படுத்தலாம். ஆனால்  நீண்ட போக்கில் இஸ்ரேல் உலக முஸ்லிம், அரபு ஆதரவு பெற்ற சக்திகளைத் தோற்கடிக்க முடியாது போகும். இஸ்ரேலிலும் அரபு நாடுகளிலும் இடதுசாரி அமைப்புக்களும் தொழிலாள வர்க்கமும பலம் பெறும்வரை பாலஸ்தீன மக்களின் நாளாந்த துயரம்களையும் யூத- முஸ்லிம் முரண்பாட்டையும் ஒழிக்க முடியாது போகும்.


தேசியமும் ,தேசியவாதமும் ஒன்றல்ல. தேசியத்தின் தோற்றத்துக்கு வரலாற்றுக் காரணிகள் இருந்தன. சந்தைப் பொருளாதாரம் தான் உபரியைக் கொண்டு வந்தது. உபரி தான் சுரண்டலாக மாறியது. முதலாளித்துவம் தன் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்தது. தன் நாட்டு எல்லைகளை தாண்டக் கட்டளையிடப்பட்டது. இன்று, தமிழர்கட்கு தனிநாடோ தமிழீழமோ உருவாகத்தக்க இந்திய துணைக் கண்டம் மற்றும் ஆசியா தழுவிய பொதுத் தேவைகள் இல்லை. புவியியல் மற்றும் பொருளாதார அவசியம்கள் இல்லை.

ஆசியாவுடன் பிரிவினைகள் ,தனிநாட்டுக் கிளர்ச்சிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. மேற்குலக மற்றும் ஆசிய வளர்ச்சிக்கு எதிரான சக்திகளால் கையாளப்படும் இராணுவக் கூலிப்படையான புலிகள் தோற்பது கட்டாயம் நடக்கும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் இஸ்ரேலாக தமிழ் ஈழம் உருவாகமுடியாது என்பதை நிரூபிக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.


"காலனிய காலகட்டத்து சமூகப் புறச்சூழலைக் கருத்தில் கொள்ள மறுத்த ரொட்ஸ்கி,ஸ்டாலின்,மாவோ, லெனின் போன்றவர்களின் தனிநபர் வழிபாட்டினையே தத்துவமாய்க் கருதிய இடதுசாரிகள் தாம் சார்ந்ததாய் கருதிய வர்க்கத்தையே தேசிய விடுதலையை நோக்கி அணி திரட்டிடத் தவறினர்."இப்படிக் கூறும் நாவலன் ,தனது இடதுசாரித் தோற்றத்திற்குரிய தொடக்க நிலை தகுதியைக் கூட எட்டமுடியாதவராகி விடுகின்றார்.

முதலாவதாக லெனின் ரொட்ஸ்கி இருவருக்கும் சமமாக மாவோவையும் ஸ்டாலினையும் சமப்படுத்தும்போது அவரது சித்தாந்த ரீதியிலான வறிய நிலை தான் தென்படுகின்றது. நாவலன், லெனினையோ ரொட்ஸ்கியையோ சொந்தமாய் கற்றறிந்த தடயம் எதுவும் அவரின் எழுத்தில் இல்லை.லெனின் ‘ரொட்ஸ்கி இருவரும் கொலனிகாலத்திய சமூகப் புறச் சூழலை விளங்கவில்லை’ என்ற அவர் கூற்று ஒரு பாலர் பள்ளிச் சிறுவனின் பல்கலைக்கழகப் பாடம் பற்றிய விளக்கமாகி விடுகின்றது. ஒரு சிறு இது சார்ந்த கருத்தைக் கூடதர அவரால் முடியவில்லை. எங்கோ முதலாளியக் கருத்துக்கட்டல்களில் சேகரித்துக் கொண்ட ஊகச் செய்திகளுடன் தத்துவார்த்தத்துறையில் உயிர்தரித்து விட முயன்றிருக்கின்றார்.


லெனின் கொலனிகால இயக்கம்கள் பற்றி தொகையாக எழுதியிருக்கின்றார். ரொட்ஸ்கியின் கொலனிகளின் விடுதலை பற்றிய எழுத்தை விசாரித்து விட்டாவது எழுதியிருக்கலாம். அவரின் லெனினுக்குப் பின்பான 3ம் அகிலம் (Die Dritte Internationale nach Lenin) போன்ற நூல்களையாவது வாசித்திருக்கலாம்.

இதில் சீன விடுதலை முதல் தென் ஆபிரிக்க,அல்ஜீரிய, இந்தியப் போராட்டம்கள் உட்பட கொலனிகளின் விடுதலை பற்றி ரொட்ஸ்கி எழுதியுள்ளார். ரொட்ஸ்கியின் ஸ்டாலினிம் மேலான விமர்சனம் என்பது தனியே ஐரோப்பியப் புரட்சிகளின் நோக்கு நிலை பற்றியது மட்டுமல்ல சீனா உட்பட கொலனிநாடுகளின் விடுதலைக்கான தந்திரோபாயம் சார்ந்த பிரச்னையுமாகும். நாவலன் தான் வாசித்தறியாத,கேட்டறிந்திராத தத்துவப் பிரதேசங்களில் வழி தவறி அலைகிறார். பொருளறியாமலே வார்த்தைகளில் சண்டையிடக்கூடாது. சொற்களின் வரலாற்று பின்புலத்தை அது உருவான அவசியக் காரணிகளை விளங்கி மாக்சியச் , சொற்பதம்களை உணர்;ந்து பொருள் முதல்வாதத்தால் ஊடுருவிப் பார்த்து எழுதவேண்டும்.நாவலன் மாக்சியச் சொற்பிரயோகம்களை தாராளமாக வீணடித்து இருக்கின்றார்.


ஸ்டாலின், மாவோ இருவருடனும் லெனின், ரொட்ஸ்கி இருவரையும் தனிநபர் வழிபாட்டை தொடங்கி வைத்தவராக நாவலன் சிருஸ்டித்துள்ளார்.

இதற்கு, ஒரு சிறு நிரூபணம் கூடத் தரவேண்டும் என்று அவர் எண்ணவில்லை. ஸ்டாலின், மாவோ இருவரது காலமும் தனிநபர் வழிபாட்டின் உச்சம் கொண்டிருந்த காலமே. இவர்களது சொந்த தத்துவ நிலை, தனிமனிதப் பாத்திரம், அன்றைய வளர்ச்சியுறாத ரஸ்ய, சீன நாடுகளின் சமூக பொருளியல் போக்குகளின் ஆய்பூடாகவே தனிநபர் வழிபாடு உருவான காரணிகளைக் கண்டறிய வேண்டும். முதலாவதாக தனிநபர் வழிபாடு என்பது சோசலிஸ்டுக் குணாம்சமல்ல மாறாக, அது தனிச் சொத்துடமையின் பண்பாடாகும்.

வீரயுக காலத்தில் ஆண்களின் அதிகாரத்துடன் தோற்றம் பெற்று பிற்கால விவசாயப் பண்பாட்டால் தொடர்ந்து வளர்க்கப்பட்டது. விவசாய சமூகம்களில் வீரர்களைப் போற்றுதல் ,தனி நபர்களைப் பாடுதல் பண்பாக இருந்தது. சுயசெயற்திறன் பறிக்கப்பட்ட சுய அடையாளமற்ற மக்கள் எப்போதும் வழிகாட்டும் தலைவர்களிடம் வீரர்களிடம் தனிமனிதர்களிடம் தம்மை ஒப்படைத்தார்கள்.

தொழிற்துறை வளர்ச்சியற்ற இந்தியாவில் அரசியல்வாதிகள் முதல் சினிமாக்காரர்கள் முன்பு வரை ,ஏன் மனிதர்கள் கால்கைகளில் விழுகின்றார்கள்?

மனிதர்களை மனிதர்கள் ஏன் வணங்குகின்றார்கள்?

அவர்களாக ஏன் தம்மைகப் பிரதி செய்து கொள்கிறார்கள்?

இது கொடூரமான சுரண்டல் உள்ள ஜனநாயகம், தனிமனித சுதந்திரம் அறியாத விவசாய சமூகம்களின் தனிமனித வழிபாட்டு நிலை தான் முதலாளியத்தின் தொழிற்துறை வளர்ச்சி வரும்போது மக்கள் பகுதியாக இத்தகைய தனிமனித வழிபாட்டு நிலைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். சுயஅடையாளம், தனிமனித உணர்வு பெறுகின்றார்கள். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற ஜனநாயக உணர்வு வருகின்றது.ஆனால், நாவலன் தனிமனித வழிபாட்டை சோசலிசத்தின் குணமாகப் பார்க்கின்றார்.


அவர் ,அப்படி எண்ணக் காரணம் தமிழ்நாட்டின் மாக்சிய இயங்கியலறியாத முன்னாள் ஸ்டாலினிஸ்டுகளின் எழுத்துக்களே. ரஸ்யப் புரட்சி என்பது முதலாளியத்தின் தொழிற்துறை வளர்ச்சி முழுமையாக ஏற்படாத நாட்டில் ஏற்பட்டது என்பதும் அங்கு, தொழிலாளர்களை விட அதிக தொகையில் விவசாயிகள் இருந்தனர் என்பதையும் உணர்ந்தால் சோசலிஸம் வந்த பின்பும் ஏன் தனிநபர் வழிபாடு நிலவியது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். சோசலிசம் வந்து அடுத்த மணித்தியாலத்திலே சகல தனிச் சொத்துடமை படைத்த மனிதக் குணம்களும் மாறிவிடுவது இல்லை !

பல ஆயிரம் வயதுடைய மக்களுடைய குணநலன்கள்.அடிமைத்தனம் மாற பல பத்து வருடம்கள் ஏன் தலைமுறைகள் தேவைப்படும். லெனினும் ,ரொட்ஸ்கியும் சோவியத் புரட்சியை நடாத்தியவுடன் பழைய வரலாற்றுத் தொடர்ச்சி உடனடியாக ஓடி ஒழிந்து விடாது, புரட்சி என்பது சோசலிசத்தை தொடக்கி மட்டுமே வைத்தது.

இரஸ்யாவின் பல ஆயிரமாண்டு கால விவசாயப் பண்புகள் தொழிலாளர் இயக்கத்தில் தொடர்ந்து தாக்கம் செலுத்தி வந்தது. விவசாயிகள் தமது ஆடு, மாடு,கோழிகள், குதிரைகள்,நிலம், வீடு. செடி,கொடி,மரம்கள், சொத்து என்று தனியுடமையின் பண்புகளைக் கொண்டு இருந்தனர். இவற்றுடன் கூடவே பழைய மதமும் நம்பிக்கைகளும் இருந்தன. இவை சோசலிசத்தின் வருகையின் பின்பு மெதுமெதுவாக மாறத் தொடங்கின. புரட்சியுடன் அறிமுகமாகின; இந்த நிலைமைகளே ஸ்டாலினிசமும் தனிமனித வழிபாடும் தோன்றக் காரணம். மேற்கு ஐரோப்பிய சோசலிசப் புரட்சிகள் துணைக்கு வந்திருந்தால் சோவியத் புரட்சியில் உள்நெருக்கடிகள் குறைந்து அதன் தனிமைப்படல் நீங்கி ஸ்டாலினிசமும் தனிமனித வழிபாட்டுணர்வும் வளர வரலாறு இடம் விட்டிராது.


தனிமனித வழிபாட்டின் வரலாற்று வேர்களை அதற்கு இடம் தரும் சமூகவியல் நிலைமை பற்றிய கவனம் எதுவும் நாவலனிடம் இல்லை.

 லெனின், ரொட்ஸ்கியின் மூல நூல்களைப் படிக்காமல் இரண்டாம் மூன்றாம் பேர்வழிகள் ஊடாக அவர்களை அறிய முற்படும் முயற்சியில் நாவலன் ஈடுபட்டமையே தொடர்ச்சியற்ற துண்டு துண்டான குறை விளக்கங்களுள்ளும் துணைச் செய்திகளிலும் அவரைப் பின் தங்க வைத்துவிட்டது.

ஸ்டாலினிசம் என்றால் நாவலன் பதறக்கூடியவர். அது உலக மாக்சிய இயக்கத்தில் ஒரு திரிபடைந்த போக்கு என்று அவர் காண்பதில்லை. இதை ஏதோ ரொட்ஸ்கியியம் பேசுபவர்களின் குற்றச்சாட்டு என்று அவர் கருதக்கூடியவர்.

ரொட்ஸ்கி கடைசியாக எழுதிய நூல்களில் ஒன்று ஸ்டாலின் பற்றிய நூலாகும். ( Stalin Eine Biographie) இதில் எத்தகைய உள்,வெளி நிபந்தனைகளில் அதிகாரத்துவ சக்தியாய் ஸ்டாலினின் எதிர்க் கேள்விகட்கு அப்பாலான சர்வாதிகாரியாய் வளர்ந்தார் என்பதை விளக்கியுள்ளார். இந்த ரொட்ஸ்கியின் நூலின் பாதிப்புடனேயே பிற்காலத்தில் இசாக் டொச்சர் ‘(Isaac deutscher) "stalin Eine Politischen biografhie" என்ற ஸ்டாலின் பற்றிய நூலையும் எழுதினார். இவைகளைப் படித்தால் தனிமனித வழிபாடு உருவானதற்கான காரணிகள் நாவலனுக்கு தத்துவரீதியில் தென்படும்.

பிரான்சைச் சேர்ந்த ரொட்ஸ்கிய ஆய்வாளரான Pierre broueஎழுதிய ( Trotzki ) ரொட்ஸ்கி என்ற புதிய நூல் 1292 பக்கத்தில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.தொண்ணூறுகளின் தமிழ்நாட்டின் பழைய ஸ்டாலினிஸ்டுகளின் எழுத்துப் பாதிப்புக்குள்ளானவர் நாவலன், இந்த நபர்களில் எஸ்.வி.ராஜதுரை போன்ற ஒரு சிலர் மட்டுமே ரொட்ஸ்கியின் நூல்கள் ஒரு சிலவற்றிலாவது சிறிது பரீட்சயம் இருந்தது. ஏனையோர் ஸ்டாலினிசத்தில் இருந்து நேரடியாக 1970 களின் மேற்குலக சீர்திருத்தவாதக் கருத்துகட்கு வந்து சேர்ந்தவர்கள். ரொட்ஸ்கியை உள்வாங்காத எவரும் ஒரு மாக்சியவாதியாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்.


Madame Bluvatsky(மடம் புளுவாட்ஸ்கி):

மடம் புளுவாட்ஸ்கி என்று பொதுவாக அழைக்கப்படும் Helena Bluvatskyமற்றும் மாக்ஸ்முல்லர் ஆரியர் சிந்தனைவுருவாக்கத்தில் பங்கெடுத்தமையையும் திராவிடக் கருத்தை ஆய்ந்த கார்டுவெல் எவ்வாற பிரிட்டிஸ் கிழக்கு இந்தியக் கொம்பனியுடன் உறவு கொண்டு இருந்தார் என்பதையும் நாவலன் காட்டியிருக்கின்றார். எனினும் ,அவரது விளக்கம் பலவீனமானது.அக்காலத்திய வரலாற்றுச் சூழலையும் இக் கருத்துக்கள் தோன்ற ஏதுவான மூலகாரணிகளையும் அவர் கண்டறிந்து எழுதத்தவறினார். மடம் புளுவாட்ஸ்கியின் ஆய்வுகள் ஆரியம், பௌத்தம் ஆகியவைகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. பௌத்த- இந்து மதம்களைக் கூட ஆரிய மூலத்துக்குரியதாய் கருதியதுடன் ,இவைகட்கு ஆதியானது என்று எண்ணக்கூடிய பேர்சியச் சிந்தனைகட்கும் சென்றார். இவரின் ஆசான் Jamal ad – Din al Afghani என்ற சூபி முஸ்லிம் சிந்தனையாளராவார். ஏகிப்து, லெபனான், சிரியா,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்த மடம் புளுவாட்ஸ்கி தன் குருவாய்க் கொண்ட  Jamal ad – Din al Afghani யிடம் பேர்சிய (ஈரான்) தத்துவச் சிந்தனைகளையும் கற்றனர். சாராதூஸ்ட்ரா போன்ற பேர்சிய தத்துவவாதிகளையும் ஆரியர்களின் தொடக்கமாய்க் காண முயன்றார்.


15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த ஆரியர் ஆளப்பிறந்தவர்கள் உயர் இனம் என்பதான கருத்தியல், தோலின் நிறம்கள்,மூக்கு, தாடை, முக அமைப்பு, தலைமுடி சார்ந்து -தனித்துவம் சார்ந்து- நிறுவல்கள் ஏன் எழுந்தன?

இது நாவலன் கருதுவது போல் தனியே கீழை நாடுகளை வெற்றி கொண்டபோது எழுந்த சித்தாந்தம் மட்டுமல்ல. இது, ஐரோப்பாவில் செமிட்டிக் எதிர்ப்பையும் ,தொழிலாளர் வர்க்க ஒன்றிணைவுக்கு எதிரான கூறு போடும் சிந்தனையுமாகும். தொழிலாளர் இயக்கச் சிந்தனைகள் சோசலிச இயக்கத் தலைவர்களை யூதர்கள் அல்லது யூதமயமாக்கப்பட்ட சிந்தனை போக்குகளின் தாக்கம்கட்கு உட்பட்டவர்களாகக் காட்டப்பட்டனர். இது ஐரோப்பா தழுவிய இயக்கமாக இருந்தது. இது பிற்காலத்தில் தீவிர சோசலிச இயக்க எதிர்ப்பு வடிவமான பாசிசமாக மாறியது. ஐரோப்பாவில் ஆரியர் – திராவிடர் என்ற முரண்பாடு நிலவவில்லை. இது இந்தியா போன்ற நாடுகளிலேயே இந்த வடிவத்தை எடுத்தது. வட இந்தியரை ஆரியர் என்ற பகுப்புள் கொண்டு வந்தது. ஆனால், இங்கு மடம் புளுவாட்ஸ்கி; ஆரியப் பெருமைக்கு வாதிட்ட போதும் அவர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்லாவிய மக்கள் பிரிவைச் சேர்ந்தவராகும்.ஆரியச் சிந்தனையானது ஸ்லாவியரை கீழ் மக்களினம்களில் ஒன்றாகவே கருதியது. பிற்காலத்தில் கிட்லர் ஸ்லாவியர்களை பூண்டோடு வேரறுக்க வேண்டும் என்று கூறினான்.


மடம் புளுவாட்ஸ்கி ஆரியம், பௌத்தம், இந்து,பேர்சிய, சிந்தனை ஒரே மூலத்துக்குரியதாய் காண முயன்றார் என்றால் அவர் இந்தியாவின் ஆரியர், திராவிடர், இந்து, பௌத்தம், ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுகளை இணையவிடாமல் செய்ய முயன்றார். ஐரோப்பிய யூத எதிர்ப்பை அவர் இந்திய, இலங்கை போன்ற நாடுகட்கும் கொண்டு வந்ததுடன் இலங்கைச் சிங்கள மக்களை ஆரிய பௌத்தராகவும் வட இந்தியரை ஆரியராகவும் காண்பிக்க முயன்றார், மடம் Colonel Olcott இருவரும் மேற்குலக கருத்தியல் பிரச்சாரகர்களே. அவர்கள் இந்திய இலங்கை மக்களது பௌத்தம், இந்து, சாதிப்பிரச்னை இவைகளை சிறப்பாகப் பயன்படுத்தினர். இலங்கையில் அநாகரீக தர்மபாலாவை பௌத்த மதச் சீர்திருத்தவாதியாய் மாற்றியதுடன் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரை தன் சீடராக்கியதுடன் பௌத்தம் பரப்பல் என்ற பெயரிலும் இந்திய – இலங்கையின் பழைமையான சமூகப் பிளவுகளை நிரந்தரமாக்கவும் பிரிட்டனுக்கு எதிரான ஐக்கியம் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டனர்.

அநாகரீக தர்மபாலா இந்திய,முஸ்லிம், தமிழ் எதிர்ப்புடன் விசித்திரமான முறையில் தீவிர யூத எதிர்ப்பையும் கொண்டிருந்தார். மறுபுறம் தமிழ்நாட்டில் மடம் புளுவாட்ஸ்கியின் தீவிரமான பௌத்த சீடரான அயோத்திதாசப் பண்டிதர் தீவிரமான பிராமணிய ஆரிய எதிர்ப்பை வெளியிட்டதுடன் பிற்கால தலித்துக்கள் பௌத்தர்களாக மாறத்தக்க கருத்துக்களையும் உருவாக்கினர். இலங்கையில் மடம் புளுவாட்;ஸ்கியும் Colonel Olcott உம் இலங்கை பௌத்த மத எழுச்சியின் கர்த்தாக்களாக இன்று வரை மாறினர். Olcott பெயரில் கொழும்பில்  Olcott Mawatha கூட உள்ளது. அவர் சிங்களவர்களால் தீவிர பௌத்த மத விசுவாசி எனக் கருதப்பட்டார். மேலைத்தேச வளர்ச்சி பெற்ற இராஜதந்திரம் மற்றும் மக்களினம் மதம்கள் பற்றிய ஆரம்பகால மானுடவியல் முன்பு கீழைத்தேசமக்கள் தோற்கடிக்கப்படத் தக்க அறிவையே கொண்டிருந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆபிரிக்க ஆசிய நாடுகளைக் கைப்பற்றிய ஐரோப்பியர்கள் தாம் பிடித்த நாட்டு மக்களை ஆள இயற்கையாக உரிமையுடையவர்கள் அந்த மக்களை நாகரீகப்படுத்தும் கடமையை ஏற்றிருப்பவர்கள் என்ற சிந்தனைகட்கு மடம் புளுவாட்ஸ்கி போன்றவர்கள் வழியமைத்தனர்.


1875 இல் நியூயோர்க்கில் Theosphical society மடம் புளுவாட்ஸ்கி ஆரம்பித்தபோது அக்கால ஐரோப்பாவில் சோப்பன் கோவர், நீட்சே உட்படப் பலர் பௌத்தம், ஆரியம், இந்துமதம் ஆகிய கருத்துக்களை உள்வாங்கியிருந்தனர்.ஜெர்மனியப் பாசிசத்தின் தூய ஆரிய இனக் கொள்கையின் மூலவரான நீட்சே பௌத்தம், இந்துசமயம், சாராதூஸ்ட்ரா ஆகியோரில் ஈடுபாடும் இவை ஆரிய அடையாளம்கட்கு உரியவை எனவும் கருதினான்.அவன் ருக் வேதத்தைக் கற்று இருந்தான். ஜெர்மனியின் பெரும் இசைக்கலைஞரான ரிச்சர்ட் வாக்னர் ( Richard wagner) பௌத்த -இந்து மதப் போக்குகளில் ஈடுபாடு காட்டியவர்.எனவே, மடம் பூளுவாட்ஸ்கியின் சமகாலத்தில் ஆரிய-பௌத்த – இந்துக் கருத்தாக்கம்கள் ஆய்வுகள் ஐரோப்பிய நாடுகட்கு பொதுவாக இருந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

1856 இல் கார்டுவெல் ,திராவிட மொழிகள் பற்றிய எழுச்சிகள் ஏற்படத் தொடங்கின. 1856 இல் இந்திய சிப்பாய் கலகத்தின் பின்பு பிரிட்டிஸ் அரசு இந்தியர்களை ஐக்கியப்படாமல் இருக்கவும் ஒன்றிணைந்த சக்தியாய் தமக்கு எதிராக எழாமல் இருக்கும் கருத்தாக்கங்களையும் தொடர்ந்து உருவாக்கி வந்தது.




இக்காலப் பகுதியிலேயே ஐரோப்பாவில் யூதர்கள் மத்தியில் ‘சியோனிசம்’ உருவாவதைப் பார்க்கின்றோம். எந்த யூதர்கட்கும் செமிட்டிக் சிந்தனைக்கும் எதிராக ஆரியர் சிந்தனை உருவானதோ அந்த ஆரியச் சிந்தனைக்கு ஆதரவு கொடுத்த அரசுகள் சியோனிசச்  சிந்தனைக்கு இடம்விட்டுத் தந்தன.

யூதர்களைப் பல நூறு வருடங்களாக பலி கொண்டு வந்த கிறீஸ்தவம், மற்றும் ஐரோப்பிய அரசுகட்கு எதிராய் சியோனிசம் தோன்றவில்லை மாறாக, இது ‘அரபு மற்றும் ஆசியக் காட்டுமிராண்டிகட்கு எதிராக மேற்குலக உதவியுடன் நாகரீகத்தை நிலை நாட்டுவது இஸ்ரேலை உருவாக்குவது பற்றிப் பேசியது’ சியோனிசத்தைப் படைத்தவர்கள் இஸ்ரேலிய யூதர்கள் அல்ல ஐரோப்பிய யூதர்களே ஆவர். இவர்கள் ஐரோப்பியர் அரபுநாடுகளைக் கைப்பற்றி அவர்களை அழித்தமையை எதிர்க்கவில்லை.மாறாக, தம்மையும் அரபுக்களையும் ஒன்று சேர ஒடுக்கிய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களையே ஆதரித்தனர். சியோனிசத்தின் தந்தை எனப்படும் Theodor Herzel (1860-1904) யூதர்கட்கான நாடு (Der Judens taat ) என்ற நூலை 1896 இல் எழுதினார். இவர் கிறீஸ்தவ மதத்தையோ வத்திக்கான் பாப்பரசரரையோ ஆரியரையோ தாக்கவில்லை. செமிட்டின் எதிர்ப்பாளர்களை எதிர்த்துப் போராடவில்லை.மாறாக,அவர்கள்முஸ்லிம்களையும் அரபுக்களையும் வென்று அடிமைப்படுத்தியதை ஆதரித்தார்.

பைபிளின் பெயரால் ஆபிரகாமின் நிலமான இஸ்ரேலை தமது என்று உரிமை கோரினார். மற்றொரு சியோனிச சிந்தனையாளரான Jabotinsky இஸ்ரேலை யூத மயமாக்க கட்டாயக் குடியேற்றம்களைச் செய்யவேண்டும்.காட்டுமிராண்டி அரபுக்களின் படையெடுப்பைத் தடுக்க ஐரோப்பிய நாகரீகத்தின் சார்பில் இஸ்ரேலைச் சுற்றி மதில் எழுப்பவேண்டும் என " The iron wall, we and the Arabs"என்ற நூலில் 1923 இல் எழுதினார்.

பிறிதொரு சியோனிச சிந்தனையாளர் David Hocohen லெபனான், சிரியா, ஜோர்தான், பாலஸ்தீனம் அடங்கிய பெரிய இஸ்ரேலை அமைக்க வேண்டும் என்று கூறினார்.மேற்கு நாடுகள் அரபு நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கிய சமயமே ஐரோப்பிய யூதர்களிடமிருந்து சியோனிசம் எழுகிறது. 1840 இல் பிரிட்டிஸ் வெளிநாட்டமைச்சராக இருந்த Palmerstone தனது துருக்கியத் தூதரான Lord Ponsonby மூலம் துருக்கி சுல்தானை பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றும்படியும் எகிப்திய jpa Mohamed Ali க்கு எதிராக யூதர்களை மனிதமதில்களாக்க வேண்டும் என வற்புறுத்தினார் Mohamed Ali துருக்கிய சுல்தானுக்கும் பிரிட்டனுக்கும் எதிராக இருந்தார்.1841 இல் பிரிட்டிஸ் அரசு யூதர்களைப் பாலஸ்தீனத்தில் குடியேற்றத் திட்டமிட்டது.


இப்போக்குகளின் தொடர்ச்சியாகவே 50 வருடம் கழிந்து Theodor Herzls ஆல் சியோனிசம் தத்துவமாக எழுதப்படுகின்றது. சியோனிசம் யூதர்களின் விடுதலைத் தத்துவமல்ல யூத தேசிய இயக்கமுமல்ல அது பாசிச இனவாத தத்துவமாகும்.

20ம் நூற்றாண்டில் ஒரு மக்கள் பிரிவாக தேசியமாக யூதர்கள் இருக்கவுமில்லை. யூதர்கள் எனப்பட்டோர் வெறும் மத நம்பிக்கையாளர்கள் மட்டுமே. அவர்கள், உலகில் பல மொழி பேசிய ஒரு தொகை நாடுகளில் வாழ்ந்த பல நிறங்களுடைய மக்கள் பிரிவு. மாறாக, ஒரு தேசிய இனமல்ல முஸ்லிம்கள் எப்படி உலகனைத்தும் வாழ்ந்தபோதும் ஒரு இனமல்லவோ இந்துக்கள் கிறீஸ்தவர்கள் எப்படி பல பிரிவு மக்களை உள்ளடக்கியவர்களோ அப்படியே யூதர்களும் ஒரு தேசிய இனத்துள் அடங்கக் கூடியவர்களல்ல. ஆரியர், திராவிடர் எப்படி இனமல்லவோ யூதர்களும் அப்படியே சியோனிசம் ஐரோப்பிய யூதர்களால் எழுப்பப்பட்டபோது அரபு நாடுகளில் முஸ்லிம்களுடன் வாழ்ந்து வந்த யூதர்கள் இதை ஏற்கவில்லை. ஐரோப்பாவில் ஆரியம் பிறந்த சமயத்திலேயே ஏறக்குறைய அதே நேரத்திலேயே சியோனிசமும் படைக்கப்படுகின்றது.


மடம் புளுவாட்ஸ்கி திராவிடர்கள் உட்பட ஏனைய மக்களை மிருகங்களாக கீழ்நிலை மனிதர்களாக வர்ணித்தமையை நாவலன் காண்பித்துள்ளார். ஆனால் , தமிழ்த்தேசியம், திராவிடம் என்பவைகளை ஆராயாமல் விட்டு விட்டு பௌத்தம், சிங்களத் தேசியம் இரண்டும் மேற்கத்தைய அரசியலுக்குரியது என்று காட்ட நாவலன் தீவிரமாய் முயல்கின்றார்.

இது வெளிப்படையான பக்கச் சார்பாக தமிழ்த்தேசியவாத ஓரவஞ்சனையாகி விடுகின்றது. 1874 இல் இலங்கையின் கவர்னராக இருந்த வில்லியன் எச்.கிரகரி கட்டளைப்படி மகாவம்சம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டு சகல பௌத்த விகாரைகட்கும் விநியோகிக்கப்பட்டதை விபரிக்கும் நாவலன் இலங்கையுள் நாவலரின் சைவ இயக்கம் அதேசமயம் பைபிளைத் தமிழாக்கம் நாவலர் உதவுமளவு பிரிட்டிஸ் ஆட்சிக்கு நெருக்கமாக இருந்தமை தமிழ்நாட்டில் திராவிட நாடு, ‘இலங்கை இந்தியத் தமிழ்நாடுகளை உள்ளடக்கிய பரந்த தமிழ் நாடு’ போன்ற போக்குகளையும் இவற்றின் தொடர்ச்சியான இந்திய- இலங்கைத் தமிழ்நாட்டுக் கோரிக்கைகளை நாவலன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. 1918 முதல் 1925 வரை இலங்கையில் தேசாதிபதியாக இருந்த வில்லியம் மனிங் ( William Mannig) தான் கண்டி மற்றும் கரையோரச் சிங்களவரிடையே பிளவுகளை ஏற்படுத்தினார் .கண்டியர் தனியான இனம் நீண்டகாலமாக தனி அரசைக் கொண்டிருந்தார்கள் என்று சிங்கள மக்களிடையே கூட கண்டி, கரையோரச்  சிங்களவர்கள் என்று பிரிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே பண்டாரநாயக்கா ஒரு சமயம் கண்டியர்கட்கு சமஸ்டியாட்சி கோரினார்.


இந்தப் பிரிவினை கோரிக்கைகள் பின்பே செல்வநாயகம் சமஸ்டி கேட்டார். ஜி.ஜி. பொன்னம்பலம் பிரிட்டிஸ் கொமன்வெல்த்தில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையான ஐம்பதுக்கு ஐம்பது கேட்டார். இந்தியா – இலங்கை இணைந்த தமிழ்நாடு என்ற கோரிக்கையை அமிர்தலிங்கம், ஊர்காவற்றுறை நவரத்தினம், வட்டுக்கோட்டை தியாகராசா, வவுனியா சுதந்திரலிங்கம் ஆகியோர் கொண்டிருந்தனர். இது தென் இந்தியாவின் ‘பெரும் திராவிட நாடு’ அரசியலின் தொடர்ச்சியே ‘அகண்ட இந்துஸ்தான்’சியோனிஸ்டுகளின் ‘பெரிய இஸ்ரேலிய தேசம்’, துருக்கியவாதிகளின் ‘பெரிய ஒஸ்மானிய அரசு’ம் அல்பானியர்களின் ‘பெரும் அல்பானியா’ நாசிகளின் ‘ஆரிய தேசம்’ என்பன சோசலிச இயக்கம்கள் தொழிலாளர் அமைப்புக்களின் பரந்த அரசியலுக்கு எதிரான பிளவு வேலையாக இருந்தது.

 நாவலன் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் எதிர்விளைவாகவே தமிழ்த்தேசியவாதத்தைப் பார்க்கின்றாரே தவிர ஏகாதிபத்தியங்களின் இந்தியத் துணைக்கண்டத்தை துண்டுபடுத்தும் அரசியலாகவே திராவிடத்தில் தொடங்கி தமிழ்நாடு, தமிழ் ஈழத்தில் முடிவுற்றது.என்பத உய்த்துணரத்தெரியாதுபோனார். தமிழ், சிங்கள முரண்பாடு என்பது இந்திய துணைக்கண்டத்தில் பிரிவினைத் திட்டத்தின் ஓரு பகுதியாகும். இதை உணர்ந்த ஒரே ஒரு கட்சியாக 1930 களின் இறுதியிலே இருந்த மாக்சிய இயக்கம் எல்எஸ்எஸ்பி தான். அவர்கள் தான் 1940 களிலேயேமழு இந்தியத் துணைக்கண்டத்துக்கான சோசலிசக் கட்சியைத் தொடங்கினார்கள்.

ஆரியர் – திராவிடர்:

கி.மு.7000 ஆண்டளவில் வட ஆபிரிக்கப் பகுதியில் விரிந்து பரவியிருந்த ஏரிகள்,நீர் நிலைகள், ஆறுகள் வற்றத் தொடங்கின. பரந்த புல் வெளிகள், காடுகள், சதுப்பு நிலங்கள் இதன் பயனாக மறையத் தொடங்கின. வரண்ட ஆற்றுப் படுக்கைகளும் ,மணல் வெளிகளும் தீவிர வரட்சியும் தோன்றின. வட ஆபிரிக்காவில் பாலைவனம் பெரிதாகப் பெரிதாக வடக்கு ஐரோப்பாவில்  பனி உருகத் தொடங்கியது. பனி உருகிய இடம்களில் புல்வெளிகள், காடுகள், நீர்த்தேக்கங்கள்,ஆறுகள் உருவாகின. இக்காலப் பகுதியிலேயே வட ஆபிரிக்காவில் வாழ்ந்த மக்களின் குடிபெயர்வுகள் தொடங்குகின்றன.

 வரட்சியும் நீரின்மையும் இம்மக்கள் குடி பெயரக் காரணமாகும். விவசாயத்தின் வயது 11000 வருடங்களாகும். இம்மக்கள் விவசாயத்தை அறிந்தவர்களாகவும் மந்தை வளர்ப்பை பிரதானமான தொழிலாளியும் கொண்டவர்களாகத் தெரிகிறது. இதையே வரலாற்றில் பெரும் குடிபெயர்வு எனக் கொள்ள முடியும். இதில் ஒருபகுதி வட ஐரோப்பா உட்பட இந்தியா உட்பட ஆசியப்பகுதிகட்குப் பரவினார்கள் என்று கொள்ள முடியும். கி.மு.4000 ஆண்டுகளில் மண்பாண்டம் விளையும் சக்கரம்.சூழைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் மண்பாண்ட வளர்ச்சி தீவிரமாகியது.


கிட்டத்தட்ட இக்காலப்பகுதியில் சுமேரியர்கள் இரும்பிலான கருவிகளைச் செய்தனர். கி.மு.3000 இல் மேற்கு ஆசியாவில் இரும்புப் பண்பாடு வளர்ந்தது. இரும்புக் காலம் என்பது இரும்புத் தாதுவை உருக்கி தனியே இரும்பைப் பிரித்தெடுத்து கருவிகளைச் செய்வதாகும்.அதை, உற்பத்தியில் பயன்படுத்துவதாகும். கல்,மரம், செம்பு,வெண்கலத்தை விட இரும்புக்காலத்தில் வளர்ச்சிகள் விரைவாகப் பெருகின. மந்தை வளர்ப்பு, மண்பாண்டம் செய்தல், நெசவுத் தொழில்,தோல்பதனிடுதல், விவசாயம், நீர்ப்பாசனம், மற்றும் ஓடம்,தேர் வண்டி என்பன இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே முன்னர் இருந்ததை விடப் பிரமாண்டமான முன்னேற்றம் கண்டன. அரசுகள்,மன்னர்கள், சிறந்த போர் வீரர்கள், சிறந்த ஆயுதம்கள் வந்தன.


சீனர்களும் ,சுமேரியர்களும் இரும்பு நாகரீகத்தைச் சார்ந்து வளர்ந்தனர். இரும்பை உருக்கிக் கருவிகளையும் ஆயுதம்களையும் செய்த மக்கள் அதை உற்பத்தி செய்யாது வாங்கிப் பாவித்த மக்களை விட முன்னேறியவர்களாக இருந்தனர். தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களாக இருந்தனர். இரும்புக் கண்டு பிடிப்பு என்பது ஒரு தொழிநுட்ப அறிவியல் புரட்சியாகும்.இரும்பு நாகரீகத்தையுடைய மக்கள் கல்,செம்பு,வெண்கல நாகரீகத்துக்குரிய மக்களை வென்றனர். பொருட்களை ஆக்கும் திறன் படைத்தவர்களாக இருந்தனர். கடின உழைப்பில் இருந்தும் உழைப்பு விரயத்தில் இருந்தும் விடுபடுவதே வளர்ச்சியின் அடையாளமாகும்.

மனித நாகரீக வளர்ச்சி என்றால் மக்கள் என்ன விளைவித்தார்கள்? என்ன பொருட்களை உற்பத்தி செய்தார்கள்? உற்பத்தியில் தொழில் வளர்ச்சியில் எந்த மட்டத்துக்கு வளர்ச்சி எய்தி இருந்தனர் என்பதே அளவீடாகும். கருத்துக்கள், உணவு, உடை,வீடு,பழக்கவழக்கங்கள் இதைச் சார்ந்தே வளர்ச்சி பெறும். எகிப்திய, சீன, சுமேரிய வளர்ச்சிகளை இந்த அடிப்படையிலேயே நோக்கவேண்டும்.


இந்த நாகரீக வளர்ச்சிப் போக்கின் தொடர்ச்சியாகவே பார்சிய நாகரீகம் தோன்றுகின்றது. இங்கு செமிட்டிக், திராவிட,ஆரிய, மங்கோலிய என்று பல மொழிக் கூட்டமைப்புக்கள் ஒன்றுக்கொன்று கொடுத்தும் வாங்கியும் வளர்ந்தன.


மேற்குலக ஆர்ய இனக்கோட்பாட்டாளர்களால் போற்றப்படும் பார்சிய மதச் சீர்திருத்தவாதியான சராதூஸ்ட்ரா கி.மு. 6ம் நூற்றாண்டில் தோன்றினார்.இவர் ‘நல்லதுக்கும் தீயதுக்குமான இடைவிடாத போராட்டம்’ என்ற கருத்தைப் போதித்தனர். ‘ஒரு தீர்க்கதரிசி தோன்றுவார். தீமைகளையும் நரகத்தையும் அழிப்பார். இறந்தவர் உயிர்த்தெழுவர். உலகில் முடிவாக அழிவற்ற மகிழ்ச்சி ஏற்படும் என்ற கருத்துக்களை அவர் பிரச்சாரம் செய்தார்.இந்த கருத்துக்களை அவர் அவருக்கும் முந்திய மாஜி எனப்படும் மதநம்பிக்கையில் இருந்து பெற்றுக் கொண்டனர்.

சாராதூஸ்ட்ராவின் மதம் கி.மு. 6ம் நூற்றாண்டில் வடமேற்கு ஈரான்,இந்தியா உட்பட பல நாடுகட்கும் பரவியது. இவரின் கருத்துக்கள் பின்பு பௌத்தம், சமணம்,கிறீஸ்தவம் ஆகிய வைக்குள்ளும் புகுந்தது. சாராதூஸ்ட்ரா காலத்தில் வாழ்ந்த பார்சிய மன்னரான முதலாம் டேசியஸ் தன்னை பார்சிய வழிவந்த ஆரியன் என்று அழைத்துக் கொண்டான். இங்கு, ஆரியன் என்ற பதம் மன்னன், தலைவன் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இனக்குழு, அல்லது மதம் என்ற பெயர்களில் கூறப்படவில்லை. அக்காலத்தில் ஆரிய இனக் குழுக்கள் நிலவின என்பதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.

 பிற்கால ஆரியத் தத்துவவாதிகள் கட்டியமைக்க முயன்றது போல் கி.மு. 2000-1500 காலத்தே சுமேரிய, எகிப்து, சிந்து வெளி நாகரீகம்கள் நிலவியபோது எந்தவொரு ஆரிய நாகரீகமோ மொழியோ நிலவியதான எந்த வரலாற்றுச் சான்றோ புதைபொருள், மானுடவியல் தடயம்களோ கிடையாது. கி.மு.500 இல் தான் ஆரியர் என்ற சொல் அறியப்படுகின்றது. இச்சொல் உழுதல் என்ற கருத்துக் கொண்ட ‘அர்’என்ற பார்சியச் சொற்பிரயோகத்தில் இருந்தே பிறந்துள்ளது.


சராதூஸ்ட்ராவுக்கு முன்பே பார்சியாவில் இந்திரா,வருணன், அஸ்வினி போன்ற செமிட்டிக் தெய்வம்கள்இருந்தன. சாராதூஸ்ட்ரா மதம் ஒரு கலப்பு மதமாகும்.

இம்மதம் தோன்றிய பின்பு சில தெய்வம்கள் தீய தெய்வம்களாக்கப்பட்டன. இந்திய மதம்கள் பார்சிய, செமிட்டிக் மதங்களின் கடவுளர்களையுடையது, அசுரர்.வருணன்தேவர்,ஆரியர் என்ற பதம்கள் பார்சியவிலிருந்து பரவின. அசுரன் என்பது செமியர்களின் அசீரியத் தெய்வமாகும். அசீரியர்களின் ஆட்சிக்காலம் கொடியது என்பதால் அவர்களின் தெய்வமான அசுரர் தீய தெய்வமாகியது.

அசுரர்கள் என்போர் பார்சியவிலிருந்த ஒரு போராடும் மக்கள் பிரிவாகும். பார்சிய இலக்கியமான’அவஸ்தா’வில் அசுரர்கள் உயர்ந்தவர்கள் ,தேவர்கள் அவர்களின் அடிமைகள் என்று கூறப்படுகின்றது.

இந்திய வேதம்கள் திராவிட ஆரியப் போராட்ட வரலாறு என்று இதுவரை கற்பிக்கப்பட்டுள்ளது தவறாகும்.

இந்தியாவுள் ஆரியர் திராவிடர் போராட்டமோ, தேவர், அசுரர் யுத்தமோ நடக்கவில்லை.கி.மு. 800 க்கு முற்பட்ட பார்சிய பழம் இனக் குழுப்போராட்டம்களை அவர்கட்கு பின்பு வந்தவர்கள் இந்தியாவுக்கும் கொண்டு வந்துவிட்டனர். இவை வேதம்களிலும் இடம் பெற்றன. பிற்கால ஆரிய திராவிட ஆதரவாளர்கள் அதை இந்தியாவில் நடந்த இரு பிரிவு மக்களிடையேயான போராக்கிவிட்டனர். அசுரர்கள் என்பதற்கு சமஸ்கிருதத்தில் புனிதமானது நல்ல ஆவி, உயிர்த் துடிப்பானது என்ற பொருள் உண்டு. ஆகவே, பார்சியப் பழம் கதைகள் வித்தியாசம் வித்தியாசமான செய்திகள் வேதம்களில் இடம் பெற்றனவே தவிர அது ஆரிய, திராவிட மொழி பேசிய மக்கள் பிரிவினரை தனியே உள்ளடக்கிய இலக்கியம் என்பது தவறு.

பார்சிய வேதமான அவஸ்தா தேவர்கள் அடிமைகள் என்றும் அசுரர்கள் உயர்ந்தவர்கள் என்றும் வர்ணிக்க, இந்திய வேதம்களில் இது எதிர்மாறாக தேவர்கள் உயர்ந்தவர்கள் அசுரர்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. எனவே, வித்தியாசமான மக்கள் பிரிவுகளின் பழைய கதைகள் இந்திய வேதம்களில் இடம் பெற்றன எனக் கொள்ளலாம். அசுரர்களை இந்தியாவில் திராவிடர்களுடன் இணைக்கும்போது பார்சியாவில் அசுரர்கள் செமிட்டிக் பண்பாட்டுக்கு உரியவர்களாக இருந்தனர்.


இன்று ஆரியர், திராவிடம் என்று விளங்கப்படுபவை எகிப்திய, சுமேரிய, பார்சிய நாகரீகம்களின் பல்வேறு மொழி பேசும் மக்களின் கலந்த நிலை. இனக்குழுப் போராட்டம்களின் சிதறல்களாகும். இவைகள் ஒன்றை ஒன்று இடையறாது எதிர்த்துப் போராடின என்பது  தவறு.

செம்பு, வெண்கலம் மற்றும் இறுதியாக இரும்புக் காலத்தில் இந்த நாகரீகம், பரவி மக்களை ஒன்றிணைத்தது. குடிபெயரவும் கூடி வாழவும் புதிய நிலம்களைத் தேடிச் செல்லவும் தூண்டியது. வித்தியாசமான மொழிக் குழுமம்களை இனம்களாக மக்கள் பிரிவாக கற்பனை செய்ய முடியாது.எப்போதும் மொழி ,கடவுள் நம்பிக்கை என்பன குடி பெயர்கின்றன. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கும் ,ஒரு நூற்றாண்டில் இருந்து அடுத்தடுத்த நூற்றாண்டுகட்கும் செல்கின்றன. இவை குடிபெயர்வினாலோ, ஒத்த பண்புடைய மக்கள் தொடர்பாலோ மட்டுமல்ல. வர்த்தகம், கலாச்சாரப் பரம்பல்களாலும் நடைபெறுகின்றன. இதை தனியே ஆரிய, திராவிட மொழிக்குரியவை என்று குறுக்கிவிட முடியாது. மேலும் பார்சியா முதல் இந்தியா வரையில் ஒரே ஒத்த கலாச்சாரப் பரம்பல் வர்த்தகம், புவியியல் தொடர்புகள் முக்கியமானவை.


இந்தப் பிரதேசம் திராவிட, செட்டிக், மங்கோலிய, பார்சி மொழி மக்கள் பிரிவுகள் அடங்கியதாக இருந்தது. ஒஸ்ரோவிட் எனப்படும் மங்கோலிய அடியினரான ஆதியான மக்கள் ஆசியப் பிராந்தியம் எங்கும் வாழ்ந்தனர் என்ற வரலாற்றுண்மைகளை ஆரிய- திராவிட தத்துவம்கள் கணக்கில் கொள்வதில்லை. ஆரியர், திராவிடர் என்பது ஒரே புவியியல் அமைப்புள் வாழ்ந்த வித்தியாசமான மொழி பேசிய ஒரே மூலத்தின் பல் கிளையான மக்களாகும். இங்கு கலப்பற்ற மொழி,இனக்குழு என்பவை கிடையாது. இவை பல்தன்மை வாய்ந்தவை. இவர்களைப் பிரிப்பதாயின் ஆசியர், மத்திய ஆசியர் என்று மட்டுமே புவியியல் அடிப்படையில் பிரித்துக் காட்ட முடியும்.


ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து குடி பெயர்ந்தவர்கள் என்ற கருத்தை கே.எம்.முன்சி, எஸ்.ஸ்றிஜன்டன் போன்ற வரலாற்று ஆய்வாரள்கள் மறுத்துள்ளனர்.

 இவர்கள் இந்தியாவுக்கு உரியவர்களாக நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்தும் பார்சியா போன்ற பகுதிகளிலும் இருந்தும் ஆரிய மொழி பேசிய மக்கள் ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் பெருந்த தொகையில் முன்னேறினர்.படை எடுத்தனர். ஆக்கரமித்தனர் என்ற கருத்துக்கள் ஆதாரமற்ற கற்பனைகளாகும்.

இவர்களை இந்தோ- ஐரோப்பியர் என்று கட்டமைப்பதற்கு மானுடவியல் சார்ந்த அல்லது வரலாற்றுத் தடயம்கள் கிடையாது.

1853 இல் மக்ஸ் முல்லர் ஆரியர் என்ற கருத்தமைப்புக்கு ஆதாரம் தேடினார். அக்காலம் மானுடவியல், மொழி,புதைபொருள் ஆய்வு என்பன பெருமளவு வளராத காலம் என்பதால் ஆதிக்கக் கருத்துக்கு சார்பான ஊகம்கள் வரலாறாக ஆயின.

மொழியியல் ரீதியில் இவர் ஆய்வுகளை நடத்தினார். ‘மனித மனம்களின் பழம் வரலாற்றுக் கட்டம்களை மொழியின் ஊடாகத் தேடினார். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு கதையுண்டு என்றும் எனக் கூறிய அவர் அதன் மாயத்தை உடைத்து பேசப் புறப்பட்டார்.ஆரிய மொழிகளில் புதைந்துள்ள ஆதிகால ஆரியர் வாழ்வின் புதையல்களை அவர் தேடினார். ஆரியர்கட்கு ஒரு மொழி, ஒரு கடவுள், ஒரு மதம் இருந்தது என்று நம்பிய அவர் ஆரியர்களை ,ஆரியர் – இந்தோ ஐரோப்பிய வெள்ளை ஆரியர்களிடமும் ஓடுவது ஒரே ஆரிய இரத்தமே எனக் கூறினார். அவர் மொழி சார்ந்த ஒற்றுமைகளை ஆரிய இனம்சார்ந்த பொதுப்பண்பு என்று தவறாக விளக்கினார். ஐரோப்பிய மொழிகளையும் ,சமஸ்கிருத மொழியையும் ஒப்புநோக்கிய அவர் இம் மொழிகள் தோற்ற ஏதுவான எகிப்திய, மாவோனிய, மங்கோலிய, செமிட்டிக், மற்றும் திராவிட மொழிகளையும் இணைத்து ஆராயவில்லை. ஆய்ந்திருந்தால் செமிட்டிக் எதிர்ப்பு மொழியாகக் காட்டப்பட்ட மொழிகளின் மூலம் செமிட்டிக் மொழியிடம் கடன்பட்டு பிறந்து வளர்ந்ததை அவர் கண்டிருப்பார். நாவலன் மக்ஸ்முல்லர் தனது இறுதிக்காலத்தில் ஆரிய இனம் இரத்தம் என்ற கருத்துக்களை கைவிட்டமையைக் குறித்திருக்கின்றார்.


ஆரிய மொழி, ஆரிய இனம்,ஆரிய வரலாறு என்பன ஜரோப்பிய நாடுகளில் தொழிளாளர் இயக்கம்கட்கு எதிராகவும் கொலனிக்கால கீழைத்தேச மக்கள் மேலான ஆக்கிரமிப்புக்காக வரலாற்று நியாயம் தேடும் கண்டு பிடிப்புக்களாகவுமிருந்தன . தாம் பிடித்து அடிமைப்படுத்திய செவ்விந்தியர், ஆசியா-ஆபிரிக்க, அவுஸ்திரேலிய பூர்வகுடிகளை அடிமை கொள்ள தாம் படைக்கப்பட்டதான கருத்தியல்களை அவர்கள் ஆக்கிக்கெண்டார்கள்.

ஆரிய கொள்கை, ஐரோப்பிய நாகரீகத்தை கிறீசில் இருந்தே தொடங்கினர். ஆனால் கிறீசின் பல பழைய தெய்வம்கள் பாபிலோனிய எகிப்திய மூலம்களை உடையனவாக இருந்தன.


ஐரோப்பியரை நாகரீகப்படுத்திய கிறிஸ்தவம் ஒரு செமிட்டிக் சிந்தனையே.

 ஆரியர் மனித உடற்கூறு அடிப்படையில் விளக்க முயற்சிக்கப்பட்டது மண்டை ஓட்டு அமைப்பு, மூக்கு, கண்,தோல் நிறம், தலைமுடி, முக அமைப்பு, உயரம் இவைகளின் வித்தியாசம்கள் தேடப்பட்டது. ஆரியர் என்ற கண்டுபிடிப்பு ஒரு பாசிச மானுடவியலாகும்.

மக்களின் கறுப்பு, மஞ்சள்,இளம் சிவப்பு, வெள்ளை என்ற நிறம்கள், உடற்தோற்றம் முழுவதுமாக புவியியல் அடிப்படை மற்றும் உணவுமுறைகள் சார்ந்த ஒன்றாகும். இவை தனியான உயர் அடையாளமோ, சிறப்போ கிடையாது. மனிதர்கள் ஒரு பொது மூதாதையரிடமிருந்து எம் மனிதகுலத்தின் ஆதித்தாய் நிலமான ஆபிரிக்காவில் இருந்து தோன்றியவர்கள் என்பதை நவீன மானுடவியல் சந்தேகமற நிரூபித்துவிட்டபோது ஆரியர்- திராவிடர் – மேன்மை பேசல்கள் அது சார்ந்த அரசியல் கற்பிதங்கள் மூடத்தனமானவையாகும். ஏகாதிபத்தியம்கள் உருவாக்கிய கருத்துக்கு அடிமைப்படுவதாகும்.


கி.பி.1583 முதல் 1588 வரை இந்தியாவில் கோவாவில் வாழ்ந்த ஃபிலிப்போ ஸஸட்டி என்பவரே முதலில் ஐரோப்பிய மொழிகட்கும் ,சமஸ்கிருதத்துக்கும் உள்ள மொழி சார்ந்த ஒற்றுமையைக் கண்டறிந்தார். இப்போக்குகள் வளர்ந்து 1786 இல் ‘வங்காள ஆரியச் சங்கம்’ பிரிட்டனால் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

கிறீஸ், லத்தீன் மொழிகளுடன் சமஸ்கிருதம் ஒப்புநோக்கி ஆராயப்பட்டது. நாவலன் குறிப்பிடும் மடம் புளுவட்ஸ்கி முன்பே ஆரியர் பிரச்னை பேசப்படத் தொடங்கிவிட்டது.

கெகல், றிச்சர்ட், வாக்னர், சோப்பன் கோவர், நீட்சே போன்ற ஒரு பெரும் வரிசையே ஜெர்மனியில் இதை ஆய்ந்து ஈடுபாடு காட்டியுள்ளது. 1831 இல் உக்ரேனில் பிறந்த மடம் புளுவட்ஸ்கி அமெரிக்கா, ஜெர்மனி,பிரிட்டனில் மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகட்கும் சென்றவர். அப்போ மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் துருக்கி சுல்தானுக்கு எதிரான விடுதலைக்கான கலவரம்கள் நடந்து வந்தன. ஜமால்-அல்-தின்-ஆஃ கானி ( Jamal-al-din-Afagani)என்ற இஸ்லாமிய அறிஞர் எல்லா இஸ்லாமிய நாட்கட்கும் பயணித்தார். துருக்கிய சுல்தானின் கீழ் சகல முஸ்லிம்களும் ஒன்றிணையவேண்டும் எனவும் மேற்கத்திய அறிவியல், தொழில்நுட்பம் இணைந்த இஸ்லாமை அவர் கனவு கண்டதுடன் துருக்கிய சுல்தான் ‘காலிஃப்பாக’ எல்லா முஸ்லிம்களையும் ஏற்க வைக்க முயன்றார். இவருக்கு பல நாடுகளில் மாணவர்களும் ஆதரவாளர்களும் இருந்தனர்.இவர் மேற்குலகக்கு எதிரான புனிதப் போரை முஸ்லிம்கள் தொடங்கவேண்டும் என்றார். இவரை மடம் புளுவட்ஸ்கி சந்தித்து அவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.


இக்காலம் மேற்குலக நாடுகள் துருக்கி சுல்தானுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் வாழ்ந்த அரபு நாடுகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தன.அவற்றைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றன. எனவே, மடம் புளுவட்ஸ்கி இன் ஜமால்-அல்-தின்-அஃகானியுடனான தொடர்பு சந்தேகத்துக்குரியதே.

அவரிடமிருந்து பார்சிய தத்துவப்போக்குகளை மடம் புளுவட்ஸ்கி கற்றார். இவர் ஆரியர் தத்துவத்தைப் பிரச்சாரம் செய்த போதும் பிற்கால ஆரியம் மடம் புளுவட்ஸ்கி போன்ற கிழக்கு ஐரோப்பிய ஸ்லாவிய மக்களையும் கீழ்நிலை மக்களாக ஆரியர்களின் புரதான வாழ்விடம்களில் ஊடுருவிய அந்நியர்களாகவே கருதியது. மடம் புளுவட்ஸ்கி யின் செல்வாக்கால் கிட்லர் பாதிக்கப்பட்டதாக நாவலன் எழுதியிருக்கின்றார். ஆனால், கிட்லர் நேரடியாக கென்றி போட் (Henry Ford ) எழுதிய "Der Internationale Jude " நூலை வாசித்து இருந்தான் என்பதுடன்  Joseph Arthur de Gobineau (1816-1882), Houston steward chamberlain (1855-1927) போன்ற ஆரியக் கருத்தாளர்களால் ஈர்க்கப்பட்டு இருந்தான் என்பதுடன் Madison grant (1865-1937), Theodore lothrop Stoddard (1883-1950) போன்றவர்களின் கருத்துக்களால் தான் கிட்லர்  உருவானான்.

ஒருவேளை மடம் புளுவட்ஸ்கி யை அவன் கற்றிருக்கக்கூடும். ஆனால் , ஆதாரமில்லை.ஆனால் ,அமெரிக்காவில் உருவான ஆரியச் சிந்தனைகளால் கிட்லர் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தான்.அமெரிக்க ஆரியச் சிந்தனையானது செவ்விந்தியர், சீனர்கள், கறுப்பினமக்கள், ஜெர்மனியர், ஐரிஸ்,போலந்து, யூதர்கள், இத்தாலியர், ஸ்பானியர்,ரஸ்யர்.போத்துக்கேயர். என்று பல இன மக்கள் குடியேறிக் கொண்டிருந்த காலமிது. வெள்ளையின மக்கள் கொண்ட அமெரிக்காவைக் காப்பது பற்றிய சித்தாந்தம்கள் அப்போது எழுப்பப்பட்டன.

‘"The rising tide of color against white world- supremacy " என்ற நூலை 1920 இல் Madison Grant எழுதினார். இதே போல் வெள்ளை இனத்தை உயர் இனமாய்க் காட்டும் கருத்துக்களை Theodore Lothrop Stoddard வெளியிட்டார். இவரின் "Unterrman ‘கீழ் நிலை மனிதன் தான் கிட்லரிடம் ; "Untermensch"என்பதாக மாறியது.[Die Nürnberger Rassegesetze von 1935 legten fest, wer als Jude oder „Mischling“ galt und wer „Arier“ war. Aber auch andere „Fremdrassige“ wie „Slawen“, „Schwarze“ oder „Zigeuner“, ferner als „minderwertig“ geltende Minderheiten der deutschen Mehrheitsbevölkerung wie „deutschblütige“ „Asoziale“ wurden als „Untermenschen“ angesehen, wurden verfolgt und waren von „Ausmerzung“ bedroht./In dem ihrer Verwendung des Begriffs am nächsten kommenden Sinne hatten die Nationalsozialisten den Terminus „Untermensch“ vom Titel der deutschen Übersetzung des 1922 erschienen Buches The Revolt against Civilization: The Menace of the Under Man (dt.: Der Kulturumsturz – Die Bedrohung durch den Untermenschen 1925) des amerikanischen Anthropologen, Rassentheoretikers und Eugenikers Lothrop Stoddard übernommen. Da selbst die meisten englischsprachigen Historiker nicht wissen, dass das Wort ursprünglich von einem Amerikaner stammt, wird der Begriff zumeist anders ins Englische rückübersetzt, als „sub-human“ beziehungsweise „subhuman“. Es mag dafür normale sprachliche Gründe geben, dies ist zur Zeit unklar. Ein führender Nationalsozialist, der Stoddard als Schöpfer der Formel vom slawischen „Untermenschen“ identifiziert, ist Alfred Rosenberg, der in seinem Buch Der Mythus des 20. Jahrhunderts (1930) schreibt, dass der typische russische Bolschewist ein Vertreter jener Art von Mensch sei, „den Lothrop Stoddard als ‚Untermenschen‘ bezeichnete.“ ] இவன் இதை யூதர்,ஸ்லாவியர் ஆகியோருக்கு எதிராய் மாற்றினான்.ஆரியவெள்ளைமனிதர்களை உயர்ந்தவர்களாக வகுத்தான்


ஐரோப்பாவில் ஆரியர் இனப்பெருமைக்கு எதிராக’ஸ்லாவியர்’ இனப்பெருமைகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எழுந்தது. ஸ்லாவிய மக்களை ஒன்றிணைத்த பரந்த குடியரசு பற்றியும் பேசப்பட்டது. யூகோஸ்லாவியாவின் டிட்டோ மற்றும் டிமிட்ரோவ் ஆகியோர் கூட ஸ்லாவியர்களின் பரந்தசோசலிச குடியரசை நிறுவுவது பற்றிய கருத்துக்களைக் கொண்டிருந்தனர். சியோனிச இயக்கம்கள் ஆரிய மற்றும் கிறீஸ்தவ ஒடுக்குமுறைகட்கு எதிராக எழுந்ததாய்த் தோன்றினாலும் அவை மேற்கத்திய நாடுகளின் அரபு மக்கள் மேலான ஆதிக்கத்தை ஆதரித்தன.இவை யாவும் கொலனித்துவ அரசியலுக்கு தோதாகவும் ஐரோப்பாவில் அன்று வளர்ச்சி பெற்று வந்த தொழிலாள வர்க்க இயக்கம்கள் அது சார்ந்த ஒன்றிணைந்த மக்களின் அரசியல் போராட்டம்கட்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டன. லூயி ஹென்றி மார்க்கன், ‘திராவிட உறவுமுறை’ என்ற மானுடவியல் ஆய்வைத் தொடங்கிய பின்பே திராவிடர் தனித்துவமானவர்கள்,ஆரியர்கள் திராவிட நாகரீகத்தை அழித்தனர்.ஆரியர் வந்தேறு குடிகள் என்ற கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படத் தொடங்கின.

பல ஆயிரம் வருடம் முன்பு மனித வளர்ச்சி கட்டத்தின் ஒரு பொழுதில் நிலவிய மொழி ஒற்றுமைகளை வரலாற்றின் வேறொரு கட்டத்தில் பலவந்தமாகக் கொண்டு வந்து திணிக்கப்பட்டது. மேற்கத்தைய அரசியல் இலக்குகளை நிறைவேற்ற இந்தியாவின் சகோதர மக்களிடையே பகையும் முரண்பாடுகளும் இத்தகைய வடிவம்களில் பிரிட்டனால் உருவாக்கப்பட்டது.

 அந்நிய ஆக்கிரமிப்பாளரை விட்டு ஒரு தேச மக்கள் தம்மிடையே ஆரியர், திராவிடர், முஸ்லிம் என்று கட்சி கட்டி நின்றனர். பிரிட்டிஸ் அரசியல் தந்திரம்கள் பிரித்தாளும் யுக்திகள் மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டன. உதாரணமாக பிரிட்டிஸ் ஆட்சியில் அயோத்தியில் இந்து,முஸ்லிம்கள் கூட்டாக வெள்ளையரை எதிர்த்தனர். வெள்ளையர்கள் இங்கு சாதாரணமாகக் நடமாடக்கூட முடியாத நிலை இருந்தது. இச்சமயம் இந்து, முஸ்லிம் ஒற்றுமையைச் சிதைக்க 1833இல் மான்ட் கோமரி மாட்டின் என்ற ஆங்கிலேயர் இராமர் கோவிலை இடித்தே பாபர் மசூதி கட்டப்பட்டதாக ஒரு கட்டுக்கதையைக் கிளப்பிவிட்டார். ஆனால் இது உடனடியாகப் பெரும் பயன்தரவில்லை.


1857-1858 சிப்பாய் கலகத்தில் இந்துக்கள் முஸ்லிம்கள் கூட்டாக வெள்ளையரை எதிர்த்துப் போராடினர். இதைக் கண்ட பின்னர் 1860 இல் கார்னகி என்ற பிரிட்டிஸ்காறன் பாபர் கதையை வரலாறாக எழுதினான். பாபர் இராமர் கோயிலை இடித்தே மசூதியைக் கட்டிய கதை இதன் மூலம் வரலாறாக ஆக்கப்பட்டு இன்று வரை இந்து,முஸ்லிம் மோதலுக்கு வழியமைக்கப்பட்டது. அயோத்தி, ராமஜென்ம பூமியானது இது தனியே பிஜேபி போன்ற மேற்குலக ஆதரவுக்கட்சிகளின் செயற்பாடு மட்டுமல்ல.

இந்திய மக்களின் அரசியல், சமூக உணர்வுகள் வளர்ச்சியடையாத நிலையின் வெளிப்பாடுமாகும்.

 இந்தியா விடுதலை பெற்றுவிட்டதாகக் கூறப்பட்ட பொழுதிலும் பிரிட்டிஸ் கிட்டத்தட்ட 200 வருடம் முன்பு உருவாக்கிய வரலாறு சார்ந்த வதந்தியொன்றை ஆதாரமாய்க் கொண்டு இந்தியாவுள் இன்றும் இந்து – முஸ்லிம் சச்சரவுகள் தொடர்கின்றன.

பௌத்த,சமயக் கோவில்களை இடித்து இலட்சக்கணக்கான பௌத்த மதத் துறவிகளைக் கொன்றே பிராமணிய மதம் எழுந்ததையோ, ஐரோப்பியர் இடித்த இந்துக்கோவில்களையோ அந்தக் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கிறீஸ்தவ தேவாலயம்கள் பற்றியோ மக்கள் அறியாதபடி விடப்பட்டுள்ளனர்.

 பெரியார்,இந்திய சுதந்திர நாளைத்  துக்கநாள் என்று கூறினார் என்றால் விட்டுப் போகும் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழான நாட்கள் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் என்று தானே அர்த்தம்?

காந்தி,அம்பேத்கார்,ஜின்னா, அயோத்திதாசப் பண்டிதர்,பூலே போன்றவர்கள் பிரிட்டிஸ் ஆட்சியில் இந்திய அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டமையின் மூலம் சோசலிச இயக்கம்கள் எழாமல் தடுக்கப்பட்டது.

 இவை பிரிட்டிசாரின் இராஜதந்திரத் திறனுக்கு சாட்சியம்களாகும்.

புகலிட நாடுகளில் குடியேறியுள்ள தமிழர்கள் இன்று வரை ஆரியர், திராவிடர் பற்றிப் பேச  காசு கட்டி மண்டபம் எடுத்து கூட்டம் கூடுகின்றார்கள் என்றால் ஏகாதிபத்தியம்கள் விதைத்துவிட்டுப் போன வரலாற்றுப் பொய்களை ஊகம்களைவிட்டு நீங்கி வெளிவரும் அரசியல் திறன் படைத்திராத பின் தங்கிய மக்களாக இவர்கள் உள்ளனர் என்றே பொருளாகும்.

தொடரும்...

தமிழரசன் ,
பேர்ளின்.





Keine Kommentare: