Sonntag, März 24, 2013

தற்கொலையே தர்மம்!

"நான்"
அழிவேன்-எப்போது-எங்கே?

ன் திருவே!
என்னைக் குலைத்தெறி!
துகளாக்கு-மண்டையைச் சிதறடி.
பக்கங்களாக நான் குவிக்கும்
உணர்வுக்குள் மனிதம் கொலையாகி
புதை குழிக்கு மண் அகழும் "நான்" தொல்லை!

என் திருவே,
குழந்தையாய் இருப்பதுதாம் நீ.
நான் கூன் வீழுந்த துர்க் கனவின் தொடராய்
என்னைப் பாட வை
ஒரு மழலையின் புன் சிரிப்பாய்.

உன்னைக் குறித்து
என்னை அழைக்க வை
"நாங்கள்தாம் நீ" என்று ஓங்கி உரைக்க விடு!





மௌனித்துக்கிடக்கும் என் இதழ் விரித்து
"ஏய்,நீ என்னை நடாற்றில் தவிக்க வைத்து
ஆபத்தின் வீரியமாய் விரிவதில்
என்ன புதுமையை கண்டாய்?" என்று கூவ விடு!

என் ஆரோக்கியத்தின் நிழலில்
கலைத்துப் போடப்பட்ட என் விந்துகளின் வீரியத்தில்
தொடர்ந்து உயிர்த்திருப்பதில்
உன்னை எங்கே விழுங்கி
எங்கே சேர்த்து?
நிரந்தரமானவன் நான்!

தோல்விக்குப் பெயர்
தீருவென்றழைத்தே தேடுதலை
குறைத்துக் கொண்டேன்.
காலைக்குப் பின் மதியம்
என்னை அச்சப்படுத்தி மீளவும்
அதிகாலையாய்த் தேற்றிய போது
நானே நிரந்தரமானேன்-எனக்குத்தாம் திருவென்ற
உன் நிலைப்பும்-நீதியுமென
உருமறுத்துக்கொண்டு அலைவேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்

24.03.2013

Donnerstag, März 07, 2013

அம்புக்குறியாய் நீ

ருவேறு குகைகளுக்குள் இடறிவிழும்
சில நடை பிணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக் கொட்டுகின்றன
இதற்காகப் பல வர்ணக் கோலங்களுடன்-கேடயங்களும்
கணையாழிக் கேடிகளுமாய் க் காலம் விலக

காலத்தைப் பறிகொடுத்த நரிகளுக்கு
விடிவதும்,இருட்படுவதும்
அடுத்தவர் முற்றத்தில் மட்டுமே
தங்கள் தெருக்களுக்குள் புழுத்து நெளியும்
சாக்கடையுள் விழி வீழாப் பக்குவம்!


இந்த இடருக்குள்
தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
விழிகள் முன் நிறுத்துகிறான் குருதி நிறைத்த காகிதத்துள்





கட்சிகளது கொண்டையைப் பிடிப்பவர்களோ
அதன் கொள்கைச் சாக்குள் கேடயத்தோடு
திணிக்கப்படும் தம்பிகளது முகத்தையும்
கூட்டிப் பெருக்க வக்கற்றுக் குப்புறக் கிடந்துவிட்ட
கூனற் பொழுதும் விடிந்ததோ?-இப்போது??

பூனைப் பாச்சலுள் எட்டபட்ட
இந்தப் பிரபஞ்சம் எழுதித் தந்த சீதனமோ
கேடயம்,பரிசு,பொன்னாடை,குருதி
மக்களைச் சொல்லிச் சொருகப்படும் கத்தி
யார் முதுகைப் பதம் பார்க்கும்?


அம்புக்குறியாய் நீ
நீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள்
உலகத்தின் முடிவு நெருங்கி விடும்


சுடலையின் சுவர்கள்
பூனையைக் குற்றக் கூண்டில் ஏத்துகிறது
நிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி.


ப.வி.ஸ்ரீரங்கன்
07.03.2013


============================================
நீங்களெல்லாம் பிழைக்கத் தெரிந்த பஞ்சோந்திகள்!
============================================

எச்.பீர் முஹம்மது:

//புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்றைய இலங்கை விவகாரம் குறித்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நண்பர் ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் குறிப்பிட்ட ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. அதாவது இந்தியா தான் எங்கள் கலாசார நாடு. இந்தியா தான் எங்கள் இரண்டாம் தாய் நாடு. ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியாவே நேரடியாக தலையிட்டு ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். உலக வரலாற்றில் தேசிய இனப்போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் அண்டைய பெரும்/ வல்லரசு நாடுகள் தலையிட்டு தீர்வு காணும் நடைமுறை இருந்தது. பாலஸ்தீன் விவகாரத்தில் அறுபதுகளில் எகிப்து பெரும் பங்கை வகித்ததை இதனோடு நாம் ஒப்பிட முடியும். ஆனால் துரதிஷ்டம் இந்தியாவே இலங்கையோடு சேர்ந்து எல்லாவற்றையும் காலி செய்திருக்கிறது... இந்தியாவின் வெளியுறவு கொள்கை மாறுவதற்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியதிருக்கிறது. அதற்கான அழுத்தம் இங்கிருந்து தான் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இரு பெரும் கழகங்களும் தங்கள் ஈகோவை சமன் செய்து கொள்வதிலும், வரலாற்று தவறுகளையும், துரோகங்களையும் மறைப்பதில் தீவிரமாக போராடிக்கொண்டிருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் இதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதிலும் பலத்தப்போட்டி நிலவுகிறது... இப்படியே செல்லும்பட்சத்தில் ஈழ விவகாரம் இந்த நூற்றாண்டிலும் தீர்க்கப்படாது என்றே தெரிகிறது.//